Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வில் “பனா” ஆதல்

அல்லாஹ்வில் “பனா” ஆதல்

“தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் பேசும் இறை ஞானிகள் “பனா” – “பனாஉ” – என்ற சொல்லை தமது கலைச் சொல்லாக பயன் படுத்தி வருகின்றார்கள். எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள்.
“பைஅத்” வழங்கும் ஒரு “ஷெய்கு” ஞானகுரு தனது “முரீதீன்” சிஷ்யர்களிடம் பேசும் போது இச்சொல்லை பயன் படுத்துகின்றார்கள். சிஷ்யர்களோ இச்சொல்லைப் பற்றியும், இது தருகின்ற கருத்துக்கள் பற்றியும் மண்ணளவேனும் அறியாதவர்கள். இத்தகைய சிஷ்யர்களிடம் ஆயிரம் தரம் சொன்னாலுங் கூட அவர்கள் அச்சொல்லின் சுருக்கத்தை – விளக்கத்தை – அறிந்து கொள்கிறார்களில்லை. அதன் சாரத்தை சொல்லிக் கொடுக்காமல் எத்தனை மணிநேரம் குரு பேசினாலும் சிஷ்யர்கள் புரிந்து கொள்கிறார்களில்லை.

“ஷெய்கு” பேசத் தொடங்கினால் சிஷ்யர்கள் ஆடாமலும், அசையாமலும் செவியேற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர விஷயம் இன்னதுதான் என்று விளங்கிக் கொள்கிறார்களில்லை.
இவ்வாறுதான் “ஸூபிஸ” ஞானத்தோடு தொடர்புள்ள கலைச் சொற்களுக்கு விளக்கம் கூறாமல் அவற்றைப் பயன்படுத்துவதுமாகும்.
உதாரணமாக “தாத்” “ஸிபாத்” “தஜல்லீ” “வுஜூத்”, “மள்ஹர்”, “ளாஹிர்”, “கப்ழ்”, “பஸ்து”, “நுசூல்”, “உறூஜ்”, “முறாகபா”, “முஷாஹதா”, “ஹுலூல்”, “இத்திஹாத்”, “வஹ்தத்”, “கத்றத்”, “வாஜிபுல் வுஜூத்”, “மும்கினுல் வுஜூத்”, “மும்தனிஉல் வுஜூத்” முதலான சொற்களை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அறபு மொழியிலான ஸூபிஸ ஞானச் சொற்களுக்கு விளக்கம் கூறாமல் அச்சொற்களை அறபு மொழியில் ஷெய்கு பயன்படுத்துகின்ற காரணத்தால் அவருடன் பல வருடங்கள் ஒட்டி இருப்பவன் கூட – இறையியலை – இறை ஞானத்தை – தெரிந்து கொள்ளாதவனாகவே இருக்கின்றான்.
“ஷெய்கு” ஞானகுரு என்பவர் காலத்திற்கும், சூழ்நிலைக்கும், கேட்போரின் தராதரத்திற்கும் பொருத்தமான பாணியிலேயேதான் கூறும் ஞான விளக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஞான விளக்கம் கூறும் ஒருவன் தான் கூறும் விளக்கத்தை காலத்திற்கேற்ற பாணியில் அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதே எனது கருத்தாகும். தவிர காலத்திற் கேற்றவாறு ஞானக் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதல்ல.
இந்த வரிசையில் “பனா” என்ற சொல் பற்றி சற்று ஆய்வு செய்வோம்.
“தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் பேசும் இறை ஞானிகள் “பனா” என்ற சொல்லை தமது ஸூபிஸ ஞானக் கலைச்சொல்லாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இச் சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் அழிதல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. எனினும் “ஸூபீ” மகான்கள் இச்சொல்லை அழிதல் என்ற பொருளுக்குப் பயன்படுத்தாமல் இதற்கு வேறொரு கருத்தைக் கூறுகிறார்கள்.
அதாவது மனிதன் உலகில் வாழ்வதற்காக அவனுக்கு ஏழு “ஸிபாத்” தன்மைகளை அல்லாஹ் இரவலாக வழங்கியுள்ளான்.
அவை “குத்றத்”
சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உ” கேள்வி, “பஸர்” பார்வை, “இல்ம்” அறிவு, “கலாம்” பேச்சு, “ஹயாத்” உயிர் என்பனவாகும்.
இவ் ஏழுக்கும் உரியவன் – சொந்தக்காரன் – அல்லாஹ்வேயன்றி வேறுயாருமில்லை. ஆயினும் மனிதனின் நல்வாழ்வை கருத்திற் கொண்ட அல்லாஹ் அவ் ஏழு தன்மைகளும் அவன் மரணிக்கும் வரை அவனுக்கு இரவலாக வழங்கப்பட்டவையே ஆகும். ஒருவனிடமிருந்து இரவலாக ஒரு பொருளைப் பெற்றுக் கொண்ட ஒருவன் அது தனக்குச் சொந்தமானதென்று சொந்தம் – உரிமை – பேசுவது தண்டனைக்குரிய குற்றமும், அறியாமையும் ஆகும்.
ஏழு தன்மைகளை மட்டும் மனிதனுக்கு இரவலாக கொடுக்கவில்லை. மனிதனிடமுள்ள பொருளாதாரம், பணம், காணிபூமி, சொத்து சுகம் எல்லாமே அல்லாஹ்வால் அவனுக்கு இரவலாக வழங்கப்பட்டவையே ஆகும்.
இவை மட்டுமல்ல. மனிதனே இரவல்தான்.
ஒரு மனிதன் தனக்கு இரவலாக வழங்கப்பட்ட ஏழு தன்மைகளை வழங்கியவன் கேட்டபின் கொடுப்பதை விட அவன் கேட்கு முன் கொடுத்து விடுவது மிகச் சிறந்ததாகும். கேட்டுக் கொடுப்பது இயற்கை மரணத்தோடு சம்மந்தப்பட்டது. ஒருவனுக்கு மரணம் ஏற்பட்டால் அவனுக்கு இரவலாக வழங்கப்பட்டவை யாவும் அவன் கொடுக்காமலேயே வழங்கியவனை அடைந்து விடுகின்றன.
எனினும் இரவல் தந்தவன் கேட்ட பின் கொடுப்பதை விட அவன் கேட்கு முன் கொடுப்பது அவனின் அன்பை கிள்ளித் தராமல் அள்ளித்தரும் செயலாகும்.
மரணம் வருமுன் தான் பெற்ற இரவல் தன்மைகள் ஏழையும் வழங்கியவனிடம் கொடுத்து, தானுமில்லை தனக்கென்று ஒன்றுமில்லை என்ற நிலைப்பாட்டை அடைவது – உணர்வைப் பெறுவது “பனா” என்று ஸூபிஸ ஞானக் கலையில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையை அடைந்தவன் – இந்த உணர்வைப் பெற்றவன் – லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற திருக்கலிமா தருகின்ற அல்லாஹ் தவிர ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவான்.
மனிதன் தன்னிடமுள்ள ஏழு தன்மைகளையும் அல்லாஹ் இடம் கொடுத்து தானுமில்லை, தனக்கென்று ஒன்றுமில்லை. என்ற உணர்வை அடைவதற்கு ஸூபிகள் ஒருவழி சொல்லித் தந்துள்ளார்கள்.  
அதாவது பின்வரும் “திக்ர்”களைக் கொண்டு தன்னிடமுள்ள – தனக்கு இரவலாக வழங்கப்பட்ட – ஏழு தன்மைகளையும் ஒவ்வொன்றாக வழங்கியவனிடம் ஒப்படைத்து விடுவதாகும்.
அந்த “திக்ர்”கள் பின்வருமாறு.لا قدير إلّا الله  சக்தியுள்ளவன் அல்லாஹ்
தவிர வேறுயாருமில்லை. இந்த திக்ரை எண்ணிக்கையின்றி “சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர யாருமில்லை” என்ற கருத்து மனதில் உருதியாகும் வரை செய்ய வேண்டும் – சொல்ல வேண்டும்.
 لا مريد
إلّا الله
நாட்டமுள்ளவன் அல்லாஹ்
தவிர வேறுயாருமில்லை. இந்த திக்றையும் எண்ணிக்கையின்றி “நாட்டமுள்ளவன் அல்லாஹ் தவிர வேருயாருமில்லை” என்ற கருத்து உறுதியாகும் வரை செய்ய வேண்டும்.
இதே அடிப்படையில்
لا سميع إلّا الله  கேட்பவன்
அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை,
لا بصير الّا الله  பார்ப்பவன்
அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை,
لا عليم الّا الله  அறிவுள்ளவன்
அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை,
لا متكلّم الّا الله  அல்லாஹ்
தவிர பேசுபவன் வேறுயாருமில்லை.
  لا حيّ الّا الله உயிருள்ளவன் அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை
என்ற “திக்ர்”களையும் செய்ய வேண்டும்.  
ஒவ்வொரு திக்ரையும் மேலே சொன்னது போல் எண்ணிக்கையின்றிச் செய்யவும் வேண்டும். அதன் கருத்து மனதில் பசுமரத்தாணி போல் பதியும் வரையும் செய்யவும் வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பல நாட்கள் செய்து வரும் போது செய்து வந்தவனிடம் தானுமில்லை, தனக் கென்றும் ஒன்றுமில்லை, எல்லாமே அல்லாஹ்வும் அவனின் செயலும் மட்டும்தான் என்ற உணர்வு ஏற்பட்டு விடும்.
ஏழு தன்மைகளும் அல்லாஹ்வுக்குரியவையே தவிர தனக்குரியவை அல்ல என்று முடிவு செய்தவன் மரணித்தவனேயாவான். எப்போது ஒருவன் மரணிக்கின்றானோ அப்போதே அவனுக்குيوم القيامة  மறுமை
நாள் உண்டாகி விடும். இதே கருத்தை கொண்டதாகவேموتو قبل ان تموتو  நீங்கள்
மரணிக்கு முன் மரணித்து விடுங்கள் என்ற அருள் மொழி அமைந்துள்ளது.
இந்த அடிப்படையில் சொல்லப்பட்ட நபீ மொழித் தத்துவம்தான் “லாயிலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை என்ற அத்வைத தத்துவம்.

எதார்த்தத்தில் அல்லாஹ் தவிர ஒன்றுமில்லை என்றும், பற்பல நாமரூபங்களில் தோற்றுபவன் அவனே என்றும் நம்புதலும், அனுபவிப்பதுமே “பனா” என்று கூறப்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments