Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சூபிய்யாக்களை எதிர்ப்பதன் பிரதான காரணம் பொறாமையே!

சூபிய்யாக்களை எதிர்ப்பதன் பிரதான காரணம் பொறாமையே!

يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازدادُوا علما إلى علمهم

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

(வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும். எதிர்க்கும் அந்த வீணர்கள் பொறாமையைத் தூக்கி எறிந்து விட்டு “அஹ்லுல்லாஹ்” அல்லாஹ் உடையவர்கள் என்றழைக்கப்படும் ஸூபிகளின் வழியில் நடப்பார்களானால் பொறாமை, எதிர்ப்பு என்பன அவர்களால் உருவாக மாட்டாது. அதோடு தமது அறிவோடு மேலதிக அறிவையும் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.)

வீணர்களான எதிரிகள் என்று ஷெய்குல் அக்பர் அவர்கள் குறிப்பிட்டது அர்த்தமில்லாமலும், பொருத்தமில்லாமலும், ஆதாரங்கள் இல்லாமலும் ஸூபி மகான்களின் தத்துவங்களை எதிர்ப்பவர்களையே குறிக்கும். இத்தகையோர் அக்காலம் முதல் இக்காலம் வரை ஸூபி மகான்களின் இறை தத்துவங்களை எதிர்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்களின் இவ் எதிர்ப்புக்குப் பிரதான காரணம் ஸூபி மகான்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமைதான் என்று ஷெய்குல் அக்பர் திட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

من الأعداء المبطلين வீணர்களான எதிரிகள் என்போர் அறவே படிக்காத, “அலிப், ஆனா” ஒன்றும் தெரியாதவர்களைக் குறிக்காது. ஏனெனில் இவ்வாறானவர்கள் ஸூபிகளின் இறை ஞானத்தை மறுத்துரைக்க முன் வர மாட்டார்கள். நாம் இன்று இறை ஞானத்தையும், ஸூபிஸ தத்துவத்தையும் எதிர்ப்பவர்களைப் பார்க்கின்றோம். அவர்கள் ஒன்றும் கற்றுக் கொள்ளாதவர்களல்லர். மாறாக படித்தவர்கள், உலமாஉகள், புகஹாஉகள், மார்க்கப் பிரசங்கிகள், ஷெய்குமார்கள், கந்தூரி கொடுக்கும் பரம்பரைக் குருக்கள் , தரீக்கஹ் களின் கலீபஹ்கள் , முகத்தமீன்கள்.

இவர்களின் எதிர்ப்புக்குப் பிரதான காரணம் ஸூபிகள் மீது அவர்களுக்குள்ள பொறாமையேயாகும்.

பொறாமைக்கான காரணம் என்னவென்று நாம் ஆய்வு செய்தால் அதன் மூலம் சில காரணங்கள் விளங்குகின்றன. அவற்றில் இரண்டை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.

ஒன்று – இறை ஞானம் பேசுகின்ற ஸூபிகளுக்கு , மற்றவர்களுக்குக் கிடைக்காத மதிப்பும், அந்தஸ்த்தும், கவனிப்பும் பொது மக்களிடம் கிடைப்பதாகும்.

ஒரு ஸூபீ அல்லது ஸூபிய்யான ஒரு ஷெய்கு – ஞான குரு – ஒரு வீட்டுக்கு அழைக்கப்பட்டால் அந்த வீட்டவர்கள் அவரை தம்மாலான வகையில் கௌரவிக்கின்றார்கள். வெள்ளைத் துணி விரித்தும், மாலை சூடியும், அத்தர் பூசியும், பன்னீர் தெளித்தும், பாடல்கள் பாடியும் வரவேற்கின்றார்கள். இந் நிகழ்வுகளை நேரில் பார்க்கின்ற, அல்லது கேள்விப்படுகின்ற ஸூபீகளல்லாத ஷெய்குமார்களில் சிலருக்கும், ஏனைய உலமாஉகளில் பலருக்கும் பொறாமை எங்கிருந்தாலும் அவர்களை வந்தடைகின்றது. இது ஒரு காரணம்.

இவ்வாறு பொறாமை ஏற்படுவது “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் கற்று அதன் வழியில் செல்லாதவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் ஸூபிஸ ஞானம் கற்று அவ்வழியிற் செல்வோர் தமது பொறாமையை வென்று அதைத் தமக்கு அடிமையாக்கிக் கொள்வார்கள்.

இரண்டு – ஸூபிஸ ஞானிகளின் பேச்சு எப்போதும் அல்லாஹ்வுடன் சம்பந்தப் பட்டதாகவும், தத்துவம் நிறைந்ததாகவுமே இருக்கும். இவ்வாறான பேச்சு பொது மக்களைக் கவரக் கூடியதாகவும் அவர்களுக்கு அந்த ஸூபிஸ ஞானியின் மீது “மஹப்பத்” – அன்பை – ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதனால் பொது மக்கள் அவரின் கை கால்களை முத்தமிடுவதிலும், அவருக்கு அன்பளிப்புக்கள் வழங்குவதிலும் மிக்க ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு அருள் பெற முயற்சிப்பார்கள். ஸூபிகள் அல்லாதவர்களுக்கு அவர்கள் போல் இறை ஞானம் தத்துவம் பேசத் தெரியாது.

இந்நிகழ்வுகளை நேரில் பார்க்கின்ற , அல்லது கேள்விப் படுகின்ற ஏனைய உலமாஉகளில் பலருக்கும், ஷெய்குமார்களிற் சிலருக்கும் பொறாமை எங்கிருந்தாலும் வந்து விடுகின்றது. இது இன்னுமொரு காரணம்.

இவற்றை ஆய்வு செய்த “ஷெய்குல் அக்பர்” அவர்கள் ஸூபீகளை மற்றவர்கள் எதிர்ப்பதற்கு பொறாமைதான் பிரதான காரணமென்று கூறியுள்ளார்கள்.

எனவே, கற்றறிந்த உலமாஉகளும், “பைஅத்” வழங்கிக் கொண்டிருக்கின்ற ஷெய்குமார்களும், தரீக்கஹ்களின் கலீபஹ்களும், “புகஹாஉ” என்ற சட்ட மேதைகளும் ஸூபிஸ ஞானத்தை விளங்கிக் கொள்ள விரும்பினால் பாம்பு அதன் சட்டையைக் கழட்டி விடுவது போல் தம்மை விடாப் பிடியாகப் பிடித்துள்ள பொறாமையை முற்றாகக் கழட்டி விட வேண்டும்.

ஒரு காலத்தில் காயல் பட்டணத்தில் ஒரு ஹஸ்றத் இருந்தார். அவர் ஸூபிஸ ஞானத்திற்கு எதிராக செயல் பட்டு வந்தார். ஒரு நாள் அந்த ஊருக்கு “ஸூபீ ஹுஸைன்” என்ற பெயருள்ள ஒரு ஸூபிஸ ஞானி வந்தார். அவர் ஒரு மகான் என்று நம்பின அவ்வூர் மக்கள் பைத்துக்கள் – அறபுக் கவிகள் – பாடி தெருத் தெருவாக அவரை அழைத்துச் சென்று கௌரவித்தார்கள்.

குறித்த ஹஸ்றத் ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்த அறபுக் கல்லூரியுள்ள பாதையாலும் அவர் அழைத்து வரப்பட்டார். அது ஹஸ்றத் அவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். அவரின் காதில் (ஸூபீ ஹூஸைன் ஸூபீ ஹுஸைன் வாருங்களே தங்கமே நீங்களின்றேல் எங்களூர் பங்கமே) என்ற பாடல் சத்தம் கேட்டது. பொறாமையைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த ஹஸ்றத் அந்த மகானை நையாண்டி பண்ணும் வகையில் (சூப்பி ஹூஸைன் சூப்பி ஹூஸைன்) என்று ஒரு “ப்” என்ற எழுத்தையும் சேர்த்து “ஸூ” என்ற எழுத்துக்குப் பதிலாக “சூ” என்ற எழுத்தின் சத்தம் தொணிக்கும் வகையில் நையாண்டி செய்தார். பாடம் முடிந்து வீட்டுக்குச் சென்ற “ஹஸ்றத்” வழமை போல் தனது முகத்தை கண்ணாடியில் பார்த்தார். அவ்வளவுதான். மயங்கித் தரையில் விழுந்தார் அவர். தலை வெடித்துக் குருதி பாய்நதது. குடும்பத்தார் அழுதனர். அழுகைக் குரல் கேட்டவர்கள் ஒன்று கூடினர். “ஹஸ்றத்” அவர்கள் (என்னை மகான் ஸூபீ ஹூஸைன் அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள்) என்று கத்தினார். காரணம் புரியாமல் வியப்படைந்து நின்ற கூட்டத்திடம் அவரிடம் அன்று கல்வி கற்ற மாணவர்கள் (இவர் மகான் ஸூபீ ஹூஸைன் அவர்களை சூப்பி ஹூஸைன் சூப்பி ஹூஸைன்) என்று நையாண்டி செய்த சம்பவத்தைக் கூறினார்கள்.

இறுதியில் மகானிடம் அவர் தூக்கிச் செல்லப்பட்டு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களிடம் “பைஅத்” செய்து அவர்களின் “முரீது” – சிஷ;யனாகிவிட்டார்.

கூடி நின்றவர்கள் நடந்தது என்ன? என்று ஹஸ்றத் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர் (என்னைப் பார்ப்பதற்காகக் கண்ணாடியைப் பார்த்தேன். நான் மகானைத்தான் அதில் கண்டேன். என்னைக் காணவில்லை என்று கண்ணீர் வடித்தவராகக் கூறினார்.)

இருளை ஒளியாக்கினார் வலிய்யுல்லாஹ் ஸூபீ ஹூஸைன் றழியல்லாஹு அன்ஹு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments