Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறை காதலர்கள்

இறை காதலர்கள்

وكان بعض العارفين رحمه الله يقول (ألسِنة جميع المحبّين أعجميّة على غيرهم، وهي لأصحابهم عربيّة، هذا كلّه في حقّ المُتكلّمين من الأولياء، أمّا من غلب عليه حالُه فَمِنْ أدب أهل الطّريق التسليمُ له، لأنّه يتكلّم بلسان العشق لا بلسان العلم الصحيح،

وقد بَلَغَنَا أنّ عصفورا رَاوَدَ عصفورة في قبّة سليمان بن داؤود عليه السلام ، فأبت عليه فقال لها قد بَلَغَ بي من حبّكِ ما لَوْ قلتِ لي اُقلُبْ هذه القبّة على سليمان وجُنده لقلبتُها، فحملت الرّيحُ كلامَه إلى سليمان، فأرسل خلفه، وقال ما حملك أن تقول ما لم تقدِرْ عليه؟ فقال مهلًا يا نبيّ الله إنّي عاشق، والعُشَّاقُ إنّما يتكلّمون بلسان المحبّة والعشق، لا بلسان العلم والتّحقيق فأَعْجَبَ ذلك سليمانَ، 

وفي ذلك عذر عظيم للعشّاق في طريق أهل الله عزّوجلّ كسيّدي عمر بن الفارض وأضرابه رضي الله عنهم،

(இறை ஞானிகளில் ஒருவர் பின்வருமாறு சொல்லியுள்ளார். அனைத்து இறைக் காதலர்களின் மொழியும் மற்றவர்களுக்கு வேறு – அந்நிய – மொழியாகும். தெரியாத பாஷையாகும். ஆயினும் அந்தக் காதலர்களுக்கு அது அறபு மொழிதான். இதுவெல்லாம் வலீமார்களில் தெளிவு பெற்றவர்களுக்குள்ளதாகும். ஆனால் இறை காதல் பைத்தியமாக மாறினவர்கள் விடயத்தில் எந்த ஓர் எதிர்ப்பும் காட்டாமல் அவர்களைத் தமது போக்கில் விட்டுவிடுவதே மிகச் சிறந்ததாகும். ஏனெனில் அவர்கள் – இறை காதல் பைத்தியமாக மாறினவர்கள் – காதல் மொழிதான் பேசுவார்கள். தெளிவான அறிவு மொழி பேசமாட்டார்கள்.)

இதன் சுருக்கம் என்னவெனில் இறை காதலர்கள் தமது காதல் அதன் உச்சியை அடைந்து காதல் போதையில் – மயக்கத்தில் – இருக்கும் போது தாம் பேசுவது தமக்கே விளங்காமல் பேசுவார்கள். அல்லாஹ்வைப் புகழ்வார்கள். சுருங்கச் சொன்னால் சிற்றின்ப மயக்கத்தில் உள்ள ஒருவன் தனது காதலியை விழித்து அல்லது நினைத்து எவ்வாறெல்லாம் பேசுவானோ அதே போல் இறை காதல் மயக்கத்திலுள்ளவனும் பேசுவான்.

ஒரு சமயம் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு மலையடியருகே நடந்து சென்றார்கள். யாரோ ஒருவன் மலை உச்சியிலிருந்து காதல் கவி பாடும் சத்தம் அவர்களுக்குக் கேட்டது. யாரென்று அறிந்து கொள்வதற்காக மலையேறி அதன் உச்சியை அடைந்தார்கள். அங்கே ஒருவர் இறைவா! உன்னை என் மடியிலமர்த்தி தாலாட்டும் நாள் எந்நாளோ! உன் செவ்விதழ்களைத் தடவி சுகம் பெறுவதென்னாளோ! என்று இறைவனிடம் காதல் கதை பேசிக் கொண்டிருந்தான். இறைவனுடன் காதல் கதையா? மூஸா நபீயின் கண்கள் சிவந்தன. அவரின் கன்னத்தில் ஓர் அடிதான் அடித்தார்கள் நபீ மூஸா. அவர் அக்கணமே உயிர் துறந்தார். மறுகணம் நபீ மூஸாவுக்கு அசரீரி கேட்டது.

தூ பறாயே வஸ்லு கர்தன் ஆமதீ

நே பறாயே பஸ்லு கர்தன் ஆமதீ

மூஸாவே! நான் உங்களை நபீயாக அனுப்பியது என்னை விட்டும் தூரப் போனவனை என்னுடன் சேர்த்து வைப்பதற்காகத்தான். என்னை ஒட்டியிருப்பவனைத் தட்டி விரட்டுவதற்காக அல்ல.

அழுதார்கள் நபீ மூஸா, கவலைப்பட்டார்கள். சற்றுக் கலங்கினார்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு அவனின் அன்பைப் பெற்றுக் கொண்டார்கள்.

إنّ الله لا يأخذ بما صدر من العشّاق

இறை காதலர்களால் ஏற்படும் பேச்சுகள் கொண்டு அல்லாஹ் அவர்களை குற்றம் பிடிக்க மாட்டான் என்பது இறை ஞானிகளின் கருத்து வேறுபாடில்லாக் கூற்றாகும். அல்லது நபீ மணியின் அருள் மொழியாகும். الله اعلم

இறை காதல் தலைக் கேறி இகபரமிரண்டையும் மறந்த நிலையில் குணங்குடியார் பின்வருமாறு பாடுகின்றார்.

கூந்தலுக்கு நெய் தோய்த்து குளிர் மஞ்சள் நீராட்டி

வாந்து சிங்காரித்து வைப்பேன் மனோன்மணியே!

முட்டை பொரிப்பேன் முழுக்கோழியும் பொரிப்பேன்

தட்டைப் பீங்கானில் வைத்து தருவேன் மனோன்மணியே!

குணங்குடியார் இவ்வாறு பாடிவிட்டார் என்பதற்காக அவர் மதம் மாறிவிட்டார் என்றோ, அவரைக் கொலை செய்ய வேண்டுமென்றோ “பத்வா” வழங்குவது முட்டாள் தனத்திலும் கேடுகெட்ட முட்டாள் தனமாகும். மார்க்க விரோதமுமாகும்.

முதலில் குணங்குடியாரை அழைத்து அவரின் நிலை என்ன என்பதை ஆராய வேண்டும். அவரைத் தீர விசாரிக்கவும் வேண்டும்.

ஏனெனில் “மஜ்னூன்” பைத்தியக் காரனுக்கும், “மஜ்தூப்” இறை காதலால் சுய அறிவிழந்தவனுக்கும் சட்டம் ஒன்றுதான். பைத்தியக்காரன் ஒருவனைக் கொலை செய்தால் கொலைக்குக் கொலை என்ற அடிப்படையில் பைத்தியக்காரனைக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்குதல் கூடாது. இவ்வாறுதான் “மஜ்தூப்” என்பவருமாவார்.

ஏனெனில் கொலை செய்த ஒருவனக்கு கொலைத் தீர்ப்பு வழங்குவதாயின் அவன் “முகல்லப்” ஆக இருக்க வேண்டும். “முகல்லப்” என்ற சொல் இரண்டு அம்சங்களைக் குறிக்கும் செல்லாகும். ஒன்று – “ஆகில்” “அக்ல்” புத்தி உள்ளவராக இருத்தல். அதாவது பைத்தியக் காரனாக இருத்தல் கூடாது. இரண்டு – ஆணாயினும், பெண்ணாயினும் பருவமடைந்தவராக இருத்தல். அதாவது பருவமடையாதவராக இருத்தல் கூடாது. இவ்விரு அம்சங்களும் உள்ள ஒருவன் அல்லது ஒருத்தி “முகல்லப்” அல்லது “முகல்லபஹ்” என்று சொல்லப்படுவார்கள். ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பருவமடைவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று – 15 வயதை அடைதல். இரண்டு – ஆணாயினும், பெண்ணாயினும் இந்திரியம் வெளியாதல். பெண்ணாயின் மாதத்தீட்டு வருதல். 15 வயதுக்கு முன் ஆணுக்காயினும், பெண்ணுக்காயினும் இந்திரியம் வந்தால் அது பருவ வயதின் ஆரம்பமாகும்.

ஏவல் விலக்கல் என்பன “முகல்லப்” குறித்த இரண்டு நிபந்தனைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கடமை. இந்த அடிப்படையில் “மஜ்னூன்” பைத்திய காரனுக்கும், “மஜ்தூப்” இறை காதலால் சுய அறிவிழந்தவருக்கும் ஏவல், விலக்கல் கடமையாகாது. எனவே, “மஜ்தூப்” என்பவருக்கு அவரின் சொல், செயல் “ஷரீஅஹ்”வுக்கு முரணானவையாக இருந்தால் அவருக்கு எந்த ஒரு “பத்வா” தீர்ப்பும் வழங்காமல் அவர் வழியில் அவரை விட்டு விட வேண்டும்;. எனினும் அவரின் சொற் செயல்களைப் பின்பற்றுவதும், அவரின் கருத்துக்களைச் சரி காண்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அவரைக் கண்ணியப் படுத்துவதும், அவருக்கு உதவியுபகாரம் செய்வதும் நல்ல காரியமேயாகும்.

இத்தலைப்பின் சுருக்கம் என்னவெனில் இறை காதலால் சுய நினைவற்றவர்களின் மொழி எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி தெரிந்த அவர்களின் படித்தரத்தை அடையாதவர்களுக்கு அந்த மொழி அந்நிய மொழி போன்றே இருக்கும். ஒன்றும் புரியாது. “மஜ்தூப்” என்பவரால் ஏற்படுகின்ற சொற் செயல்கள் “ஷரீஅஹ்”வுக்கு முரணாக இருந்தாலும் கூட அவர்கள் பைத்தியக் காரர்கள் போல் معذورون  சலுகை வழங்கப்பட்டவர்களாவர். அவர்களுக்கு ஏவல் விலக்கல் என்பன இல்லை.

ஓர் ஆண் சிட்டுக் குருவி ஒரு பெண் சிட்டுக் குருவியை நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மாளிகையில் கண்டு உடலுறுவுக்கு அழைத்தது. பெண் சிட்டுக்குருவி இணங்கவில்லை. கடும் முயற்சியின் பின் ஆண் சிட்டுக்குருவி பெண் குருவியிடம் (உன் மீது எனக்குள்ள ஆசை மிகக் கடுமையாகிவிட்டது. என்னால் சகிக்க முடியவில்லை. நீ எது செய்யுமாறு என்னைப் பணித்தாலும் அதை நான் செய்வேன். இதோ இருக்கும் இந்த “குப்பஹ்” டோமை நபீ ஸுலைமான் மீதும், அவரின் சேனைகள் மீதும் புரட்டி விடுமாறு நீ சொன்னாலும் அதை நான் செய்வேன்) என்று ஆசையுடன் கலந்த வீரம் பேசியது. பெண் குருவி பதில் ஒன்றும் சொல்லவில்லை. இதனிடையே ஆண் குருவி சொன்ன செய்தியை நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு காற்று எட்டி வைத்தது. நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆண் குருவியை அழைத்து உன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்ய முடியுமென்று ஏன் சொன்னாய்? என்று கேட்டார்கள். நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தவற்றில் காற்றும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதற்கு அந்தக் குருவி (அல்லாஹ்வின் நபீயே! அவசரப்படாதீர்கள். நான் ஒரு காதல் பைத்தியம். காதலர்கள் எப்போது பேசினாலும் ஆசை, அன்பு என்ற மொழிகளில்தான் பேசுவார்கள். அவர்களின் பேச்சு அறிவுடனும், தெளிவுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்காது.) என்று கூறியது. குருவியின் இக்கூற்று நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதில் இப்னுல் பாரிழ் போன்ற இறை காதலர்களுக்கு ஒரு சலுகை உண்டு.

மேற்கண்ட இந்த வரலாறும் இறை காதலர்களால் ஏற்படும் சொற் செயல்களுக்கு மன்னிப்புண்டு என்பதையே உணர்த்துகின்றது.

ஆஷிகீன் – இறை காதலர்களை நிராகரித்து அவர்களின் சாபத்திற்குள்ளாகாமல் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments