Thursday, May 2, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஈமான்” விசுவாசத்தோடு மரணிக்க விரும்புகிறீர்களா? பின்வரும் ஓதலை தினமும் ஓதி வாருங்கள்.

“ஈமான்” விசுவாசத்தோடு மரணிக்க விரும்புகிறீர்களா? பின்வரும் ஓதலை தினமும் ஓதி வாருங்கள்.

ஆக்கம்  –  ஷெய்ஹுனா மிஸ்பாஹீ

ஒருவன் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் ஓதி வந்தனாயின் அவன் “ஈமான்” உடன் மரணிக்க அதிக வாய்ப்பு உண்டு.

முன்னோர்கள் (வஹ்ஹாபிஸம் இலங்கை நாட்டுக்கு வருமுன் வாழ்ந்தவர்கள்) அனைவரும் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் தவறாமல் ஓதி வந்துள்ளார்கள். ஐங்காலத் தொழுகை “ஜமாஅத்”தோடு முடிந்த பின் இவ்வோதலை இரண்டாம் “துஆ”வாகவே அவர்கள் ஓதி வந்துள்ளார்கள்.  இவ்வழக்கம்
சிறிய “தைக்கா” முதல் பெரிய பள்ளி வாயல் வரை அனைத்துப் பள்ளிவாயல்களிலும் இருந்து வந்தது.
அக்கால கட்டத்தில் இலங்கை நாட்டிலும், குறிப்பாக காத்தான்குடியிலும் இமாம்கள் போன்ற மார்க்கமேதைகள் பலர் வாழ்ந்திருந்தும் அவர்களில் ஒருவர் கூட கீழ் காணும் “துஆ” ஓதுதல் “பித்அத்” என்றோ, “ஷிர்க்” என்றோ சொன்னதே இல்லை மாறாக அவர்களும் சேர்ந்தே ஓதி வந்துள்ளார்கள்.  
ஆனால் வஹ்ஹாபிஸம் இலங்கை நாட்டில் தலை நீட்டிய பின் நன்மையான காரியங்களிற் பல நிறுத்தப்பட்டது போல் இந்த ஓதலும் நிறுத்தப்பட்டு விட்டது.
எனினும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும், “தரீகா” வழியிலும் நிலை பெற்ற நல்லடியார்கள் இன்றுவரை ஓதி வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

(ஓதல்களும், அவற்றின் பொருளும் சாரமும்)

لاَإِلَهَ اِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ (مَكَانْ)

அல்லாஹ் அன்றி வேறொன்றுமில்லை. எல்லா இடங்களிலும் வணங்கப்பட்டவன் அவன்தான்.
لاَإِلَهَ اِلَّا اللهُ الْمَوْجُوْدُ بِكُلِّ زَمَانٍ (زَمَانْ)

அல்லாஹ் அன்றி வேறொன்றுமில்லை. எல்லா காலங்களிலும் உள்ளவன் அவன் தான்.
لَاإِلَهَ اِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ (إِحْسَانْ)

அல்லாஹ் அன்றி வேறொன்றுமில்லை. அனைத்து உபகாரம் கொண்டும் அறியப்பட்டவன் அவன்தான்.
لاَإِلَهَ اِلَّا اللهُ الْمَذْكُوْرُ بِكُلِّ لِسَانٍ (لِسَانْ)

அல்லாஹ் அன்றி வேறொன்றுமில்லை. அனைத்து நாவு கொண்டும் (அனைத்து மொழி கொண்டும்) “திக்ர்” செய்யப்பட்டவன் அவன்தான்.

لاَإِلَهَ اِلَّا اللهُ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ (شَأْنْ)

அல்லாஹ் அன்றி வேறொன்றுமில்லை. அவன் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான்.
இவ்வாறு ஒதி வந்தால் “ஈமான்” “ஸலாமத்” ஈடேற்றமாகும் என்று முன்னோர்களான அவ்லியாஉகளிற் பலர் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு சொன்னவர்கள் “விலாயத்” ஒலித்தனம் பெற்றவர்களாதலால் அல்லாஹ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்ட “இல்ஹாம் – கஷ்பு” என்ற அறிவின் மூலம் அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்க முடியும். ஆகையால் அவ்லியாஉகளுக்கு மேற் சொன்ன அறிவு ஞானம் உண்டு என்று நம்பி அவர்களின் கூற்றை ஏற்றுச் செயற்பட வேண்டுமேயன்றி அதைப் புறக்கணித்து விடக் கூடாது.
மேற்கண்ட வசனங்கள் “வஹ்தத்துல் வுஜுத்” ஞானத்தை மிகத் தெளிவாகக் கூறிக் கொண்டிருப்பது இறையியற்றுறையோடு தொடர்புள்ளவர்களுக்கு மறைவானதன்று.
ஒன்று – அல்லாஹ்
அன்றி வேறொன்றுமில்லை. எல்லா இடங்களிலும் வணங்கப்பட்டவன் அவன்தான்.
முஸ்லிம்களின் பள்ளிவாயல்களில் வணங்கப்பட்டவனும் அவன்தான். இந்துக்களின் கோவில்களில் வணங்கப்பட்டவனும் அவன்தான். கிறிஸ்தவர்களின் ஷேர்ச்சுக்களிலும் வணங்கப்பட்டவனும் அவன்தான். பௌத்தர்களின் பன்சலைகளில் வணங்கப்பட்டவனும் அவன்தான்.
வணக்க முறைகளில் பிழை இருந்தாலும் கூட, சிலைகளை முன்வைத்து வணங்குவது “ஷிர்க்” இணைவைத்தலாய் இருந்தாலும் கூட எதார்த்தத்தில் வணங்கப்படுகின்றவன் அல்லாஹ்வே யன்றி வேறுயாருமில்லை.
இவ்வாறு நான் எழுதுவதன் மூலம் நான் சிலை வணக்கத்தை சரி காண்கிறேன் என்று எவரும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. சிலை வணக்கம் பிழை என்றே நான் நம்புகிறேன். அதே போல் “கப்ர்” வணக்கமும் பிழை என்றே நான் நம்புகிறேன். எனது கொள்கையும், பிரச்சாரமும் அது பிழை என்பதேயாகும். எனினும் அன்பியாஉகளின் சமாதிகளையோ, அவ்லியாஉகளின் சமாதிகளையோ எந்த ஒரு முஸ்லிமும் வணங்குவதாக நான் அறியவுமில்லை.
   
முஸ்லிம்களில் எவரும் கப்றுகளை வணங்குவதுமில்லை. அவர்கள் அவற்றை கண்ணியப்படுத்துவது மட்டும்தான்.
எவர் எங்கு வணங்கினாலும், எதை முன்வைத்து வணங்கினாலும் எதார்த்தத்தில் – உள்ளரங்கத்தில் – வணங்கப்படுபவன் அல்லாஹ்தான். இத் தத்துவப்படி எவன் எதை வணங்கினாலும் அவன் அல்லாஹ்வையே வணங்குகிறான் என்று அவனை விசுவாசிகள் பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. அவன் செயல் சரியான தென்று முடிவு செய்வதும் கூடாது.
இரண்டு – அல்லாஹ்
அன்றி வேறொன்று மில்லை. எல்லாக்காலங்களிலும் உள்ளவன் அவன்தான்.
சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் முதலான எல்லாக் காலங்களிலும் உள்ளவன் அவன்தான். “கல்க்” – படைப்பு – என்பது சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் முதலான முக்காலத்திலும் இல்லாததாகும்.
மூன்று – அல்லாஹ்
அன்றி வேறொன்றுமில்லை. அனைத்து உபகாரம் கொண்டும் அறியப்பட்டவன் அவன்தான்.
எவன் எவனுக்கு உபகாரம் செய்தாலும் எதார்த்தத்தில் உபகாரம் செய்தவனும், செய்பவனும் அல்லாஹ்தான்.
“மஹ்மூத்” என்பவன் “ஹாமித்” என்பவனுக்கு ஓர் உபகாரம் செய்தால் “ஹாமித்” என்பவனைத் தனது “மள்ஹர்” பாத்திரமாக்கி அவனுருவில் உபகாரம் செய்தவன் அல்லாஹ்தான். கொடுப்பவனும், கொடுக்காமல் இருப்பவனும் – அல்லாஹ்தான்.
தாயிடம் பால் குடிக்கும் பருவத்திலுள்ள ஒரு சிறுவனிடம் அல்லது ஒரு சிறுமியிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிறுவன் அல்லது அச் சிறுமி தனது கையை நீட்டி அப் பொருளைப் பெற்றுக் கொண்டு முதலில் கொடுத்தவனின் முகத்தை பார்க்கும். இதே போல் எவன் எவனுக்கு உபகாரம் செய்தாலும் எதார்த்தத்தில் அவன் மூலம் செய்தவன் அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நான்கு – அல்லாஹ்
அன்றி வேறொன்று மில்லை. அனைத்து நாவுகள் கொண்டும் (அனைத்து மொழி கொண்டும்) “திக்ர்” செய்யப்பட்டவன் அவன்தான். நினைவு 
கூறப்பட்டவன் அவன்தான்.  
உயிருள்ளவைகளும், உயிரில்லாதவைகளும் அல்லாஹ்வை “தஸ்பீஹ்” செய்கின்றன என்பது திருக்குர்ஆனின் கூற்றாகும்.
உயிருள்ள படைப்புகள் யாவும் நமது நாவால் அல்லாஹ்வையே “திக்ர்” செய்கின்றன. ஒவ்வொரு மொழியுள்ளவனும் தனது மொழியால் அவனைத்தான் “திக்ர்” செய்கின்றான்.
மனிதன் மட்டும் தனது நாவாலும், மொழியாலும் அல்லாஹ்வை “திக்ர்” செய்ய வில்லை. நாவுள்ள படைப்புகள் அனைத்துமே தனது நாவால் “திக்ர்” செய்த வண்ணமே உள்ளன.
இது தொடர்பாக இன்னும் ஆழமாக ஆய்வு செய்வோருக்கு வியத்தகு தகவல்கள் கிடைக்கும்.
ஐந்து – அல்லாஹ்
அன்றி வேறொன்று மில்லை. அவன் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான்.
இவ் வசனத்தில் உள்ள “யவ்ம்” என்ற சொல்லுக்கு “நாள்” என்ற பொருள் இருந்தாலும் கூட அதற்கு இவ்விடத்தில் “ஒரு நொடி” என்று பொருள் கொள்வதே சரியானதும், பொருத்தமானதுமாகும்.
இதன் விபரமாவது “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு நாள் என்று பொருள் கொண்டால் அல்லாஹ் ஒவ்வொரு நாளும் ஒரு வேலைதான் செய்கிறான் என்று கருத்து வரும். இது பிழையான கருத்தாகும். ஏனெனில் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் பல வேலைகள் செய்யும் போது அவற்றைப் படைத்த அல்லாஹ் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே செய்கிறான் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே “யவ்ம்”
என்ற சொல்லுக்கு – குல்ல யவ்மின் 
– என்ற
வசனத்துக்கு ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான். என்று பொருள் கொள்வதே சரியானதாகும்.
“யவ்ம்” நாள் என்ற சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் “நொடி” என்று பொருள் உண்டா? என்று ஒருவன் கேள்வியெழுப்பினால் அவனுக்கு பின்வருமாறு விடை சொல்லலாம்.
“யவ்ம்” என்ற சொல்லுக்கு 
அகராதியில் “வக்து” நேரம் என்ற பொருள் இருந்தாலும் கூட அகராதி அடிப்படையில் இதை ஆய்வு செய்யாமல் “மொழி நாகரீகம்” என்ற வகையில் ஆய்வு செய்ய வேண்டும்.
இதன் விபரத்தை ஓர் உதாரணம் மூலம் ஆய்வு செய்து பார்ப்போம்.
கொழும்பில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக “கொழும்பு நீரில் மூழ்கியது” என்று சொல்வது போன்று.
கொழும்பு என்பது பல ஊர்களையும், கிராமங்களையும், சிற்றூர்களையும் உள்ளடக்கிய, அகலம், நீளம், சுற்றளவு என்பன எல்லைப் படுத்தப்பட்ட ஓர் இடத்தின் பெயராகும்.
கொழும்பு நீரில் மூழ்கியது என்றால் மட்டுப்படுத்தப்பட்ட எல்லை முழுவதும் நீரில் மூழ்கி இருக்க வேண்டும். கொழும்பில் பள்ளப் பகுதியில் மட்டும் நீரில் மூழ்கியிருக்க கொழும்பு நீரில் மூழ்கியது என்று சொல்வது போன்று.
இவ்வுதாரணத்தில் கொழும்பு என்ற முழுமையை கூறி அது அடக்கியுள்ள إطلاق الكلّوارادة
الجزء  ஒரு சில இடங்களை மட்டும் கருத்திற் கொள்ளப்படுவது போல் 24 மணி நேரங்களை உள்ளடக்கிய “யவ்ம்” என்ற முழுமையை கூறி அது உள்ளடக்கியுள்ள பல நாடுகளிலும் ஒரு நொடியை கருத்திற் கொள்ளப் படுதல் வேண்டும். இது என்று மொழி நாகரீகத்தில் கூறப்படும். இதன்படி அல்லாஹ் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நொடியிலும் அல்லாஹ் செய்கின்ற வேலை அவன் “தஜல்லீ” வெளியாகுதலேயாகும். இது தவிர அவனுக்கு வேறு வேலை ஒன்றுமே இல்லை.
மேற்கண்ட துஆவின் வசனங்கள்  لاإله الّا الله كلّ
يوم هو في شأن என்ற
வசனத்துடன் நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட ஐந்து வசனங்களையும் உள்ளடக்கிய “துஆ” வுடன் முன்னோர்கள் பின்வரும் வசனங்களையும் சேர்த்து ஓதி வாழ்ந்துள்ளார்கள். அவை

لاإله
الّا الله الأمان الأمان (الأمان) من زوال الإيمان (إيمان) ومن شرّ الشّيطان
(الشّيطان) وظلم السّلطان (السّلطان) الّلهمّ يا قديم الإحسان (الإحسان) برحمتك يا
ارحم الرّاحمين.

மேற் கண்ட ஐந்து வசனங்களும் சரியானவையா? இல்லையா? பலமானவையா? இல்லையா? என்று எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இது பிழை என்று சொல்வதாயின் வஹ்ஹாபிகள்தான் சொல்வார்கள். அதிசயமென்ன வெனில் வஹ்ஹாபிஸக் கொள்கையில் முத்திப் பழுத்த நாஸிறுத்தீன் அல் அல்பானீ அவர்கள் இந்த துஆவை சரி கண்டிருப்பதேயாகும் ஆதாரம் –لا يردّ القدر إلّا
الدّعاء  “லாயறுத்துல் கத்ர இல்லத்துஆஉ” ஆசிரியர்- உஸாமதுப்னு ஹஸன் ஷபந்தர், பக்கம் – 08
மேற்கண்ட துஆவை ஐங்காலத் தொழுகையின் பின் அல்லது எந் நேரத்திலாவது ஒரு நாளைக்கு ஒரு தரமாவது வழமையாக ஓதி வந்தால் “ஈமான்” உடன் மரணிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று அவ்லியாஉகளில் பலர் கூறியுள்ளார்கள்.
வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான அல்பானீ அவர்களைப் பின்பற்றி இந்த “துஆ” சரியானது என்று அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட அதற்கு நாம் கூறியுள்ள விளக்கத்தை முற்றாக மறுத்து உப்பு, உறைப்பு எதுவுமில்லாத இத்துப்போன விளக்கமொன்றை அவர்கள் கூறுவார்கள். அப்பாவி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முற்றும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments