Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்

சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்


தொடர் – 04

ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்


இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர்.
ஹஸ்ரஜ் வம்சத்தைச் சேர்ந்த மதீனாவாசி, பத்ர் யுத்தம்
மற்றும் பல யுத்தங்களில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களுடன் கலந்து கொண்டவர்கள். தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைப்பது என்ற
ஆலோசனை ஸஹாபாக்களின் மத்தியில் முன்வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள்
ஒரு கனவு கண்டார்கள். அதில் பாங்கு சொல்லும் முறை இவர்களுக்கு கனவில்
அறிவிக்கப்பட்டது. தான் கண்ட கனவை நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களிடம் அவர்கள் கூறிய போது அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
ஸெய்யிதுனா பிலால் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு கனவில் அறிக்கப்பட்டது
போன்று பாங்கு சொல்லும்படி பணித்தார்கள். இவர்கள் அபூமுஹம்மத் என்ற புணைப் பெயர்
கொண்டு அழைக்கப்பட்டார்கள். மதீனா முனவ்வராவில் தனது 64வது வயதில் மரணித்தார்கள். இவர்களின் ஜனாஸா தொழுகையை ஸெய்யிதுனா உத்மான் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் நடத்தினார்கள்.

இத்தகைய உயர்
அந்தஸ்தினைப் பெற்ற இவர்களிடமும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் காணப்பட்டன. அவற்றை அன்னவர்கள் மிகவும் கண்ணியமாகப்
பாதுகாத்தார்கள்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் அரள் நிறைந்த முடிகள் இவர்களுக்குக் கிடைத்த
வரலாறு பற்றி இவர்களின் புதல்வர் ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறிக்காட்டுகின்றார்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் காலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் நம்பிக்கை
மிக்க தாபியீன்களில் ஒருவர் என்று ஸெய்யிதுனா இப்னு ஹிப்பான் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் கூறுகின்றார்கள்.
وَقَدْ أَخْرَجَ الْبُخَارِيْ فِيْ التَّارِيْخِ مِنْ
طَرِيْقِ يَحْيَ بْنِ أَبِيْ كَثِيْرٍ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ أَنَّ
مُحَمَّدَبْنَ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ حَدَّثَهُ أَنَّ أَبَاهُ شَهِدَ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الْمَنْحَرِ وَقَدْ قَسَمَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الضَّحَايَا فَأَعْطَاهُ مِنْ
شَعْرِهِ.
யஹ்யப்னு அபீ கதீர் அவர்கள் மூலம் கிடைத்த செய்தியை இமாமுனா புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனக்குக் கூறியதாக அபூஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகின்றார்கள்.
அவர்களின் தந்தை அறுக்குமிடத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடனிருந்தார்கள். நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அறுக்கப்பட்ட இறைச்சிகளைப் பங்கு
வைத்தார்கள். அவர்களுக்கு அன்னவர்களின் முடியைக் கொடுத்தார்கள்.
அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ்ஸஹாபஹ்
பக்கம் 774
حَدَّثَنَا
يَحْيَ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ
زَيْدٍ حَدَّثَهُ أَنَّ أَبَاهُ شَهِدَ الْمَنْحَرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَوَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ. قَالَ فَقَسَمَ
رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصْحَابِهِ ضَحَايَا.
فَلَمْ يُصِبْهُ وَلَا صَاحِبَهُ. قَالَ فَحَلَقَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ فِيْ ثَوْبِهِ فَأَعْطَاهُ. فَقَسَمَ مِنْهُ عَلَى
رِجَالٍ وَقَلَّمَ أَظْفَارَهُ فَأَعْطَا صَاحِبَهُ. فَإِنَّهُ عِنْدَنَا
لَمَخْضُوْبٌ بِالْحَنَّاءِ وَالْكَتَمِ
.
யஹ்யா றழியல்லாஹு தஆலா அன்ஹு பின்வருமாறு கூறுகின்றார்கள். முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனக்குக் கூறியதாக அபூஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.
தனது தந்தையும்,
மதீனாவாசிகளில் ஒருவரும் அறுக்குமிடத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களுடன் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் உடன் தங்களின் துணியில் தங்களின் தலையை மழித்து
அதை அவர்களுக்குக் கொடுத்தார்கள். அங்கிருந்த சிலருக்கு அந்த முடிகளிலிருந்து
அவர்கள் பங்கு வைத்தார்கள்.
தங்களின்
நகங்களைக் களைந்தார்கள் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்கள். அதை அவர்களின் தோழருக்கு கொடுத்தார்கள்.
அது
மருதோன்றி கொண்டும், ஒரு வகை சாயம் கொண்டும் எங்களிடம் சாயமிடப்பட்டுள்ளது.
அஸ்ஸுனனுல் குப்றா லில்பைஹகீ
பாகம் 01, பக்கம் 38
மேற் சொல்லப்பட்ட சம்பவத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சிகள் தங்களின்
தோழர்களுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக தங்களின் முடிகளையும், தங்களின் நகங்களையும் களைந்து அவர்களுக்கு அன்பளிப்புச் செய்திருக்கிறார்கள்.
பெருமானாரின் இந்த செயலில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிச்சயமாக அர்த்தம் நிறைந்து காணப்படுகிறது.
தங்களின் முடிகளில் மாத்திரமல்ல
தங்களின் நகங்களிலும் அருள் உண்டு என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள்.
தனக்குக் கிடைத்த அருள்
நிறைந்த நபீகளாரின் திருமுடிகளை மருதோன்றி சாயமிட்டு தங்களின் இல்லத்தில்
பாதுகாத்தார்கள். ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் இவர்களின் பாதுகாக்கப்பட்ட இந்த அருள் முடிகள் பற்றியே அவர்கள்
புதல்வர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
இங்கே குறிப்பிடுகின்றார்கள்.
அருள் பெற்ற ஸஹாபஹ்கள்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில்
அருள் உஒண்டு என்பதை நம்பியிருந்த காரணத்தினால் அவற்றைத் தங்களின் இல்லங்களில்
மிகவும் கண்ணியமாகப் பாதுகாத்தார்கள். அவர்களால் பாதுகாக்கப்பட்ட அருள் முடிகளே
இன்று உலகெங்கிலும் காணப்படுகின்றன. மக்கள் அவற்றைக் கொண்டு இன்றும் அருள்
பெறுவதற்கு கண்ணியமிக்க ஸஹாபஹ்களே காரணமாகும். அவற்றின் நன்மைகள் அவர்களையே
சாரும்.
ஸெய்யிதுனா முஆவியதுப்னு அபீ சுப்யான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்

இவர்கள் அண்ணல் எம்பெருமான்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் எழுத்தாழராகப் பணி செய்தார்கள். எழுதும் சில சந்தர்ப்பங்களில் முஆவியாவை அழையுங்கள் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் கூறுவார்கள். அபூ அப்திர் றஹ்மான் என்று புனைப்
பெயர் கொண்டு இவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் சிரியாவின் ஆளுனராக இவர்களை நியமித்தார்கள்.
இவர்களுக்காக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் பின்வருமாறு பிரார்தனை செய்தார்கள்.
இறைவா! இவரை நேர்வழி
காட்டக் கூடியவராக, நேர்வழி காட்டப்பட்டவராக ஆக்குவாயாக. இவரைக் கொண்டு நேர்வழி
காட்டுவாயாக.
இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகள் காணப்பட்டன. அவற்றை மிக
கண்ணியத்துடன் பாதுகாத்தார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.
ஸெய்யிதுனா முஆவியா
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
عَنْ مُعَاوِيَةَ قَالَ أَخَذْتُ مِنْ أَطْرَافِ شَعْرِ
رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ كَانَ مَعِيْ بَعْدَ
مَا طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةَ فِيْ أَيَّامِ الْعَشْرِ.
நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் 10வது நாளில் கஃபாவையும்,
ஸபா மர்வாவையும் தவாப் செய்த பின்னர் என்னிடமிருந்த கத்தரி கொண்டு அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடியின்
ஓரங்களிலிருந்து நான் எடுத்துக் கொண்டேன்.
ஸுனன்
நஸாயீ 2989
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகள் எவ்வாறு தனக்குக் கிடைத்தன என்பதை
இங்கே கூறிக்காட்டுகின்றார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.
இதே போன்று இவர்களிடம் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சேட், போர்வை, நகங்கள் போன்ற அருள்
நிறைந்த பொருட்களும் காணப்பட்டன.
ஸெய்யிதுனா கஃபுப்னு
ஸுஹைர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் சமூகத்தில் அவர்களைப் புகழ்ந்து பாடினார்கள்.
மகிழ்ச்சியுற்ற நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்கள்
அணிந்திருந்த அருள் நிறைந்த போர்வையை அவர்களுக்கு அணிவித்தார்கள். இந்த அருள்
நிறைந்த போர்வை தனக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களிடம் முயற்ச்சி
செய்தார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஆனால் அவர்கள்
அதைக் கொடுக்கவில்லை. இறுதியில் அவர்களின் வபாத்தின் பின் அவர்களின்
குடும்பத்தாரிடமிருந்து அந்த அருள் நிறைந்த போர்வையை இவர்கள் பெற்றுக்
கொண்டார்கள். அதை மிகவும் கண்ணியத்துடன் பாதுகாத்தார்கள்.
இதே போன்று ஸெய்யிதுனா
முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் அருள் மிக்க நகங்களும் காணப்பட்டன. அவற்றையும் தங்களிடம்
பாதுகாத்து அவற்றைக் கொண்டும் அருள் பெற்றார்கள்.
இதே போல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் இவர்களுக்கு அணிவித்த அன்னவர்களின் சேட் ஒன்றும்
இவர்களிடம் காணப்பட்டது. அந்த அருள் மிக்க சேட்டைத் தங்களிடம் பாதுகாத்தார்கள்
ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
மொத்தத்தில் ஸெய்யிதுனா
முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள், சேட், போர்வை, நகங்கள்
காணப்பட்டன. அவற்றை அவர்கள் மிகவும் கண்ணியத்துடன் பாதுகாத்தார்கள். அவற்றை
அவர்கள் மிகப் பெறுமதி வாய்ந்த பொருட்களாகக் கருதினார்கள்.
ஏன் அவற்றை அவர்கள்
பாதுகாத்தார்கள்? அவை அருள் மிக்கவை என்று நம்பிய காரணத்தினால். அவை மிகப்
பெறுமதியானவை என்று நம்பிய காரணத்தினால்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் பாவித்த பொருட்களிலும், அன்னாரின் உடலின்
ஒவ்வொறு உறுப்பிலும் அருள் உண்டு என்பதை அவர்கள் நம்பிய காரணத்தினால். தான்
மரணித்த பின்னும் அவை தனக்குப் பயனளிக்கும் என்று உறுதி கொண்ட காரணத்தினால் தனது
மரண கவருத்தத்தின் போது தனது மகனை அழைத்து பின்வருமாறு கூறினார்கள்.
எனது சின்ன மகனே! நான் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் மலசலம்
கழிப்பதற்காக வெளியானார்கள். நான் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு
அவர்களைப் பின் தொடர்ந்தேன். தங்களின் மேனியிலிருந்த இரண்டு துணிகளில் ஒன்றை
எனக்கு அணிவித்தார்கள். இந்த நாளுக்காக அதை மறைத்து வைத்திருந்தேன்.
ஒரு நாள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் தங்களின் நகங்களையும், முடிகளையும்
களைந்தார்கள். அவற்றை எடுத்து இந்த நாளுக்காக நான் அவற்றை மறைத்து வைத்திருந்தேன்.
நான் மரணித்தால் அந்த சேட்டை எடுத்து தனது மேனியுடன் பட்டதாக எனது கபனில்
வையுங்கள். அந்த முடிகளையும், நகங்களையும் எடுத்து எனத வாயிலும், எனது கண்ணிலும்,
என்னில் ஸுஜுதுடைய இடங்களிலும் வையுங்கள். அது பிரயோசனமளித்தால் அதுதான்.
இல்லையெனில் நிச்சயமாக அல்லாஹு தஆலா மண்ணிப்பவனும், அருள் செய்பவனுமாகும்.
அல் இஸ்திஆப் பீ அஸ்மாயில் அஸ்ஹாப்
பாகம் – 02 பக்கம் – 246
மேற் சொல்லப்பட்டவற்றிலிருந்து அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகள், நகங்கள்,
ஆடைகளைக் கொண்டு ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
அருள் பெற்றிருக்கிறார்கள் என்பது நிரூபனமாகிறது.
ஸஹாபஹ் – தோழர்களின் செயல் எமக்கு ஓர் முன்மாதிரியாகும். ஸஹாபஹ்கள்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைப் பெற்றுக்
கொள்வதில் தங்களுக்கிடையில் போட்டி போட்டிருக்கிறார்கள். அண்ணலின் இரகசியம் அறிந்தவர்கள் அவர்கள். அண்ணல் கோமானின்
எதார்த்தம் புரிந்தவர்கள் அவர்கள்.
இதன் காரணத்தினால் தான் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தலை முடிகளை களைகின்ற
சந்தர்ப்பத்தில் ஸஹாபஹ் – தோழர்கள் அவர்களைச் சூழ நின்று அந்த அருள் முடிகளைப்
பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கிறார்கள்.
ஸெய்யிதுனா அனஸ்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
நான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களுக்கு முடிகளை மழிப்பவன் மழிப்பதைக் கண்டேன். அவர்களின்
தோழர்கள் அவர்களைச் சூழ நின்றனர். அவர்களிலிருந்து
விழுகின்ற முடிகள் அவர்களின் கையிலேயே விழுந்தது.
ஸஹீஹ்
முஸ்லிம் 5997
இந்த ஹதீதுக்கு விளக்க மெழுகியவர்கள்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக் கொண்டு அருள் பெறுவது ஆகும்
என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஸஹாபஹ் – தோழர்கள் எந்த அளவு நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக, ஆவலாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஸஹாபஹ்களிடம் பாதுகாக்கப்பட்ட
திருமுடிகள் இன்றும் உலகின் பல பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கொண்டு இன்றும் மக்கள் அருள் பெற்று வருகிறார்கள். மிகவும் கண்ணியமாக அவை பாதுகாக்கபடுகின்றன.
அருள் நபீ அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் பற்றி அல்ஆதாறுன் நபவிய்யஹ் என்ற
நூலில் “அஷ்ஷஹாததுன் நபவிய்யஹ்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட சில குறிப்புக்களை இங்கே தருகிறோம்.

தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments