Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 10
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற, நோய் நிவாரணம் பெற்ற ஸஹாபஹ் – தோழர்களில் மிக முக்கியமானவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் (கர்றமல்லாஹு வஜ்ஹஹு) அன்னவர்கள்.
அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.
அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
கலீபாக்கலில் ஒருவர். அண்ணெலம் பெருமானின் சாச்சாவின் மகன். சிறுவர்களில்
இஸ்லாத்தை முதன் முதலாக ஏற்றவர்கள். அண்ணலின் அருள் நிறைந்த மடியில்
வளர்ந்தவர்கள். மக்காவில் இருந்து ஹிஜ்றத் செல்லும் வரை அவர்களின் பாதுகாப்பிலும்,
அவர்களின் வீட்டிலும் அவர்களுடனிருந்தவர்கள். தபூக் யுத்தம் தவிர அனைத்து
யுத்தங்களிலும் அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன்
கலந்து கொண்டு, அவற்றின் தளபதியாக செயற்பட்டவர்கள். யுத்தங்கள் வெற்றி பெறுவதற்கு
பிரதான காரணியாக அமைந்தவர்கள். வீரம் நிறைந்தவர்கள். அதிக யுத்தங்களில் இவர்களின்
கைகளிலேயே அண்ணலவர்கள் தங்களின் கொடியை வழங்கினார்கள்.
இவர்களின் தாய் பாத்திமா பிந்து அஸத் றழியல்லாஹு தஆலாஅன்ஹா அன்னவர்கள்.
இவர்கள் சிறந்த ஓர் பெண்மணியாகத் திகழ்ந்தவர்கள். அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
இவர்களின் வீட்டுக்குச் சென்று இவர்களைச் சந்திப்பார்கள். சில சந்தர்ப்பங்களில்
கைலூலா தூக்கத்தை இவர்களின் வீட்டில் தூங்குவார்கள். இவர்கள் மரணித்த போது
தங்களின் சேட்டைக் கொடுத்து அதில் அவர்களைக் கபனிடும்படி பணித்தார்கள்.
மாத்திரமன்றி அவர்களின் கப்றினுள் இறங்கி சற்று சாய்ந்தார்கள்.

அண்ணலாரின் இந்த செயல் பற்றி அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு பின்வருமாறு
அவர்கள் பதிலளித்தார்கள்.
“அபூதாலிபின் பின் இவர்களை விட எனக்கு மிக நன்றியுள்ளவர் யாரும் கிடையாது.
நான் எனது சேட்டை இவர்களுக்கு அணிவித்ததன் காரணம் சுவர்க்கத்து ஆடைகள் கொண்டு
இவர்கள் அணிவிக்கப்பட வேண்டுமென்பதற்காக. இவர்களின் கப்றில் நான் சாய்ந்ததன்
காரணம் கப்றின் வேதனை இவர்களுக்கு இலகுவாக்கப்பட வேண்டுமென்பதற்காக” அண்ணல் எம் பெருமானின் இந்தக் கூற்றின் மூலம் அவர்களின் அருளை முழுமையாகப்
பெற்ற ஓர் பெண்மணியாக ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின்
தாய் விளங்கியிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் சுவர்க்கவாதிகளில்
ஒருவரென்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். அவர்களின் பொருட்டு கொண்டு
அல்லாஹு தஅலா எமக்கு அருள் புரிவானாக.
தனது தாயின் அந்தஸ்தை விட பல மடங்கு அந்தஸ்தைப் பெற்றவர்கள் ஸெய்யிதுனா அலீ
இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள். இவர்களின் சிறப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பல
சந்தர்ப்பங்களில் இவர்கள் பற்றி கூறியிருக்கிறார்கள்.
مَنْ اذَى عَلِيًّا فَقَدْ اذَانِيْ
எவன் அலீயை வேதனைப்படுத்தினானோ
அவன் என்னை வேதனைப்படுத்தி
விட்டான்.
مَنْ سَبَّ عَلِيًّا سَبَّنِيْ
வன் அலீயை ஏசினானோ அவன் என்னை ஏசிவிட்டான்.
أَنَا دَارُ الْحِكْمَةِ وَعَلِيٌّ بَابُهَا
தத்துவத்தின் வீடு அலீ அதன் வாசல்.நான்
النَّظَرُإِلَى وَجْهِ عَلِيٍّ عِبَادَةٌ
அலீயின் முகத்தைப் பார்ப்பது ஓர் வணக்கமாகும்.
மேற்கூறப்பட்டவை
அனைத்தும் அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் பற்றி அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அருளியவையாகும். இவையனைத்தும் அவர்களின் உயரிய அந்தஸ்தினை எமக்கு தெளிவாக காட்டுகின்றன.
இத்தகைய உயர் அந்தஸ்தினைப் பெற்ற ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் நாமறிந்த வகையில் இரண்டு சந்தர்ப்பங்களில் அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
உமிழ் நீர் கொண்டு அருள் பெற்றிருக்கிறார்கள். நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்.
அண்ணலின் உமிழ் நீர் அருள் நிறைந்தது. ஆன்மீக மணம் கொண்டது என்பதற்கு அது பாரிய
சான்றாகும்.
முதலாவது
சந்தர்ப்பம்:-
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
ஸஹாபஹ் – தோழர்கள் மக்கஹ் முகர்றமஹ்விலிருந்து மதீனா முனவ்வறஹ்வை நோக்கி ஹிஜ்றத்
சென்றதன் பின் ஸெய்யிதுனா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களின் வருகையை
எதிர்பார்த்த வண்ணம் மக்கஹ் முகர்றமஹ்வில் தங்கினார்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.
மதீனஹ் முனவ்வறஹ்வுக்கு செல்லும் படி கிடைக்கப் பெற்ற இறை கட்டைளையை
செயற்படுத்த விரும்பிய அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா
அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களையழைத்து “அலீயே! நான் மதீனா
முனவ்வறஹ்வை நோக்கி செல்லப் போகிறேன். நான் உறங்குகின்ற இடத்தில் நீங்கள்
உறங்குங்கள். மக்கஹ் முகர்றமஹ்விலுள்ள விடயங்களைக் கவனித்து விட்டு மதீனஹ்
முனவ்வறஹ்வை வந்தடையுங்கள். அங்கு என்னுடன் இணையுங்கள்.” என்று கூறிவிட்டு
தங்களின் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கட்டளையை சிறமேற்கொண்டு செயற்பட்ட செய்யிதுனா
அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மக்கஹ் முகர்றமஹ்வில் சில
நாட்கள் தங்கி அங்குள்ள பணிகளை நிறைவேற்றி விட்டு. மதீனஹ் முனவ்வறஹ்வை நோக்கி
நடக்க ஆரம்பித்தார்கள். காபிரீன்களின் பார்வைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக
பகல் வேளையில் நடந்து செல்லாமல் இரவு வேளையில் நடந்து சென்றார்கள். பகல் வேளையில்
மறைந்து இருந்தார்கள். பல கஷ்டங்களின் பின் மதீனஹ் முனவ்வறஹ்வை வந்தடைந்தார்கள்.
மக்கஹ் முகர்றமஹ்விலிருந்து மதீனஹ் முனவ்வறஹ்வை நோக்கி மலை பிரதேசங்களினூடாக நடந்து
சென்ற காரணத்தினால் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின்
இரண்டு கால்களும் வீங்கி அவற்றிலிருந்து இரத்தம் சொட்டியது.
ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மதீனஹ்
முனவ்வறஹ்வை வந்தடைந்து விட்டார்கள் என்பதை அறிந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களின் தோழர்களை அழைத்து அலீயை என்னிடம்
அழைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். அப்பொழுது கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள்
அண்ணலெம் பெருமான் நோக்கி “யாறஸுலல்லாஹ்! அலீ அன்னவர்கள் கால் வலியினால்
அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் நடக்க முடியவில்லை” என்று கூறினார்கள்.
இதைச் செவியுற்ற காருண்ய நபீ அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களிருக்குமிடம் தேடிச் சென்றார்கள். அவர்களைக்
கண்டவுடன் அவர்களையணைத்துக் கொண்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
அழுதார்கள். அவர்களின் கால்களிலிருந்து இரத்தம் சொட்டுவதைக் கண்ணுற்ற அண்ணலவர்கள்
தங்களின் அருள் நிறைந்த கரங்களில் உமிழ் நீரை உமிழ்ந்தார்கள். அந்த உமிழ் நீரைக்
கொண்டு அவர்களின் இரு கால்களிலும் தடவினார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.
அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் இரண்டு கால்களிலும் எந்த ஒரு நோயும்
ஏற்படவில்லை.
“உஸ்துல் ஆபஹ் பீ மஃரிபதிஸ் ஸஹாபஹ்” என்ற நூலில் பாகம்
– 04 பக்கம் – 92ல் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு கால் வலி ஏற்பட்டதல்லவா!
இப்பொழுது அவர்களை வைத்தியரிடம் அழைத்து சென்று மருந்து செய்வதே முறையாகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்ன
செயதார்கள்? வைத்தியர்களிடம் அழைத்து செல்லுங்கள் என்று சொன்னார்களா? இல்லை. மாறாக
தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை அவர்களின் கால்களில் தடவி, அந்த உமிழ் நீரை
அதற்கு மருந்தாகப் பயன்படுத்தினார்கள். உமிழ் நீரின் அருளின் காரணத்தினால்
மாத்திரமன்றி அண்ணலவர்களின் கைகளின் அருளினாலும் சுகம் பெற்றார்கள் ஸெய்யிதுனா அலீ
இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.
என்னே! அண்ணலின் உமிழ் நீரின் மகிமை.
என்னே அண்ணலின் கைகளின் மகிமை.
வழிகெட்ட மடையர்கள் கூறுவது போன்று அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
எங்களைப் போன்ற சாதாரண மனிதரல்லர். அருள் நிறைந்தவர்கள் அண்ணலவர்கள். தெய்வீக சக்தி மிக்கவர்கள் அண்ணலவர்கள். அவர்களின் உடல்
முழுக்க அருளாகும். அவர்களின் உடலிலிருந்து வெளியாகின்ற அனைத்தும்
அருளாகும். கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள்
பாக்கியம் பெற்றவர்கள். அண்ணலைக் கொண்டு அருள் பெற்றவர்கள்.
அந்த மகான்களின் பொருட்டு கொண்டு அல்லாஹு தஆலா எமக்கு அரள் புரிவானாக.  
இரண்டாவது
சந்தர்ப்பம்:-
கண்நோயுற்றிருந்த ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்
அதற்கு மருந்தாக, நோய் நிவாரணியாக அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
அருள் நிறைந்த உமிழ் நீரைப் பெற்றார்கள். அவர்களின் கண்நோய் நீங்கியது.
சுகம் பெற்றார்கள்.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ
أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَأُعْطِيَنَّ الرَايَةَ
غَدًا رَجُلاً يَفْتَحُ اللهُ عَلاَ يَدَيْهِ. قَالَ فَبَاتَ النَّاسُ يَدُوْكُوْنَ
لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا. فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُوْلِ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَرْجُوْأَنْ يُعْطَاهَا. فَقَالَ
أَيْنَ عَلِيُّ بْنُ أَبِيْ طَالِبٍ؟ فَقَالُوْا يَشْتَكِيْ عَيْنَيْهِ يِارَسُوْلَ
اللهِ. قَالَ فَأَرْسِلُوْا إِلَيْهِ. فَأْتُوْنِيْ بِهِ. فَلَمَّا جَاءَ بَصَقَ فِيْ
عَيْنَيْهِ وَدَعَا لَهُ. فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ. فَأَعْطَاهُ
الرَّايَةَ. فَقَالَ عَلِيٌّ يَارَسُوْلَ اللهِ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُوْنُوْا
مِثْلَنَا. فَقَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ. ثُمَّ
ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ. وَأَخْبِرُهُمْ بِمَا يُجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ
اللهِ فِيْهِ. فَوَاللهِ لَأَنْ يَهْدِيَ اللهَ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ
مِنْ أَنْ َيكُوْنَ لَكَ حُمْرٌ النَّعَمِ.
(கைபர் யுத்தத்தின் போது) அல்லாஹ்வின் தூதர் அண்ணல் முஹம்மத்   ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “நாளை
இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன். அல்லாஹு தஆலா அவருடைய கரங்களில்
வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள். ஆகவே, மக்கள் தம்மில் எவரிடம் அது
கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர்.
காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது
கொடுக்கப்பட வேண்டுமென்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம்  சென்றனர். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் “அலீ இப்னு அபீதாலிப்” எங்கே? என்று கேட்டார்கள். மக்கள் “அல்லாஹ்வின்
தூதரே! அவர்களுக்கு கண்வலி” என்று சொன்னார்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் “அவர்களுக்கு ஆளனுப்பி என்னடம் அழைத்து வாருங்கள்” என்று
உத்தரவிட்டார்கள். அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் வந்தவுடன்
அவர்களின் இரு கண்களிலும் (தம் உமிழ் நீரை) உமிழ்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை
புரிந்தார்கள். அவர்களுக்கு வலியே இருந்தில்லை என்பதைப் போன்று அவர்கள்
குணமடைந்தார்கள். பிறகு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ
கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள்.
அப்பொழுது அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் “அல்லாஹ்வின்
தூதரே! அவர்கள் நம்மைப் போன்று ஆகும் வரை நான் அவர்களிடம் போரிடட்டுமா? என்று” கேட்டார்கள். அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களுடைய களத்தில் இறங்கும் வரை
நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள். மேலும்
இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை
அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹுத் தஆலா
ஒரேயொரு மனிதருக்கு நேர் வழியை அளிப்பது உங்களுக்கு சிகப்பு ஒட்டகங்கள் இருப்பதை
விட சிறந்ததாகும்.” என்று சொன்னார்கள்.
மேற் சொல்லப்பட்ட ஹதீதை ஸஹ்ல் இப்னு ஸஃத் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹுல் புஹாரீ- 3701
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَوْمَ
خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلاً يُحِبُّ اللهَ وَرَسُوْلَهُ. وَيُحِبُّهُ
اللهُ وَرَسُوْلُهُ. لَيْسَ بِفَرَّارٍ. يَفْتَحُ اللهُ عَلَى يَدَيْهِ. ثُمَّ دَعَا
بِعَلِيٍّ وَهُوَ أَرْمَدُ فَتَفَلَ فِيْ عَيْنَيْهِ وَأَعْطَاهُ الرَّايَةَ. فَفُتِحَ
عَلَيْهِ.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கைபர் யுத்த
நாளன்று பின்வருமாறு கூறினார்கள். “நான் இந்தக் கொடியை நாளை ஒரு மனிதரிடம் கொடுக்கப்
போகிறேன். அவர் அல்லாஹ்வையும், அவனுடைய
தூதரையும் விரும்பக்கூடிய ஒருவர். அவரையும் அல்லாஹ்வும்,
அவனுடைய தூதரும் விரும்பக் கூடிய ஒருவர். அவர்
விரண்டோடக் கூடிய ஒருவர் அல்லர்.”
பின்பு அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் அவர்கள் கண்நோயுற்றிருந்த
நிலையில் அவர்களை அழைத்தார்கள். அவர்களின் இரு கண்களிலும் உமிழ்ந்த அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
அவர்கள் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
        அல் இஸ்திஆப்
பக்கம் – 531
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ
اللهُ تَعَالَى عَنْهُ قَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَحَلَ
عَيْنَ عَلِيٍّ بِرِيْقِهِ.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்ணுக்குத் தங்களின்
உமிழ் நீர் கொண்டு சுறுமா இட்டதை நான் கண்டேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மஜ்மஉஸ் ஸவாயித் 14709
மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் கண்நோயுற்றிருந்த ஸெய்யிதுனா அலீ இப்னு
அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீர்
கொண்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வைத்தியம்
செய்திருக்கிறார்கள், நோய் நிவாரணம் வழங்கியிருக்கிறார்கள். என்பதை நாம் விளங்கிக்
கொள்ள முடியும்.
ஒருவருக்கு கண்நோய் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? வைத்தியரிடம்
செல்ல வேண்டும். மருந்து செய்ய வேண்டும். அப்போது தான் கண்நோய் குணமடையும். மாறாக
ஒருவருடைய உமிழ் நீர் கொண்டு கண்நோயிலிருந்து நிவாரணம் பெற முடியுமா? இல்லை.
அப்படியாயின் கண்நோயுற்றிருந்த ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு
வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் தங்களின் உமிழ் நீரை உமிழ்ந்தார்களே அண்ணலெம்
பெருமான் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். அண்ணலின் இந்த
செயலில் என்ன பிரயோசனமிருக்கிறது? அண்ணலின் இந்த செயலில் என்ன தத்துவமிருக்கிறது.?
நிச்சயமாக அண்ணலெம் பெருமானின் இந்த செயலில் பிரயோசனமிருக்கிறது.
தத்துவமிருக்கிறது. தங்களின் உமிழ் நீரின் மகிமையை இங்கு
வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.
இறை ஜோதியல்லவா அண்ணலவர்கள்!
கண்நோய்க்கு மருந்தாக தனது உமிழ்நீரைப் பயன்படுத்தினார்கள் அண்ணலவர்கள். அண்ணலெம்
பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
உமிழ் நீர் சாதாரனமானதல்ல. ஆண்மீக மணம் கொண்டது. நோய்களைக் குணப்படுத்தும் தன்மை
கொண்டது என்பதை இதன் மூலம் நாம் தெளிவு பெறலாம்.
ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் உமிழ்ந்த
காரணத்தினால் அதன் அருளினால் அவர்களின் கண்நோய் நீங்கியது. ஆரோக்கியம்
பெற்றார்கள், சுகம் பெற்றார்கள். யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றியும்
பெற்றார்கள். அண்ணலின் அருள் நிறைந்த உமிழ் நீரின் காரணத்தினால் உடன் நிவாரணம்
பெற்றார்கள்.
மாத்திரமன்றி அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
இவர்களின் கண்களில் உமிழ்ந்ததன் பின் இவர்கள் கண்நோய் நீங்கியதல்லவா!
அதுமாத்திரமல்ல அதன் பின் அவர்களுக்கு கண்நோய் ஏற்படவுமில்லை. தலைவலி
ஏற்படவுமில்லை. இது பற்றி ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்
பின்வருமாறு கூறுகிறார்கள்.
عَنْ أُمِّ مُوْسَى رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا سَمِعْتُ عَلِيًّا
كَرَّمَ اللهُ وَجْهَهُ يَقُوْلُ مَا رَمِدْتُ وَلاَ صُدِعْتُ مُنْذُ مَسَحَ رَسُوْلُ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجْهِيْ وَتَفَلَ فِيْ عَيْنِيْ.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் 
அன்னவர்கள் எனது
முகத்தை தடவி, எனது கண்ணில் 
உமிழ்ந்ததிலிருந்து எனக்கு கண்நோயோ, அல்லது தலையிடியோ
ஏற்படவில்லை என்று அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்
என்று உம்மு மூஸா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் கூறினார்கள்.
ஸியறு அஃலாமின்
நுபலா
பாகம் – 01 பக்கம் – 571
ஸெய்யிதுனா அலீ
இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அவர்களுக்கு கண்நோய் ஏற்பட்ட நேரத்தில்
அவர்களின் கண்களில் அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
உமிழ்ந்தது மாத்திரமன்றி அருள் நிறைந்த அவர்களின் கரங்களினால் அவர்களின்
முகத்தையும் தடவியிருக்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
உமிழ் நீரின் காரணத்தினால் மாத்திரமன்றி அவர்களின் அருள் நிறைந்த கரங்களின் பறகத் –
அருளினாலும் ஸெய்யிதுனா அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் நோய் நிவாரணம்
பெற்றிருக்கின்றார்கள் என்பது வெள்ளிடை மலையாகும்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
அருள் நிறைந்த உமிழ் நீரை பல சந்தர்ப்பங்களில் ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின்
நோய்களுக்கு நிவாரணமாக, மருந்தாகப் பெற்றிருக்கின்றார்கள். இது அவர்கள் பெற்ற பாக்கியமாகும். இவர்களில்
ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் தங்களின் வாழ்வில் அண்ணலின்
உமிழ் நீரை மருந்தாக பெற்ற சந்தர்ப்பங்களை மேலே கூறியிருக்கிறோம்.
கைபர் யுத்தத்தின் போது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின்
உமிழ் நீரை மருந்தாகப் பெற்ற சம்பவம் பின்வரும் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸஹீஹுல் புஹாரீ – 2942- 3009- 3701
ஸஹீஹ் முஸ்லிம் – 6117
அல் ஹஸாயிஸுல் குப்றா – பாகம் – 01 பக்கம்
– 251
உஸ்துல் ஆபஹ் – பாகம் – 04 பக்கம்
– 99
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் – 6932 – 6933 – 6935
ஹில்யதுல் அவ்லியா – பாகம் – 01 – பக்கம்
– 60
ஷர்ஹுஸ் ஸுன்னா லில்பகவீ – பாகம் – 14 /
3906
அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ் – பாகம் – 01 பக்கம் – 522 பாகம் – 02 பக்கம்
– 235, 581
அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ – 5730 – 6233 –
6304 – 10474
ரியாழுஸ் ஸாலிஹீன் – 175
முஸன்னப் அப்துர் றஸ்ஸாக் – பாகம் – 05/
9637
தலாயிலுன் நுபுவ்வஹ் – பாகம் – 04 பக்கம்
(205 – 208)
அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ் – பக்கம்
– 939
மஜ்மஉஸ் ஸவாயித் – 10200 – 10201 – 10203 – 14707 – 14708 – 10204
அல் பிதாயஹ் வந்நிஹாயஹ் – பாகம் – 08 –
பக்கம் – 26
அஸ் ஸுன்னுல் குப்றா லில்பைஹகீ – பாகம்
– 13/ 18739 – 18854 – 18856
முஸ்னத் அஹ்மத் – 778 – 1608 – 1665 – 23381 – 23419
கன்ஸுல் உம்மால் – 28494 – 30120 – 30129
மிஷ்காதுல் மஸாபீஹ் – பக்கம் – 563
அல் காமில் பித்தாரீஹ் – பாகம் – 02 பக்கம் – 153
அல் இஸ்திஆப் – பக்கம் – 531
ஸியறு அஃலாமின் நுபலா – பாகம் – 01 – பக்கம்
– 288

அல் முஸ்தத்றக் அலஸ்ஸஹீஹைன் – பாகம் – 03/
5844
தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments