Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக...

ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.

– மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA(Hons) – 

(தொடர் -01)

ஸூபித்துவத்துவத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஒற்றுமைக்கான அடிப்படையும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன்,அஸ் ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்ற ஏனைய இஸ்லாமிய கலைகள் போன்று இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களின் அடிப்படையில் உருவாகியதே தஸவ்வுப் – ஸூபித்துவம் எனும் கலையாகும்.
சிலர் தஸவ்வுப் – ஸூபித்துவம் என்பது ஒரு இஸ்லாமியக் கலை என்பதை ஏற்க மறுக்கின்றனர். இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க தத்துவம் பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு கலைதான் ஸூபித்துவம் எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறாகும்.

‘தஸவ்வுப்’ – ஸூபித்துவம் என்ற கலைக்கான அடிப்படைகள் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்திலேயே காணப்பட்டன.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது சமூகத்திற்கு ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஙலாம்) அவர்கள் ஒரு மனிதரின் உருவில் வந்து, தீன் – மார்க்கம் பற்றிய மூன்று வினாக்களைக் கேட்க, அதற்கு நபியவர்கள் பதில் பகர்கின்றார்கள். முதலில் இஸ்லாம் பற்றியும், இரண்டாவது ஈமான் என்றால் என்ன என்பது பற்றியும் வினவ நபியவர்கள் அது பற்றி விளக்குகிறார்கள். மூன்றாவதாக இஹ்ஸான் என்றால் என்ன என கேட்க, ‘நீர் இறைவனைக் காண்பது போன்று அவனை வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்க்கின்றான்’ என்று குறிப்பிட்டார்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் ஈமானின் அடிப்படையில் அகீதாவும், இஸ்லாமியக் கிரியைகளின் அடிப்படையில் ஷரீஆவும் இஹ்ஸானின் அடிப்படையில் தஸவ்வுப் கலையும் இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய பிரிவுகளாக வளர்ச்சியடைந்தன.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், பிக்ஹ், தப்ஸீர் போன்ற கலைகளுக்கான அடிப்படைகள் அனைத்தும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலப்பிரிவில் காணப்பட்டது போன்று பிற்காலத்தில் ஒரு தனிப்பட்ட பிரிவாக வளர்ச்சியடைந்த தஸவ்வுபின் அடிப்படைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலப்பிரிவில் காணப்பட்டன.

இஸ்லாமிய வணக்கங்கள், கிரியைகள் அனைத்தும் இரண்டும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. ஒன்று மனிதனின் புற உறுப்புக்களோடு தொடர்புடைய புலன்களுக்குப் புலப்படும் வகையில் புரியப்படும் புறக்கிரியைகள். மற்றது உள்ளத்தோடும் ஆத்மாவோடும் தொடர்புடைய புலன்களுக்குப் புலப்படாத அகக் கிரியைகள் ஆகிய இரண்டுமே இந்த அம்சங்களாகும். அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இஸ்லாமிய வணக்கங்கள், கிரியைகள் அனைத்தையும் பொறுத்தவரை இந்த இரண்டு அம்சங்கள் பற்றியும் பேசுகின்றன. உதாரணமாக தொழுகை பற்றிக் குறிப்பிடும் அல் குர்ஆன் ருகூஃ, ஸுஜுது போன்ற புறக்கிரியைகள் பற்றி மட்டுமன்றி உள்ளத்தோடு தொடர்புடைய இறையச்சம், பணிவு, உளத்தூய்மை ஆகிய அம்சங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.

நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களோடு தொடர்புடைய கிரியைகள் அனைத்தையும் பற்றி அல்குர்ஆன் அஸ்ஸுன்னா விளக்கும் போது அவற்றில் உள்ளடங்கியுள்ள, மனிதனின் உள்ளத்துடனும் ஆன்மாவோடும் தொடர்புடைய அம்சங்களையும் விளக்குகின்றது. இது போன்று அனைத்து வணக்கங்கள், கிரியைகள் பற்றி விளக்கும் போது அவற்றுடன் தொடர்புடைய உளநிலை பற்றியும் குறிப்பிடுகின்றது.

புகஹாக்கள் என்னும் சட்ட அறிஞர்கள் இந்தப் புறக் கிரியைகளோடு தொடர்புடைய சட்டவிதிகளை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் விளக்கிய கலையை பிக்ஹ் உள்-ளாஹிர் புறம் சார்ந்த அல்லது வெளிப்படையான பிக்ஹ் என நாம் குறிப்பிடுகின்றோம். அக்கிரியைகளோடு தொடர்புடைய உள்ளம் சம்பந்தமான தன்மை, அதன் செயல்பாடுகள், உளத்தூய்மை, பரிசுத்தமான எண்ணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விதிகளை விளக்கும் கலையை பிக்ஹுல் பாதின் – மறைவான பிக்ஹ் எனக் குறிப்பிடலாம். இந்த பிக்ஹுல் பாதினையே நாம் தஸவ்வுப்- ஸூபித்துவம் என அழைக்கின்றோம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நுபுவ்வத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன், பின்வரும் வகையில் அதனை விளக்குகின்றது. எழுத்தறிவில்லாத மக்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தெரிந்து அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் அதற்கு முன்னர் பகிரங்கமாக வழிகோட்டிலிருந்தனர். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல்குர்ஆன் 62:2)

மக்களுக்கு அல்குர்ஆன் திருவசனங்களை ஓதிக் காண்பித்தல், அவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் போதித்து நெறிப்படுத்தல், அவர்களது உள்ளங்களின் கறைபோக்கி மாசகற்றித் தூய்மைப்படுத்தல் ஆகிய மூன்று முக்கிய பணிகள் பற்றி இங்கு குறிப்பிடப்படுகின்றது. இவற்றுள் உள்ளத்தை தூய்மைப்படுத்தல் – தஸ்கியதுந் நப்ஸ் என்ற பணியினடியாக வளர்ந்த ஒரு கலையே தஸவ்வுப் – ஸூபித்துவம் ஆகும். எனவே, தஸவ்வுப் என்பது மக்களின் உள்ளங்களைப் பிடித்துள்ள கறைகள் மாசுகளை அகற்றிப் புனிதப்படுத்தி இறை திருப்தியைப் பெறும் நிலைக்கு அதனை உருவாக்கும் தஸ்கியதுந் நப்ஸின் வழிமுறைகள் பற்றி விளக்கும் கலையாகும்.

இஸ்லாம் வலியுறுத்தும் உலகப் பற்றற்ற மனநிலை, இறையச்சம், முற்றிலும் இறைவன் பால் பாரஞ்சாட்டி வாழும் பண்பு ஆகியவற்றை மிக வேட்கைளோடு பின்பற்றிய நபித்தோழர்கள் பலர் காணப்பட்டனர். ஸுஹ்த் என்னும் உலகப் பற்றற்ற வாழ்வை மேற்கொண்ட இந்த நபித்தோழர் எவருமே ஸுபி என அழைக்கப்படவில்லை. இதற்கான காரணத்தையும் தஸவ்வுபின் தோற்றத்தையும் இமாம் குஷைரி றஹிமஹுல்லாஹ் அவர்கள்தனது ரிஸாலாவில் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலப்பிரிவின் பின்னர் நபித் தோழர்களைக் குறிக்க நபியவர்களுடன் அவர்களது தோழமையைச் சுட்டும் ‘ஸஹாபி’ என்ற சொல்லைத் தவிர வேறு எந்த ஒரு பதமும் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் நபியவர்களுடனான தோழமையைப் பொறுத்தளவில் இதனை விடச் சிறப்பான அந்தஸ்தையும் படித்தரத்தையும் எவரும் பெற முடியாது. ஸஹாபாக்களின் காலப்பிரிவிற்குப் பின்னர் மக்கள் அறிவு, வணக்க வழிபாடுகளைப் பொறுத்தளவில் பல தரங்களையுடையோராகப் பிரிந்தனர். அவர்களில் சன்மார்க்க விடயங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட ஸுஹ்ஹாத் உலகப் பற்றற்ற மனநிலையுடையவர்களும் உப்பாத் வணக்கவாளிகளும் காணப்பட்டனர்.

இவர்கள் பிற்காலத்தில் ஸுபி என்று அழைக்கப்பட்டனர். தஸவ்வுப், ஸுபி என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே பிரபல்யமடைந்திருந்தது என இமாம் குஷைரி றஹிமஹுல்லாஹ் அவர்கள்தனது ரிஸாலாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தஸவ்வுப் என்பது முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய ஷரீஆவின் அடிப்படையில் வளர்ந்த ஒரு கலையாகும். ஸுபிகளால் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகள் அனைத்தும் புகழ்பெற்ற ஸஹாபாக்கள் தாபிஈன்கள் மத்தியில் காணப்பட்டவையாகும். இறைவனிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு, முற்றிலும் இறைவனைச் சார்ந்திருத்தல், உலகப்பற்றின் கவர்ச்சிகளிலிருந்து ஒதுங்கியிருத்தல், செல்வம், பதவி, அந்தஸ்து ஆகியவற்றைப் பொறுத்தளவில் பற்றற்ற மன நிலையைக் கடைப்பிடித்தல் தனிமையை விரும்புதல் ஆகிய இபாதத்கள் நபித் தோழர்களிலும் ஸலபுஸ் ஸாலிஹீன் என அழைக்கப்படும் நன்னெறி முன்னோர்களிலும் காணப்பட்டன.

ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் பிற நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்பட்ட செல்வத்தின் பெருக்கம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் உலகக் கவர்ச்சி, ஆடம்பர வாழ்வை நோக்கித் தீவிர ஈடுபாடு காட்டிய போது அவற்றை விட்டு ஒதுங்கி தங்களது ஆத்மீக தூய்மையைப் பேணுவதற்காக இறை வணக்கத்தில் ஆழமாக ஈடுபட்டோர் ஸுபிய்யஹ் – ஸுபிகள் என இனங்காணப்பட்டனர் என இப்னு கல்தூன் தனது முகத்திமா வில் குறிப்பிடுகின்றார்.

இப்னு கல்தூன் குறிப்பிடும் அத்தகைய பிரிவினர் எளிய வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தனர். கால ஓட்டத்தில் தங்களது ஆத்மிக பரிசுத்தம், உளத்தூய்மை, இறையன்பு ஆகியவற்றை அடிப்படை நோக்காகக் கொண்ட இப்பிரிவினர் தங்களுக்கு உரிய நெறிமுறைகள், கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தனர். இதுவே தஸவ்வுபின் ஆரம்பக்கட்டமாகும்.

ஆரம்பகால ஸுபிகளாக ஹஸனுல் பஸரி, மஃரூப் அல்-கர்கி, ஜுனைத் அல்பக்தாதி, ஸரீஅஸ் ஸிகதி, ஸுன்னூன் அல்மிஸ்ரி, ராபிஅதுல் அதவியா, புலைல் பின் இயாழ், ஹாரிஸ் அல்முஹாபிஸி (றஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மனநிலையைக் கடைபிடித்த இவர்கள், முற்றிலும் உலகப் பற்றிலிருந்து ஒதுங்கி வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு நிற்கவில்லை. இவர்கள் பலர் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பிற்காலத்தில் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ,ஷம்ஷுத்தப்ரீஸீ ,ஜலாலுத்தீன் றூமீ, அபூஹாமித் அல் ஙஸ்ஸாலீ, இஸ்ஸுப்னு அப்துஸ்ஸலாம் (றஹிமஹுமுல்லாஹ்) போன்றவர்கள் ஸூபித்துவத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினர்.
இமாம் ஹஸனுல் பஸரி றஹிமஹுல்லாஹ் போன்றோர் தங்களது சொற்பொழிவுகள் மூலம் மக்களினதும், ஆட்சியாளர்களினதும் உள்ளங்களில் இறை பக்தியையும் மறுமையின் பால் பற்றினையும் தோற்றுவித்தனர். புலைல் பின் இயாழ், அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீதைச் சந்தித்து அவரது ஆடம்பர வாழ்வைக் கண்டித்தார்.

இப்ராஹிம் இன்பு அத்ஹம் றஹிமஹுல்லாஹ் என்ற ஸுபி மகான் பைஸாந்திரியர்களுக்கு எதிரான பல போர்களில் கலந்துகொண்டார். அபுல் ஹஸன் அலி அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் ஹிஜ்ரி 684 இல் மன்லாராவில் நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கெதிரான சிலுவைப் போரில் பங்குகொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.

ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் உருக்கமான உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவுகள் ஆயிரக்கணக்கான பாவிகளை நன்நெறியின் பால் திருப்பின. அப்பாஸிய ஆட்சியாளர்களையே ஆட்டங்காணச் செய்தன. அவர்களது சொற்பொழிவுகளில் உள்ளடங்கிய ‘புதூஹுல் கைப்’, ‘பத்ஹுல் றப்பானி’ போன்ற நூல்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

தஸவ்வுபின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான ஸுஹ்த் என்னும் பற்றற்ற துறவு நிலையின் இலட்சியம் உள்ளத்தின் கீழான உணர்ச்சிகளுக்கு எதிராகப் போர் தொடுத்து அதனை அடிமைப்படுத்திய இஸ்லாமிய பணியில் ஈடுபடும் வகையில் இறைநேசம், மறுமையின் பால் பற்று, உலக வாழ்வைத் துச்சமாக மதிக்கும் மனநிலை ஆகிய பண்புகளை உள்ளத்தில் தோற்றுவித்தலாகும்.

தஸவ்வுபின் வரலாற்றில் அடுத்த முக்கிய கட்டம் ஸூபி தரீகாக்களின் தோற்றமாகும். அஷ்ஷெய்க் அப்துல் காதர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் பைஅத் மூலம் மக்களை ஆத்மீக வழியில் நெறிப்படுத்தி, பன்படுத்தி, இறைதிருப்திக்கு இட்டுச் செல்லும் தரீக்கா எனும் மெஞ்ஞான வழியை அறிமுகப்படுத்தினார்கள். இவர்களால் நிறுவப்பட்ட காதிரிய்யா தரீக்கா சிரியா, துருக்கி, கெமருன், கொங்கோ, மொரிடானியா, தன்ஸானியா போன்ற ஊர்களிலும் மத்திய ஆசியாவில் கோக்கேசிய பிரதேசத்திலும் பரவியது.

மொறோக்கோவில் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களினால் நிறுவப்பட்ட ஷாதுலியா தரீக்கா வட ஆபிரிக்கா, எகிப்து, கென்யா, தன்ஸானியா மற்றும் ஆசியப் பகுதிகளில் பரவியது. அஷ்ஷெய்க் பஹாஉத்தீன் நக்ஷ பந்தி றஹிமஹுல்லாஹ் அவர்களினால் நிறுவப்பட்ட நக்ஷபந்தியா தரீக்கா , மத்திய ஆசியா, இந்தியா, இந்நோநேசியா, துருக்கி ஆகிய பகுதிகளில் பிரபல்யம் பெற்றது. இது தவிர தீஜானியா, சிஷ்திய்யா, மல்லவியா போன்ற பல தரீக்காக்கள் கால வளர்ச்சியில் தோற்றம் பெற்றன. இஸ்லாத்தின் பரவலிலும், பிரஞ்சு, இத்தாலிய ஏகாதிபத்தியவாதிகளுக்கெதிரான போராட்டத்திலும் இத்தரீக்காக்கள் வகித்த பங்கும் கணிசமானதாகும்.

இந்தோனேசியாவில் முஸ்லிம்களுக்கும் டச்சுக் காரர்களுக்குமிடையில் நடைபெற்ற போர்களில் காதிரிய்யா தரீக்கா மிக முக்கிய இடத்தை வகித்தது. அல்ஜீரியாவில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான 1832 – 1837 க்குமிடையில் மாபெரும் போராட்டத்தில் மேற்கொண்ட அமீர் அப்துல் காதிர் ஜஸாஇரி அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் ஷெய்குகளில் ஒருவராக விளங்கினார். திஜானியா தரீக்காவும் அல்ஜீரியாவில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்திறகு எதிரான போரில் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டது. மத்திய ஆசியாவில் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கெதிரானபோராட்டத்தில் நக்ஷபந்தியா தரீக்கா முக்கிய பங்களிப்பை செலுத்தியது.

எமது சமகால உலகில் மேற்குலகில் ஏற்பட்டுள்ள ஆத்மீக வெறுமையானது மேற்குலகின் புத்தி ஜீவிகள் பலரை தஸவ்வுபின் மூலம் இஸ்லாத்தில் இணையச் செய்தது. அறிவுத் துறையிலும் சிந்தனைத் துறையிலும் மிக ஆழமான புலமை பெற்றிருந்த புத்திஜீவிகள் பலர், தங்கள் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெறுவதற்கு மிக அடிப்படையான ஏதோ ஒன்றை இழந்திருப்பது போன்ற உணர்வைப் பெற்றனர். இந்த வெற்றிடமே ஆத்மீக வெறுமையாகும். இந்த ஆத்மீக வெறுமையை ஈடுசெய்ய முற்பட்ட அவர்களது முயற்சி தஸவ்வுபின் பால் ஆர்வம் கொள்ளச் செய்து அதனடியாக இஸ்லாத்தை ஏற்று, இத்துறையில் பெரும் பங்களிப்புச் செய்யும் ஆற்றல் படைத்த முஸ்லிம் அறிஞர்களாக அவர்களை மாற்றியது.

எனவே மனித வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெறுவதற்கு ஒற்றுமை மிக அவசியமாகும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் கொள்கையான “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாக காணப்படுகின்றது.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே !

நம் நாட்டில் பல்லின மக்களும் பல்வேறு சமயத்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே, பெரும்பாலும் தீய விளைவை உண்டாக்கும் வேற்றுமை உணர்வுகளையும், ஒரு சமயத்தவரைப் பற்றி இன்னொரு சமயத்தவர் கூறிவருகின்ற எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக்கள், காழ்ப்புணர்வுகளையெல்லாம் வேருடன் பிடுங்கி, களையெடுத்து, நாம் எல்லோரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகளாக, ஒருவருக்கொருவர் சொல்லாலும், செயலாலும் தொல்லைக்கொடுக்காமல் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்தால்தான், நம் நாட்டில் சம தர்ம சமுதாயம் அமையும். நம் நாடும் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடையும்.

நம் நாடும் நல்லரசாக நிச்சயம் மாறும். அதற்கு ஒரே சிறந்த வழி, ஆன்ம நேயம் என்னும் ஆன்மீகமே.இந்த ஆன்மீக ஞானமே இஸ்லாத்தில் தஸவ்வுப் – ஸூபித்துவம் எனக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையானது ஏகத்துவ ஞானம் எனும் அத்வைத மெய்ஞ்ஞானம் ஆகும். ஸூபி மஹான்கள் இதனை வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று எனக்கூறுவர் .

வஹ்ததுல் வுஜூத் என்பது உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் என்பதை போதிக்கின்றது .அதாவது அல்லாஹ் ஒருவன் அவன்தான் உள்ளமை. படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும்.படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்கு வேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமையே அவ்வாறு தோன்றுகின்றது. படைப்புகள் மாயதோற்றத்தில் தென்படுகின்றவே தவிர யதார்த்தத்தில் படைப்புகள் என்பது இல்லை.

பஞ்சு பிடவையாகத்தோற்றுவது போலவும்,தங்கம் காப்பாகத்தோற்றுவது போலவும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை சர்வ படைப்புகளாகவும் தோற்றுகின்றது. சர்வ படைப்புகளும் “ஹக்” ஆகிய அல்லாஹ் தானானவைகள் தான். அவனுக்கு வேறானவைகள் அல்ல என்பதையே வஹ்ததுல் வுஜூத் என்பது போதிக்கின்றது.

இதைத்தான் இஸ்லாத்தின் மூல மந்திரமான லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமா போதிக்கின்றது. அதன் தாற்பரியத்தை ஸூபித்துவ அடிப்படையில் பின்வருமாறு புரிந்து கொள்வேண்டும்.

எனும் திருக்கலிமா லாஇலாஹ இல்லல்லாஹ் வின் யதார்த்த கருத்தை சிந்தித்துப் பாருங்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்பதில் லா இலாஹ……… என்றால் நாமும்,இந்த பூமியும், இதிலுள்ளவைகளும், வானம், அதிலுள்ள சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் அனைத்தும், அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை, எதுவுமே உண்மையில் இல்லவே இல்லை.

அடுத்து, இல்லல்லாஹ்…….. அல்லாஹ்வைத் தவிர……. என்று சொல்லும்போது இருப்பது அனைத்தும் நான், நாங்கள், நீ, நீங்கள், அவன், அவள், அவர்கள், இவன், இவள், இவர்கள், அது, அவைகள், இது, இவைகள் மற்றும் நம் புலன்கள், அவைகளால் பார்க்கப்படுபவைகள், கேட்கப்படுபவைகள், நுகரப்படுபவைகள் சுவைக்கப்படுபவைகள் மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்டவைகள் ஆக, அனைத்து சிருட்டிகளும் இறைவனின் வெளிப்பாடுகளே என்று அறிதல் வேண்டும். எனவே மெய்பொருளாகிய அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான் அவனைத்தவிர எதுவும் இல்லை என்பதே திருக்கலிமாவின் முழுமையான தத்துவார்த்தம் ஆகும்.

எனவே ஒரே உள்ளமை மட்டுமே இருக்கின்றது. உள்ளமையைப் பொறுத்து மனிதர்களிடயே எந்த வேறுபாடும் இல்லை. எல்லா மனிதர்களும் ஒரு உள்ளமையின் தோற்றங்களே. சாதி, மதம், இனம், நிறம் என்ற வேறுபாடுகள் வெளிரங்க அடையாளங்களுக்காகவே இருக்கின்றன. உள்ளமையில் வேறுபாடு கிடையாது. ஒரு உள்ளமையின் வெளிப்பாடுகாளாகிய நாம் ஒற்றுமையை பேணி நடப்பதற்கு தடைகள் எதுவும் இருக்க முடியாது.

அதுபோல் உள்ளமையைப் பொறுத்து ஏனையவ படைப்புகளிடயேயும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே அனைத்து படைப்புகளையும் ஒரு உள்ளமையின் தோற்றங்களாக எண்ணி நாம் செயல்படவேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments