Thursday, April 25, 2024
Homeஎழுத்தாக்கங்கள்யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ

உலகம் என்றாவது ஒரு நாள் அழியும். அதற்கு முன் பல அடையாளங்கள் தோன்றும்.

உலகம் அழியுமுன் தோன்றக்கூடிய அடையாளங்கள் சுமார் ஐநூறுக்கும் அதிகமானவை உள்ளன. அண்ணலெம்பிரான் அஹ்மதெங்கள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவற்றைத் தெளிவாகச் சொல்லி விட்டே மறைந்துள்ளார்கள். அவர்கள் கூறிய அடையாளங்கள் நபீ தோழர்கள் மூலம் அவர்களை நேரில் கண்டவர்களான “தாபிஈன்”களுக்கு கிடைத்தன. அவர்களிடமிருந்து அவர்களை நேரில் கண்ட “தபஉத் தாபிஈன்”களுக்கு கிடைத்தன. அவை அதன் பின்னர் தோன்றிய இஸ்லாமிய அறிஞர்கள், ஹதீதுக் கலை மேதைகள், ஆய்வாளர்களுக்கு கிடைத்தன.

அவர்கள் அவற்றை, அவை தொடராக வந்த வழிவாறு விபரங்களுடன் اَشْرَاطُ السَّاعَةِ உலக முடிவின் அடையாளங்கள் என்ற தலைப்பில் பல நூல்கள் எழுதி இஸ்லாமிய மக்களின் நலன் கருதி வெளியிட்டுள்ளார்கள். அவற்றில் பதிவான நபீ மொழிகளில் பிரதான நபீ மொழிகளை இன்றும், இனித் தொடர்ந்து வரும் நாட்களில் எனக்கு வசதியான நாட்களிலும் பதிவு செய்ய நாடியுள்ளேன். நான் எழுதவுள்ள விடயங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பதிவிடவும் நினைத்துள்ளேன்.

எனவே, இஸ்லாமியர்களும், ஏனைய மதத்தவர்களும் வாசித்து பயன் பெறவேண்டுமென்று விரும்பி எனக்குள்ள அன்புத் தொல்லைகள், அம்பு தொல்லைகளுக்கு மத்தியில் இதைப் பதிவு செய்கிறேன். பார்த்துப் பயன் பெறுமாறும், எனது நல்வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறும் அனைவரையும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

உலக அழிவுக்கு முன் தோன்றக் கூடிய அதற்கான அடையாளங்களை அண்ணலெம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் முன் கூட்டி சொன்னதற்கான காரணம் அல்லாஹ்வின் அடியார்கள் அதற்காகத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். யானை வருமுன் மணியோசை கேட்டால் தற்பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்து கொள்ளலாமல்லவா? ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நீண்ட பாடலின் ஓர் அடியை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

قال علّي رضي الله عنه: لَا تَرْحَلَنَّ بِلَا عُدَّةٍ – فَإِنَّ الطَّرِيْقَ مَخُوْفٌ مَخُوْفٌ.
மறுமைக்கான பாதை பயங்கரமானதாகும். ஆகையால் அதற்கான ஆயித்தமின்றிப் பயணிக்க வேண்டாம்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”الْقَبْرُ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْآخِرَةِ”
“கப்று – மண்ணறை என்பது மறுமையைப் போய் சேர்வதற்கான தரிப்பு நிலையங்களில் முதல் நிலையமாகும்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளிச் சென்றார்கள்.


எனவே, அடியார்கள் மறுமைப் பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டுமென்பதற்காகவே மறுமைக்கான அடையாளங்களை மன்னர் நபீ பெருமான் முன் கூட்டியே சொன்னார்கள்.


அவ் அடையாளங்கள் இருவகைப்படும். ஒருவகை சிறிய அடையாளங்கள். மற்றது பெரிய அடையாளங்கள். சிறிய அடையாளங்களிற் சில வெளியாகிவிட்டன. இன்னும் பல வெளியாக உள்ளன. குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்களில் ஒன்றும் இதுவரை வெளியாகவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் சிறிய, பெரிய அடையாளங்களிற் சிலதைப் பதிவு செய்திருந்தேன். பலர் அவற்றை அறிந்திருப்பார்கள். அறியாதவர்கள் அவற்றைத் தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

يقول المُوَفَّق ابو محمد المُقَدسِيُّ رحمه الله ‘ويجب الايْمَانُ بِكُلِّ مَا اَخْبَرَ بِهِ رَسُولُ الله صَلَّى الله عليه وَسَلَّم وَصَحَّ به النَّقْلُ عنه فيما شَهِدناه أو غاَبَ عَنَّا، نعلمُ انَّه حَقٌّ وصِدقٌ،وسَواءٌ في ذٰ لك ما عَقَلناه وجَهِلناه ولَم نطلع على حقيقة معناه،مِثْلَ حديث الإسراء والمعراج،ومن ذلك أشراطُ السّاعةِ مثل: خُروجِ الدّجَّالِ، ونُزُولِ عِيسى بن مريم عليه السّلام وقَتْلِه له، وخُروجِ يَأْجُوجَ ومَأْجُوجَ، وخُروجِ الدّابّة، وطُلُوع الشمسِ من مَغْرِبها، وأشباهِ ذلك ممّا صحّ به النّقلُ”

அல் முவப்பக் அபூ முஹம்மத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.


“பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக நம்பத் தகுந்த ஆதாரங்களுடனான செய்திகளை நம்புவது கடமையாகும். நாம் அவ்வாதாரங்களைப் பார்த்திருந்தாலும், பார்க்காமலிருந்தாலும் சரியே! அவை உண்மையானவையாக இருப்பின் அவற்றை நம்பத்தான் வேண்டும். அவ்விடயங்கள் நமக்கு விளங்கினாலும், விளங்காவிட்டாலும் சரியே! நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “மிஃறாஜ்” சென்ற வரலாறையும், “இஸ்றா” விண்ணுலக யாத்திரை சென்ற வரலாறையும் போன்று. இவ்விரு வரலாறுகளின் எதார்த்தம் எமக்குப் புரியாது போனாலும் இவ்விரு வரலாறுகளும் தெளிவான ஆதாரங்கள் மூலம் நிறுவப் பட்டவையாக இருப்பதால் இவற்றை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.


இவ்வாறுதான் மறுமை நாளின் அடையாளங்கள் தொடர்பாக அண்ணலெம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக “தஜ்ஜால்” என்பவனின் வருகை, நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்குதல், அவர்கள் “தஜ்ஜால்” என்பவனைக் கொலை செய்தல், “யஃஜூஜ் – மஃஜூஜ்” கூட்டம் வெளியாதல், சூரியன் மேற்குத் திசையில் உதித்தல், ஒரு மிருகம் வெளியாதல் போன்று.

இவ் அடையாளங்கள் இது வரை வெளிவராத பெரிய அடையாளங்களாகும். இவை நடக்குமா? நடக்காதா? என்று சந்தேகம் கொள்வது “குப்ர்” என்ற இறை நிராகரிப்பை ஏற்படுத்தி விடும். ஏனெனில் இவை நடக்குமென்று சொன்னவர்கள் எம்பெருமான் அவர்களேயாவார்கள். அவர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் நம்புவது நமது கடமையாகும்.


وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى، إِنْ هُوَ إِلا وَحْيٌ يُوحَى.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் மனவாசைப் படி – தங்களின் சுயவிருப்பத்தின் படி எதுவும் பேசமாட்டார்கள். அவர்கள் பேசினால் அது “வஹீ” இறையறிவிப்பாகவே இருக்கும்.
திருக்குர்ஆன் – நஜ்ம் அத்தியாயம் வசனம்: 03 – 04

அல் முவப்பக் அபூ முஹம்மத் அல் முகத்தஸீ என்பவர் யார்?
இவர் டமஸ்கஸ் – சிரியா நாட்டைச் சேர்ந்த, ஹம்பலீ மத்ஹபின் பிரசித்தி பெற்ற சட்ட மேதையாவார். பல் நூல்கள் எழுதிய மேதை. அவற்றில் அல் முக்னீ. அல்காபீ, அல் முகன்னஉ என்பன மிகப் பிரபல்யமானவையாகும். ஹிஜ்ரீ 620ல் “வபாத்” ஆனார்கள். றஹிமஹுல்லாஹ்.
ஆதாரம் – ஸைறு அஃலாமின் நுபலாயி. 22 – 165

தொடரும்……

கொரோனா வைரஸ் உலக முடிவிற்கான அடையாளங்களில் சிறியதாகும். இது ஒரு மணியோசைதான். யானை பின்னால்தான் வரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments