Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒடுக்கத்துப் புதன் ஒரு கண்ணோட்டம்

ஒடுக்கத்துப் புதன் ஒரு கண்ணோட்டம்

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள்
 ஒடுக்கத்துப் புதன் என்பதுஸபர்” மாத இறுதிப் புதன்கிழமையை குறிக்கும் இம் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்றும் இம் மாதத்ததில் நல்லகாரியமொன்றும் தொடங்கலாகாதென்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இந்நாளில் வாழையிலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லிம்களிடம் குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லிம்களிடம் இருந்து வந்தது.
இவ்வழக்கம் இருந்து வந்த காலத்தில் இமாம்கள் போல் திறமையும் அறிவுமுதிர்ச்சியும் பெற்றிருந்த மார்க்க அறிஞர்கள் பலர் இருந்தும் கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் இஸ்லாத்துக்கு முரணாணதென்றோ, பித்அத் என்றோ, மூடநம்பிக்கை என்றோ சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை. வௌ்ளிக்கிழமை மிம்பர் மேடையில் முழங்கியதுமில்லை. மாறாக அவர்களும் இவ்வழக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளார்கள். ஆயினும் சமீப காலத்தில் படித்துப் பட்டம் பெற்ற சிலர் ஹறாம்”என்றும், பித்அத்” என்றும், மூடநம்பிக்கை” என்றும் பேசியும், எழுதியும், மிம்பர்-மேடையில் முழங்கியும் வருகின்றார்கள்.

எனவே இதுபற்றி திருக்குர்ஆனும், நபிமொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களான இமாம்களும் தெரிவித்துள்ள தகவல்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றோம். இமாம்களையும், மகான்களையும் தூக்கி எறிந்து விட்டு அவர்களால் எழுதப்பட்ட நூல்களைப் புறக்கணித்து விட்டு தமக்கு குர்ஆனும், ஹதீதும் போதுமென்று சொல்பவர்களுக்கு இக்கட்டுரை இனிக்கவுமாட்டாது. மணக்கவுமாட்டாது. கழுதைக்கு குங்குமம் மணப்பதில்லை என்பது பொய்யா மொழி. கண்டதெற்கெல்லாம் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதிலிருந்தும் நேரடியான தெளிவான ஆதாரம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்போர் இல்முல் இல்ஹாம்”இல்முல்லதுன்னீ” என்று ஒரு வகை அறிவுண்டு என்பதையும் சிந்தனையில் கொள்ள வேண்டும்.
இப்படியயொரு அறிவுண்டு என்பது திருக்குர்ஆனின் ஆதாரம் கொண்டும், சரியான ஹதீதுகளின் ஆதாரம் கொண்டும் நிறுவப்பட்ட விடயமென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நபீமார்களுக்கு வஹீயும் இருந்தது. இல்ஹாம் என்ற அறிவும் இருந்தது. ஆனால் நபீமாரல்லாத வலீமார், நல்லடியார்களுக்கு இல்ஹாம் மட்டும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது.
ஒருவர் ஒரு விடயத்தை சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் நீங்கள் சொல்வதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீதிலும் ஆதாரம் உண்டா? என்று கேட்கும் போது அவர் எனக்குத் தெரியாது, ஆனால் இதை எனது இல்ஹாம்” என்ற அறிவின் மூலம் சொன்னேன் என்று அவர் சொல்வாராயின் அவரை ஏற்றுக் கொள்வதா? அல்லது இல்ஹாமும் கத்தரிக்காயும் என்று சொல்லி அவரைத்தூக்கி எறிவதா? அவரைத் தூக்கி எறிந்தால் திருக்குர்ஆனும், நபீமொழிகளும் கூறுகின்ற இல்ஹாம்” என்ற அறிவை தூக்கி எறிவததாகிவிடும். ஆகையால் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏற்றுக் கொள்வதாயினும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை ஷரீஅத்” என்ற தராசில் நிறுத்துப் பார்க்க வேண்டும். அவரின் கொள்கையும், நடவடிக்கைகளும் ஷரீஅத்துக்கு முரணில்லாதிருந்தால், அவர் ஒரு நல்லடியார் என்று பரவலாக அறியப்பட்டவராயிருந்தால், அவர் சொன்ன விடயம் ஷரீஅத்துக்கு முரணில்லாதிருந்தால் அவரின் பேச்சை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி அவரை தூக்கி எறிந்துவிடலாகாது. இந்த அடிப்படையில் ஒடுக்கத்துப் புதன் தொடர்பாக வலீமார்களும், இறைஞானிகளும் கூறியுள்ள கருத்துக்களை சிந்தனையிற் கொண்டு செயல்பட வேண்டும்.
ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதமா?
ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்ற அபிப்பிராயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன் வாழ்ந்த மக்களிடம் இருந்தது. இது ஒரு தவறான அபிப்பிரயமாகும். இதனால் தான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்

لا عدوى ولاطيرة ولاهامة ولاصفر في الإسلام

இஸ்லாம் மார்க்கத்தில் தொற்று நோய், பறவை ஜாதகம், ஆந்தை கத்துவதால் மரணம் நிகழ்தல், ஸபர் மாதம் மிடிமைக்குரியது என்பன இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை என்று அருளினார்கள்.
இதன் கருத்து ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதமில்லை என்பதாகும். அனால் அல்லாஹ் நாடினால் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை ஸபர் மாதத்திலும் தருவான். ஏனைய மாதங்களிலும் தருவான். ஆயினும் ஸபர் மாதம் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை சுயமாக ஏற்படுத்துமென்று கொள்ளுதல் பிழையானதாகும். அதாவது ஷிர்க்” என்ற இணைவைத்தலை ஏற்படுத்தக்கூடியதாகும்.
ஏனெனில் அல்லாஹ் தவிர சுயமாகச் செய்வதற்கு எவருக்கும் எதற்கும் சக்தி இல்லவே இல்லை. இதுவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். லாஸபர பில் இஸ்லாம்” என்ற வசனம் இக்கருத்தையே வலியுருத்துகின்றது. தவிர ஸபர் மாதம் எவருக்கும் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவை வராதென்று கருத்தல்ல.
நாட்களில் கெட்ட நாள் உண்டா?
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது.

   إنّا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر

நிச்சயமாக அவர்கள் மீது “ஆத்” கூட்டத்தினர் மீது “நஹ்ஸ் உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். திருக்குர்ஆன்  கமர் அத்தியாயம் – வசனம் – 19

فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات

நிச்சயமாக அவர்கள் மீது “நஹ்ஸ் உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். திருக்குர்ஆன் – புஸ்ஸிலத் அத்தியாயம் – வசனம் – 16
மேற்கண்ட இருவசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங்காற்றை அனுப்பி அவர்களை தண்டித்ததாகக் கூறியுள்ளான். மேற்கண்ட இரு வசனங்களிலும் நஹ்ஸ் என்ற சொல் ஒருமையாகவும், இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் நஹ்ஸ் உடைய நாள் ஒன்று உண்டு என்பது தெளிவாகின்றது.
அந்த நாள் எது என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. அதோடு அந்த நாள் எந்தமாதத்திலுள்ள நாள் என்பதிலும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இவ்விபரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் ஆத்” கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். இதில் கூட வரலாற்றாசிரியர்களிடத்தில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலரின் கருத்தையும் இங்கு தருகின்றோம்.
அந்த நாள் புதன்கிமைதானென்று அநேக அறிஞர்களின் கருத்து கூறியுள்ளார்கள். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றித் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை.
தப்ஸீர் றூஹூல் மஆனி ஆசிரியர் அவர்கள் தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27ம் பாகம் 119ம் பக்கத்தில் அது ஷவ்வால் மாதப் பிற்பகுதியிள்ள புதன்கிழமை என்று  கூறியுள்ளார்கள்.
அல்லாமஹ் வகீஉ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “குறர் ” என்ற நூலில், ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன்கிழமை “நஹ்ஸ்” உடைய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் வந்துள்ள நபி மொழியை இப்னு மர்தவைஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களும், அல்ஹதீபுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள்.
இமாம் தபறானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்த நாள் புதன்கிழமை என்று தங்களின் தபறானி என்ற நூலில் பதிவுசெய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபிமொழிகளையும் அபூஹாதம், இப்னுஜவ்ஸி, இப்னு றஜப், ஸகாவி ஆகியோர் ழயீப்” பலங்குறைந்தவை என்று கூறியுள்ளார்கள்.
புதன்கிழமை நஹ்ஸ்” உடைய நாள் என்று தகவல்கள் இருப்பது போல் அது நல்ல நாளென்றும் தகவல்கள் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமி, ஷுஅபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன்கிழமை மதியநேரத்தின் பின் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இமாம் புர்ஹானுள் இஸ்லாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிதாயஹ் எனும் நூலில் வந்துள்ளதாக தங்களின் தஃலீமுல்முதஅல்லிம்”  என்ற நூலில், புதன்கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஔியைப்படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் தான் பெரியோர்கள் – ஹஸ்றத்மார்கள் கல்வி சம்மந்தமான வகுப்புக்களை புதன்கிழமை தொடங்கி வந்துள்ளார்கள். அத்தோடு புதன்கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாகக் கணிக்கப்படுகின்றது.
எவனாவது புதன்கிழமை மரங்களை நாட்டி ஸூப்ஹானல் பாஇதில் வாரிதி” என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபி மொழியை ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் றஹிமஹுல்லாஹ் அவர்களும் தைலமீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் தமது நூல்களில் பதிவுசெய்துள்ளார்கள். இந்த நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள்.
புதன்கிழமை நஹ்ஸ் உடைய நாள் என்பதற்கான சில தகவல்களை இங்கு தருகின்றோம். எமது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன்கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்த நபி மொழி பிர்தவ்ஸ் என்ற நூலில் பதிவாகியுள்ளது.
வார நாட்களில் சனிக்கிழமை – சூட்சி, துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக்கிழமை மரம் நாட்டுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். புதன்கிழமை கொடுக்கள் வாங்களுக்குப் பொருத்தமற்ற நாளாகும். வியாழக்கிழமை தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்குமுரிய நாளாகும். வௌ்ளிக்கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும் என நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபீ மொழியை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவித்ததாக அபூ யஃலா றஹிமஹுல்லாஹ் அவர்களும், அபூஸயீத் றழி அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களும், தமாம் றஹிமஹுல்லாஹ் அவர்களும் அல் பவாயித்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆயினும் ஸகாவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த நபீ மொழி பலவீனமானதென்று கூறியுள்ளார்கள்.
வெண்குஷ்டம், கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில்தான் வெளியாகுமென்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நபீ மொழியை இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாக இப்னு மாஜஹ்வும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.
புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும், அவ்வாறு செய்வதால் குஷ்ட நோய் வருமென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு நோயாளியிடம் குசலம் விசாரிக்கச் செல்வது நல்ல காரியமாயினும் அதைப் புதன் கிழமை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லதென்றும் தகவல் கூறுகின்றன.
புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாகக் கருதப்படுமென்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் அர்றவ்ழஹ்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்.
றூஹுல்பயான்” என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல் வால்யும் 09 பக்கம் 324ல் புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது சிறந்ததென்று கூறப்பட்டுள்ளது.
தண்டனை பெற்ற எந்தவொரு கூட்டமாயினும் அது புதன்கிழமையிலேயே தண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் றூஹுல்பயான் வால்யும் 08 பக்கம் 328 இடம்பெற்றுள்ளது.
ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும், வருட நாட்களில் அந்த நாளொன்று மட்டுமே மிகவும் கஷ்டமான நாளென்று இறைஞானிகள் சொல்லியிருப்பதாக முஜர்றபாதுல் தைறபீ” என்ற நூல் 103 பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அஷ்ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஸகர் றஹிமஹுல்லாஹ் அவர்கள், தங்களின் ஞானகுரு ஹாஜா முயீனுத்தீன் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அவ்றாத்” தொகுப்பில் பின்வருமாறு இருக்கத்தான் கண்டதாகக் கூறியுள்ளார்கள்.
ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் – துன்பங்கள் இறங்குகின்றன. அவையாவும் ஸபர் மாதத்தில் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள்தான் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரகஅத் தொழுது ஒவ்வொரு ரகஅத்திலும் பாதிஹஹ் ஸூறா”, ஓதிய பின் இன்னா அஃதைனா கல்கவ்தர் என்ற ஸூறத்தை 17 தரமும், குல் ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும், குல் அஊது பிறப்பில் பலக் ஒருதரமும், குல்அஊது பிறப்பின்னாஸ் ஒருதரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவான் பின்பு ஸலாம்” என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக் குடிக்கவும் வேண்டும்.
பழாயிறுஷ்ஷுஹூரில்
ஹிஜ்ரிய்யஹ் –
பக்கம் – 33,34 
ஸபர் மாதம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது சிறந்ததென்று அநேகர் அபிப்பிராயம் கூறுகின்றார்கள் என்றும்,

من بشّر ني بخروج صفر أبشّره بالجنّة

ஸபர் மாதம் முடிந்துவிட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் ஹயாதுல் ஹயவான்” என்ற நூல் முதலாம் பாகம் 120ம் பாகத்தில் கூறப்பட்டுள்ளது.
இஆனதுத் தாலிபீன்” என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும் மக்காவில் பிறந்து திரு மதீனஹ் நகரில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நிஹாயதுல் அமல்” என்ற சட்ட நூல் 208ம் பக்கத்தில் ஒடுக்கத்துப்புதன் பற்றிக் குறிப்பிடுகையில், ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் லவ்ஹுல் மஹ்பூள்” பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு ஸபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப் பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்துக் குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்படமாட்டாதென்று கூறியுள்ளார்கள்.
ஒடுக்கத்துப்புதன் கதையும் வாழை இலையில் இஸ்ம்” எழுதிக் குடிக்கும், குளிக்கும் கதையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூடநம்பிக்கை என்று சொல்வோர் மேற்கண்ட நூலாசிரியர் மக்கஹ்வில் பிறந்து திருமதீனஹ்வில் சமாதி கொண்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும், குறிப்பாக ஸபர்” மாதத்தின் இறுதிப் புதன்கிழமையும் நஹ்ஸ்” மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரண வருத்தம் ஸபர்” மாதத்தின் இறுதிப் புதன்கிழமை ஆரம்பமானதைக் கருத்திற் கொண்டும் அன்றைய தினம் திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் ஹறாம்” ஆகவோ பித்அத்” ஆகவோ ஷிர்க்” ஆகவோமாட்டாது. அருள்பெற நாடி திருக்குர்ஆன் வசனங்களை அன்றைய தினத்திலோ வேறு தினத்திலோ குடிப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
எனவே “ஸபர்” மாதத்தின் இறுதிப் புதன்கிழமையான ஒடுக்கத்துப் புதன்கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது காகிதம் பீங்கான் போன்றவற்றிலோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பதும் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட காரியமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்துக்கு முரணாகிவிடாது.  அதனால் ஏதோ ஒருவகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இதை எதிர்ப்போர் இவ்விடயத்தை ஆழமாக ஆய்வு செய்து இச்செயல் ஷிர்க்” என்றும் பித்அத்” என்றும், மூடநம்பிக்கை என்றும் பத்வா” வழங்குவதையும், மின்பர் மேடைகளில் முழங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகள் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபீ மொழிகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியுமென்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வழக்கம் ஹறாம்” என்பதற்கோஷிர்க்” என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் முபாஹ்” ஆகுமென்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை எதிர்ப்போர் இது விடயத்தில் குறைந்தபட்சம் விரும்புவோர் செய்யட்டும், விரும்பாதோர் விட்டு விடட்டுமென்றாவது சொல்ல வேண்டுமென்று அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
ஓர் ஊரில் தொன்று தொட்டு நடந்துவந்த ஒரு வழக்கம் முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் அதை அப்படியே விட்டுவிட வேண்டுமேயன்றி அதைத் தடுத்து நிறுத்துவதும், அதைக் கருவாகக் கொண்டு ஊர் மக்களிடம் பிளவையும், பிரச்சினையையும் உருவாக்குவதும் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழப்பவாதிகளின் கீழ்த்தரமான செயலுமாகும். அஸ்ர் தொழுகையின் பின் தொழுதவர்களில் ஒருசிலர் மறு சிலருடன் முஸாபஹஹ்” கைகொடுத்து ஸலாம் சொல்வது போன்று. சூரிய கிரகண தொழுகையும், சந்திர கிரகண தொழுகையும் மார்க்கத்தில் ஸுன்னத்” ஆக்கப்பட்டுள்ளதற்கான காரணம் இங்கு ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
திருக்குர்ஆன் வசனங்கள்

سلام قولا من ربّ رحيم

سلام على عباده الذين اصطفى

سلام على نوح في العالمين

سلام على إبراهيم

سلام على موسى وهارون

سلام على إلياسين

سلام هي حتّى مطلع الفجر

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments