Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சோதனைகளை சகிப்புத் தன்மையுடன் பொருந்தி வாழ்வதே தியாகத் திருநாளின் அடிப்படையாகும்!

சோதனைகளை சகிப்புத் தன்மையுடன் பொருந்தி வாழ்வதே தியாகத் திருநாளின் அடிப்படையாகும்!

மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் எம் முன்னே தோன்றி விட்டது. இத்திருநாளில் இப்றாஹீம் நபியவர்கள் செய்த தியாகங்கள் படிப்பினைகளையும் சகிப்புத் தன்மையையும் தந்து அனைத்தும் இறை செயல் என்றே பொருந்திக் கொள்வதையே தியாகத் திருநாள் எமக்கு உணர்த்துகிறது.
அவர்கள் செய்த முக்கிய தியாகங்கள்
  1. தன் மைந்தன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்கு கனவில் கண்டு அதை நிறைவேற்றுவதற்குத்
    துணிந்தமை.
  2. நும்றூத் அரசனால் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்டமை.
  3. இறை கட்டளையின் படி தன் மனைவியை மனித சஞ்சாரமற்ற பாலைவனத்தில் கொணர்ந்து விட்டமை.
  4. தன் கோடிக்கணக்கான சொத்துக்களை அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்ததற்காக ஒப்படைத்தமை 

மேற் கூறப்பட்ட தியாகங்கள் அனைத்தும் இப்றாஹீம் (அலை) அவர்கள் செய்த தியாகங்களில் முக்கியவையாகக் கருதப்படுகின்றது. இவற்றை சற்று ஆராய்ந்து அவர்களின் தியாக சிந்தையை தெரிந்து கொள்வதுடன் நாமும் நமது வாழ்வில் ஏற்படும் சோதனைகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்வதே தியாகமாகும்.
மைந்தர் இஸ்மாயீலை தியாகம் செய்ய நாடியமை! – நபீ இப்றாஹீம் அவர்கள் ஓர் இரவு உறங்குகையில் ஒரு கனவு கண்டார்கள். அக்கனவில் தன்மைந்தர் இஸ்மாயீல் அவர்களை அறுத்துக் குர்பான் கொடுக்கும் படி இறைவனால் பணிக்கப்பட்டார்கள். கண்னை விழித்தார்கள் இப்றாஹீம் நபீ. இறை கட்டளையா? பிள்ளை பாசமா? என்ற மனப் போராட்டம் அவர்களுக்கு எழுந்தது.
“கலீலுல்லாஹ்” இறையன்பர் என்ற பட்டம் பெற்ற இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைகட்டளையே மேலென்று கருதி தன் மைந்தரை அறுத்து குர்பான் கொடுக்க திடவுறுதி கொண்டார்கள்.
கனவில் கண்டதை நிறைவேற்ற வேண்டுமா? – ஒருவர் துயில்கையில் பல விடயங்களை கனவில் காண்பார். அவர் கனவில் கண்டதை விழிப்பில் செய்ய வேண்டுமென்று கடமையல்ல. இதுதான் ஷரீஅத் சட்டம். ஆனால்  இப்றாஹீம்
(அலை) அவர்கள் கனவில் கண்டதை நிஜமாக்க நினைத்தார்கள். அதன்படி செயற்பட்டார்கள்.
காரணமென்ன? நபிமார்க்கும் மற்றோர்க்கும் இடையிலுள்ள வித்தியாசம்
இதுதான். நாங்கள் உறங்கும் போது எங்கள் இதயங்களும்
உறங்கிவிடுகின்றன.  ஆனால் நபிமார்கள்
உறங்கும் போது எமது உள்ளம் உறங்குவது போல அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. அவர்கள்
விழிப்பில் இறை நினைவில் இருப்பது போல் உறக்கத்திலும் இருப்பார்கள். இதனை எங்கள்
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பொன்மொழி “றுஃயல் அன்பியாஇ வஹ்யுன்” நபிமார்களின்
கனவு வஹீ என்று சொல்கிறது.
இஸ்லாம் பரவிய ஆரம்ப காலத்தில் தொழுகை
கடமையாக்கப்பட்டபோது தொழுகைக்காக மக்களை எப்படி அழைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.
சிலர் மணியடிப்போம் என்றும், சிலர் தீமூட்டுவோம் என்றும் நவின்றனர். ஆனால் நபி
(ஸல்) அவர்களின் கனவில் அல்லாஹ் தஆலா தற்போது நடைமுறையிலுள்ள “அதான்” சொல்லும்
முறையை கனவில் கற்பித்தான். அதன்படி நபிகள் (ஸல்) தொழுகைக்காக “அதான்” பாங்கு
சொல்லும் முறையை ஏற்படுத்தினார்கள்.
நபிமார்களுக்கு விழிப்பில் “வஹீ” இறை
கட்டளை அறிவிக்கப்படுவது போல் கனவிலும் அவர்களுக்கு “வஹீ” அறிவிக்கப்படும்.  இதன்படி இப்றாஹீம் நபீ தன்கனவில்
அறிவிக்கப்பட்டதை வஹீ எனக் கருதி விழிப்பில் செயற்படுத்த விரும்பினார்கள்.
தன்மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களை
அழைத்து தனது கனவைச் சொன்னார்கள். அதனைக் கேட்ட மைந்தர் அஞ்சவில்லை.
மாறாக இறைவன் கட்டளை எதுவோ அதைச் செய்யுங்கள் தந்தையே என்றார்கள். என்னே தந்தையின்
வழி வந்த மைந்தனின் இறைபக்தி!
பொறுமையின் பிறப்பிடம்  இப்றாஹீம் (அலை) மைந்தரை அழைத்துச்சென்று அறுப்பதற்காக
படுக்கவைத்த போது மைந்தர் தந்தையைப்பார்த்து தந்தையே ஒருதந்தைக்கு ஏற்படும் பாசம்
உங்களுக்கும் ஏற்பட்டு என்னை அறுப்பதற்கு தவறி விடலாம் என் முகத்தை மூடி விடுங்கள்
என்றார்கள். மகனின் இறைபக்தியைக்கண்டு இறை நினைவில் மூழ்கிய நபியவர்கள் கத்தியை மைந்தரின்
கழுத்தில் வைத்து அறுத்தார்கள், அறுத்தார்கள். 
என்னே! அதிசயம் கூர்மையான கத்தியால் அறுக்க முடியவில்லை. இதை பார்த்த
மலக்குகள் ஓலமிட்டு அழுதார்கள். தன் கத்தி அறுக்காததால் கோபம் கொண்ட நபியவகள்
அருகில் கிடந்த பாறையின் மீது கத்தியை எறிந்தார்கள். கத்தியின் கூர்மையால்
கற்பாறையே பிளந்தது.
அப்போது அல்லாஹ் தஆலா நபியின்
திடவுருதியைக்கண்டு ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் ஒரு ஆட்டைக் கொடுத்து ஜிப்ரீலே
விரைவாகச் செல் எனது அன்பரின் மைந்தர் இஸ்மாயீலின் கழுத்தில் சிறிது காயம்
ஏற்பட்டாலும் மலக்குகளின் பட்டியலிலிருந்து உன் பெயரை அழித்து விடுவேன் என்றான்.
பறந்து வந்த ஜிப்ரீல் இப்றாஹீமிடம் ஆட்டைக் கொடுத்து அதை அறுக்கும் படி
பணித்தார்கள். அதைக் கேட்டு இறை ஆனந்தமடைந்த இப்றாஹீம் நபி அல்லாஹுஅக்பர் என்று
தக்பீர் ஓதி ஆட்டை அறுத்தார்கள்.
இச்செயல் அனைத்து பாசத்தை விடவும்
இறைபாசமும் கட்டளையுமே உயர்ந்ததென்பதை எடுத்தோதுகிறது. மேலும் எச்செயலும் இறை
நாட்டத்தைக் கொண்டே நடைபெறுகிறது. என்பதை கத்தி அறுக்காதது எடுத்துக் காட்டுகிறது.
இதனாற்றான் நாம் “லாபாஇல இல்லல்லாஹ்” செய்பவன் அல்லாஹ்வைத்தவிர
வேறுயாருமில்லை என்று நம்பியிருக்கின்றோம். செயலெல்லாம் அவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!
தீக்கிடங்கில் இப்றாஹீம் நபீ
இப்றாஹீம் நபியைப்பிடித்த நிம்றூத்
அரசன் மார்க்கத்தை விட்டுவிடும்படி பணித்தான். அசையாத நபியைக்கண்டு ஆத்திரமடைந்த
நிம்றூத் மக்கள் திரளை அழைத்து எண்பது முழம் நீளமும் நாற்பது முழம்
அகலமும் கொண்ட ஒரு கிடங்கில் விறகைக் குவித்து ஒவ்வொரு பக்கமும் ஏழுநாள் தீ மூட்டினான்.
தீ எரிந்தபோது “மன்ஜனீக்“ கவணில் வைத்து கைகால்களைக் கட்டி எறிய முனைந்தபோது அவர்களால்
எறியமுடியவில்லை. இருநூறு பேர் கவனைத்தூக்கிய போதும் அவர்களால் முடியவில்லை.
 
அப்போது நபியவர்கள் என்னை உங்களால்
எறிய முடியாது “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்று சொல்லி என்னை எறிந்தால் எறிய
முடியும் என்றார்கள். எப்படியும் எறிந்தால் போதும் என்று நினைந்து பரிகாச முறையில்
பிஸ்மில்லாஹ் சொல்லி எறிந்தார்கள். நபி இப்றாஹீம் நெருப்புக் கிடங்கில்
விழுந்தார்கள்.   
அப்போது இறைவன் நெருப்பே, நீ
குளிராகவும் சாந்தியாகவும் இப்றாஹீமுக்கு ஆகிவிடு (அன்பியா -69) என்று
கட்டளையிட்டான். வெளியில் நின்றவர்கள் இப்றாஹீம் ஒழிந்தார் அவரின் மார்கமும்
ஒழிந்தது என்று மகிழ்ச்சிப்பெருக்கால் கூக்குரலிட்டனர். என்னே புதுமை! வெளியில்
நின்றவர்களுக்கு  நெருப்பு நெருப்பாகத்
தெரிந்தது. ஆனால் இப்றாஹீம் நபிக்கு  இறைவன் கட்டளையால் அது கடும் குளிராகவும்
சூடாகவுமின்றி பூந்தோப்பில் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டது.
இப்றாஹீம் நபீ இந்த சோதனைக்கு முகம்
கொடுத்து சகிப்புத்தன்மையை மேற்கொண்டார்கள்.
நெருப்பு சுடும் கரிக்கும் தன்மையைக்
கொண்டது. இஸ்மாயீல் (அலை) அவர்களின்
கழுத்தை கத்தி வெட்டாமல் செயலிழந்தது போல் நெருப்பு சுடும் சக்கியை இழந்தது. எனவே
கத்திக்கு சுயமாக அறுக்கும் தன்மையும் நெருப்புக்கு சுயமாக கரிக்கும் தன்மையும் இல்லை என்பதும்
அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது என்பதும் தெள்ளதிற்புலனாகிறது.
மனைவியையும் மைந்தரையும்
பாலைவனத்தில் விட்டமை!
மீண்டுமொரு
சோதனையை இப்றாஹீம் நபிக்கு  இறைவன்
நடாத்தினான். தனது மனைவி காஜரையும் மைந்தர்
இஸ்மாயீலையும் மனித சஞ்சாரமற்ற பாலைவனத்தில் கொண்டு விடும் படி பணித்தான். இறைவன்
செயலில் அர்த்தமுண்டு என்பதை உணர்ந்த இப்றாஹீம் நபீ இருவரையும் பாலை வனத்தில்
கொண்டு வந்து விட்டார்கள். பாதுகாப்பதில் இறைவன் மிக்கவன் என்பதையும்
எல்லாச்செயலும் அவனைக் கொண்டே நடக்கின்றது என்பதையும் இப்றாஹீம் நபீ நன்குணர்ந்து
நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதன் படி மனைவி ஹாஜறும் மைந்தர் இஸ்மாயீலும்
இறையுதவியுடன் பாலைவனத்தில் இருந்த போது மைந்தருக்கு கடும் தாகம் ஏற்பட்டது. அன்னை
ஹாஜர் எங்கும் நீரைத்தேடினார்கள் நீர் கிடைக்கவில்லை.
“சபா”
மலையிலிருந்து பார்பார்கள் “மர்வா” மலையில் நீர் இருப்பது போல் தோன்றும். அங்கிருந்து
மர்வாவுக்கு ஓடி வருவார்கள். அங்கிருந்து
பார்தால் சபாவில் நீர் இருப்பது போல் தோன்றும். பின் மர்வாவுக்கு
ஓடுவார்கள். இவ்வாறு ஏழு தடவைகள் நீரைத்தேடி ஓடினார்கள். இவ்வாறு அவர்கள் ஓடிய
செயலை அல்லாஹ் தஆலா ஹாஜிகள் செய்யும் “சயீ” கடமையாக ஆக்கினான்.
இறுதியில்
மைந்தர் இஸ்மாயீல் இருந்த இடத்திலேயே நீர் பொங்கி பெருக் கெடுத்தது. ஹாஜர் அவர்கள்
“ஸம்ஸம்” போதும் போதும் என்று சொன்னார்கள். அதுவே ஸம்ஸம் நீர் என்று
அழைக்கப்படுகிறது.
இறைவன்
செயலைப்பொருந்திய இப்றாஹீம் நபியின் சகிப்புத் தன்மையால் இன்று மனித சஞ்சாரமற்ற பாலைவனம்
கஃபதுல்லாஹ் இலங்கும் சொர்க்கமாகக் காட்சியளிக்கிறது.
இறைவனுக்காக தனது சொத்துக்களை
ஒப்படைத்தல்
தியாகத்தின்
செம்மல் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்தில் இறைவனிடம் மலக்குகள் இறைவா, எங்கள் நாயனே, உனது அடியார்கள் எத்தனை
எத்தனையோ? மனிதர்களில் உன்னை அறிந்த தியாக உள்ளம் கொண்ட நல்லடியார் யார்? உன்
நினைவு மிகைத்தவர் யார்? என்று கேட்டனர். அதற்கு இறைவன், எனது நல்லடியார்களில் எனது தூதர்  இப்றாஹீம் (அலை) அவர்கள்தான் என்றான்.
அதற்கு மலக்குகள் “இறைவா, இப்றாஹீம் (அலை) உனது நபியாகும். அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர் பெரும் செல்வந்தராக இருக்கிறார்.
சொத்துசுகத்தில் பேராவல் கொண்டிருக்கிறார் என்பது அவரது வெளியமைப்பில்
காணப்படுகிறது. இத்தகையவர் எப்படி உன்மீது அன்பு கொண்டவராகவும்
உனக்காக தன் சொத்துசுகங்களை தியாகம் செய்பவராகவும் இருக்கமுடியும்? என்று கேட்டனர்.
அதற்கு இறைவன் “மலக்குகளே இதற்கு நான் விடைசொல்வதைவிட நீங்கள் அவரிடம் நேரடியாகச்சென்று அறிந்து கொள்ளுங்கள்
என்றான். உடன் மலக்குகள்
இப்றாஹீம் நபியிடம் மனித உருவில் வந்திறங்கினர்.
அவர்களை கௌரவப்படுத்த நினைத்த இப்றாஹீம் நபியவர்களிடம் மலக்குகள் ‘நாங்கள் எதையும் எவரிடமும் சும்மா ஏற்பதில்லை. ஏதாவது செய்யவேண்டும்’ என்றனர். தாங்கள்
என்ன செய்வீர்கள் என்று இப்றாஹீம் நபீ கேட்டபோது
‘நாங்கள்’
‘தஸ்பீஹ்’ செய்வோம் என்றனர் எத்தனை தரம் தஸ்பீஹ்
செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு தஸ்பீஹ் செய்வோம் என்றனர்.
சரி ஒரு தரம் இறைவனை தஸ்பீஹ் செய்யுங்கள் என்று நபீ சொன்னார்கள். நாங்கள் தஸ்பீஹ்
செய்தால் என்ன தருவீர்கள் என்று கேட்டனர். அதற்கு இப்றாஹீம் அவர்கள் “என்னிடம்
ஆட்டு மந்தைகள் ஐயாயிரம் பட்டிகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கும் ஆயிரக்கணக்கான
நாய்கள் உள்ளன. ஒவ்வொரு நாய்க்கும் தங்கப்பட்டிகள் போடப்பட்டுள்ளன. மற்றும் சொத்துக்கள்
நிறைந்துள்ளன. நீங்கள் ஒரு தரம் தஹ்பீஹ் செய்தால் எனது சொத்துக்களை
மூன்றாகப்பங்கிட்டு ஒரு பங்கை தங்களுக்கு தருவேன் என்றார்கள்.
அப்போது மலக்குகள் (நாங்கள்
தற்போது றமழானில் தறாவீஹ் தொழுகையின் பின் ஓதக்கூடிய “சுப்பூஹுன்
குத்தூஸுன் றப்புல் மலாயிகதி வர்றூஹ்” என்று ஒரு தரம் ஓதினார்கள்.
அதைக்கேட்டு பேரானந்தம் அடைந்த நபியவர்கள் மீண்டுமொருமுறை ஓதுங்கள் என்றார்கள்.
என்ன தருவீர்கள் என்று மலக்குகள் கேட்டபோது இரண்டாவது பங்கையும் தருவேன்  என்றார்கள். அதன்படி திரும்பவும் அதே தஸ்பீஹை ஓதினார்கள். மீண்டுமொரு
தடவை ஓதுங்கள் என்றார்கள். மலக்குகள் மூன்றாவதாகவும் ஓதினார்கள்.
நபியவர்கள் மூன்றாவது பங்கையும் கொடுத்தார்கள்.
தற்போது இப்றாஹீம் நபியிடம் எப்பொருளும்
இருக்கவில்லை. அனைத்தையும் இறை தஸ்பீஹுக்காக கொடுத்துவிட்டார்கள்.  
இப்போது மலக்குகள் நபியிடம் இறை தூதரே
இறைவனின் அன்பரே நாங்கள் மனிதர்களல்லர், இறைவனின் மலக்குகள். தாங்கள்
செல்வத்தில் ஆசை கொண்டுள்ளதாக நினைத்தோம். தங்களைச் சோதிக்கவே
வந்தோம். உங்களுடைய பொருட்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றனர்.
ஆனால் இப்றாஹீம் நபீ 
அவற்றை ஏற்கவில்லை. நான் கொடுத்த பின் எதையும்
திரும்பவும் ஏற்பதில்லை என்று அனைத்தையும் பைத்துல் மாலுக்கு எழுதி விட்டார்கள்.
என்னே இப்றாஹீம் நபியின் தியாக சிந்தை! தனக்கு
ஏற்பட்ட சோதனைகளை பொறுமையுடன் ஏற்று தியாகத்தில் வாழ்ந்தார்கள்.
எனவே, புனித தியாகத்திருநாள்
ஹஜ் பெருநாளில்  இப்றாஹீம் நபியின் தியாகங்களை
அறிந்து எமக்கு ஏற்படும் கஷ்டங்களையும் சோதனைகளையும் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும்
பொருந்தி வாழ்வோம்! வல்ல அல்லாஹ் எமது பொறுமைக்கு வெற்றியைத்
தருவானாக. ஆமீன்!
அல்லாஹு அக்பர். வலில்லாஹில் ஹம்து.
((முற்றும்))

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments