Tuesday, April 30, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர்
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 07
ஒவ்வொரு வருடமும் புனித றமழான் மாதம் 27ம்
இரவு மக்களின் பார்வைக்காக அந்தத் திருமுடி வெளியில் வைக்கப்பட்டு அதை ஓர் விழாவாகக்
கொண்டாடப்படுகிறது. 
தறாவீஹ் தொழுகையின் பின் மக்கள் அந்தத் திருமுடியை
தரிசனம் செய்வார்கள். அந்நேரம் காரீகள் அல்குர்ஆனை ஓதுவார்கள்.
பின்னர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மீது ஸலவாத் கூற ஆரம்பிப்பார்கள். கண்கானிப்பாளர் அந்தத் திருமுடியினை தனது கையில்
எடுத்து மக்கள் அதனை முத்தமிடுவதற்காக வழங்குவார். மக்கள் அதனை
முத்தமிட்டு அருள் பெறுவர். மக்களின் தரிசனம் முடியும் வரை அங்கே
ஸலவாத் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.
பின்னர் உரிய முறையில் அந்தத் திருமுடியை
பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அதற்குரிய இடத்தில் மிக கண்ணியமாக அதை வைக்கப்படும்.
(அல் மஷ்ஹதுல் ஹுஸைனீ) என்ற
அருள் நிறைந்த இந்த இடம் ஸிப்துர் றஸுல் ஸெய்யிதுனா ஹுஸைன் ஷஹீதே கர்பலா றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்களின் அருள் நிறைந்த தலை நல்லடக்கம் செய்யப்பட்ட ஓர் இடம் என்பது
இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
டமஸ்கஸிலுள்ள மகாமுத் தவ்ஹீதிலுள்ள திருமுடி
அஸ்ஸெய்யித் ஸஃதுத்தீன் அல்ஜபாவீ றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்களின் இடம் தான் மகாமுத் தவ்ஹீத் என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தின் ஷெய்ஹாக இருந்த அஷ்ஷெய்ஹ்
பத்றுத்தீன் அஸ்ஸஃதீ அவர்களிடம் இந்தத் திருமுடி பற்றி அஸ்ஸெய்யித் ஸயீத் அல் ஹம்ஸாவீ
அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் “தனது தந்தை
அஷ்ஷெய்ஹ் இப்றாஹீம் ஸஃதுத்தீன் அவர்கள் அவர்களின் தந்தை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் ஸஃதுத்தீன்
அவர்களின் மூலம் இந்தத் திருமுடியைப் பெற்று அதனைக் கொண்டு சிறப்பைப் பெற்றார்கள்.
அவர்கள் அவர்களின் தந்தை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் அமீன் அவர்கள் மூலம்
பெற்று அதனைக் கொண்டு சிறப்பைப் பெற்றார்கள். இவ்வாறு சங்கிலித்
தொடராக அவர்களின் பாட்டன்மார் மூலமாக இந்தத் திருமுடி கிடைக்கப் பெற்றது”. என்று கூறினார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இந்தத் திருமுடியைக் கொண்டு மக்கள் அருள் பெற வேண்டுமென்பதற்காக
அவர்களின் பாட்டன்மார், முன்னோர் செய்தது போன்று இவர்களும் இந்தத் திருமுடியை
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த இரவன்றும், மிஃறாஜுடைய
இரவன்றும், றமழானுடைய 27ம் இரவன்றும் மக்களின்
பார்வைக்காக வைப்பார்கள்.
பைதுல் முகத்தஸிலுள்ள திருமுடி
நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடி இங்கு விஷேட அறையில் பாதுகாக்கப்படுகிறது. ஆரம்பகாலம்
தொட்டு இவ்விடத்தில் அது பாதுகாக்கப்படுகிறது என்பது மிகச் சரியான ஓர் கருத்தாகும்.
இந்தத் திருமுடியின் பொறுப்பு “அந் நபஹானீ”
குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின்
தரிசனத்திற்காக ஒவ்வொரு வருடமும் றமழான் 27ம் நாள் இந்தத் திருமுடி
வைக்கப்படுகிறது.
உக்கா, ஹைபா ஆகிய இடங்களிலுள்ள இரண்டு திருமுடிகள்
இவ்விரண்டு இடங்களும் பலஸ்தீனிலுள்ள இரண்டு
ஊர்களாகும். குஸ்துந்தீனிய்யஹ்வில் பாதுகாக்கப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் இரண்டு திருமுடிகள் இங்கே காணப்படுகின்றன.
இவ்விரண்டு திருமுடிகளையும் மன்னர் முஹம்மத் றஷாத் அவர்கள் இவ்விரண்டு
ஊர் மக்களுக்கும் அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டு திருமுடிகளில்
ஒன்று உக்காவிலுள்ள அஹ்மத் பாஷா பள்ளிவாயிலிலும், மற்றது ஹைபாவிலுள்ள
பெரிய ஜும்அஹ் பள்ளிவாயிலிலும் பாதுகாக்கப்படுகிறது. இவ்விரண்டு
இடங்களிலும் றமழான் மாதம் 27ம் இரவன்று மக்களின் பார்வைக்காக
அவை வைக்கப்படுகின்றன.
ஸப்த், தபரிய்யா, அந் நாஸிறா ஆகிய இடங்களிலுள்ள மூன்று திருமுடிகள் 
இவை பலஸ்தீனிலுள்ள ஊர்கள் இந்தத் திருமுடிகள்
குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள ஓர் பள்ளிவாயிலில் இருந்தவையாகும்.மன்னர்
முஹம்மத் றஷாதினுடைய கட்டளையின் படி இவை இந்த ஊர்களுக்குக் கொண்டு வரப்பட்டன.
அவற்றில் ஒரு முடி ஸப்திலுள்ள யஃகூப் குகை
பள்ளிவாயிலிலும், மற்றயமுடி தபரிய்யாவிலுள்ள அல்மஸ்ஜிதுல் அம்ரீயிலும், மற்றய முடி அந் நாஸிறாவிலுள்ள அலீ பாஷா பள்ளிவாயிலிலும் காணப்படுகின்றன.
ஹிஜ்ரீ 1332ம் வருட இறுதியில்
நடைபெற்ற பாரிய யுத்தத்தின் போது அந் நாஸிறாவிலிருந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் திருமுடி திருடப்பட்டது.
மன்னர் முஹம்மத் றஷாத் அவர்கள் உக்கா, ஹைபா
ஆகிய இரண்டு ஊர்களுக்கும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இரண்டு
திருமுடிகளை அன்பளிப்புச் செய்த போது இந்த மூன்று ஊர்களையும் சேர்ந்த மக்கள் தங்களின்
ஊர்களுக்கும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை அன்பளிப்புச்
செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மன்னர் முஹம்மத் றஷாத் அவர்கள் இந்த மூன்று
ஊர்களுக்கும் மூன்று திருமுடிகளை அன்பளிப்புச் செய்தார். அவற்றைக்
கொண்டு மக்கள் சிறப்புப் பெற்று, அருள் பெற்றனர்.
மன்னர் முஹம்மத் றஷாதினால் அன்பளிப்பச்
செய்யப்பட்ட திருமுடிகள் அனைத்தும் கண்ணாடியினாலான குழாய்களில் பாதுகாக்கப்பட்டிருப்பதை
தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு குழாயும் பல நிறங்களுடைய 40
பட்டுத் துண்டுகளினால் சுற்றப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் றமழான் மாதம் 27ம்
நாள் அஸ்ர் தொழுகையின் பின் அவை மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். மக்கள் அதை தரிசித்து அருள் பெறுவார்கள்.
மேற்கு தறாபுலுஸிலுள்ள இரண்டு திருமுடிகள்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் இந்த இரண்டு திருமுடிகள் பற்றியும் அஷ்ஷெய்ஹ் அந் நாஸிர் அஹ்மத் தறாபுலுஸீ
அவர்கள் எங்களுக்கு பின்வருமாறு கூறினார்கள்.
இவ்விரண்டு முடிகளில் ஒன்று “தறாபுலுஸ்”
நகரிலுள்ள தூர் அவ்த் பாஷா ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக அழகிய அறை ஒன்றில்
பாதுகாக்கப்படுகிறது. அது ஒரு வட்டமான கண்ணாடி போத்தலில் காணப்படுகிறது.
இந்த போத்தல் சிறிய பட்டுத் துண்டுகளால் சுற்றப்பட்டுள்ளது. அது கருங்காலி மரத்தினாலான ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.
ஷஃபான் மாதம் 15ம்
இரவிலும், மிஃறாஜுடைய இரவிலும் அந்தத் திருமுடியை மக்களின் பார்வைக்காக
வைக்கப்படும். அருள் பெறும் நோக்கில் மக்கள் தங்களுக்கிடையில்
முண்டியடித்துக் கொண்டு அதனை முத்தமிடுவார்கள்.
அந்த முடிக்கென்று ஒருவர் பொறுப்பாக இருப்பார்.  அவர் அந்த
முடியை தனது கையில் எடுத்து அதை மக்கள் முத்தமிடுவதற்காக அவர்களுக்கு வழங்குவார். இதற்காக
அவ்காப் அமைச்சினால் இவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
இது குஸ்துந்தீனிய்யஹ்வில் இருந்த முடியாகும். அதை
மன்னர் அஹ்மத் ஹாஷிம் பாஷா தறாபுலுஸுக்குக் கொண்டு வந்தார்.
இரண்டவது முடி உத்மான் ஜும்அஹ் மஸ்ஜித்
என்று பிறசித்தி பெற்ற றாஷித் பாஷா என்ற ஜும்அஹ் பள்ளியில் இருக்கிறது. பெரிய
ஜும்அஹ் பள்ளியிலிருந்து அதை இங்கு கொண்டு வரப்பட்டது. கிழக்குப்
பக்கத்தின் உள்ளிருந்து ஜும்அஹ் பள்ளிவாயலின் மேலுள்ள ஓர் அறையில் அதை வைக்கப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த பட்டினால் சுற்றப்பட்ட ஓர் கண்ணாடி போத்தலில் அது வைக்கப்பட்டுள்ளது.
அது கருங்காலி மரத்தினாலான ஓர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மக்களின் பார்வைக்காக அது வைக்கப்படுகிறது.
அதைக் கண்காணிக்கும் பொறுப்பு முப்தீக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவின் போபாலிலுள்ள திருமுடி
போபாலின் அரசியாக விளங்கிய சுல்தான் ஜஹான்
பேஹம் ஐரோப்பாவுக்கும், குஸ்துந்தீனிய்யாவுக்கும் பிரயாணம் செல்லும்
வழியில் மன்னர் முஹம்மத் றஷாத் அவர்களை சந்தித்தார். அப்பொழுது
அவர் இந்த அரசிக்கு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடிகளில் ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.
போபாலைச் சேர்ந்த சிறந்த இலக்கியவாதி அஸ்ஸெய்யித்
அபூ நஸ்ர் அஹ்மத் பின்வருமாறு கூறுகின்றார்.
அரசி சுல்தான் ஜஹான் பேகம் தனது ஊருக்குத்
திரும்பிய போது தனக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் திருமுடியை அங்குள்ள பெரிய ஜும்அஹ் பள்ளிவாயலில் ஒப்படைப்பதெனத்
தீர்மானித்தார்.
அண்ணலின் திருமுடியை மிக கண்ணியமாக ஓர்
பெட்டியில் வைத்து, போபாலின் அரசராக விளங்கிய அவருடைய மகனை அந்தப்
பெட்டியை சுமக்கும் படி கூறினார். அரசர் அருள் நிறைந்த முடி வைக்கப்படிருந்த
அந்தப் பெட்டியை தனது தலையில் சுமந்து சென்றார்.
மக்கள் அந்தப் பெட்டியை முத்தமிட்டு, அருள்
பெறுவதற்காக தங்களுக்கிடையில் முண்டியடித்துக் கொண்டார்கள். மிகவும்
சிரமத்தின் பின் அந்தப் பெட்டி பள்ளிவாயலை வந்தடைந்தது. பின்னர்
இந்தத் திருமுடியை மக்கள் பார்த்து அருள் பெறும் நோக்கில் அதனை ஒரு விழாவாகக் கொண்டாடினர்.
பின்னர் சில உலமாஉகளின் குறுக்கீட்டினால் இந்த விழா நிறுத்தப்பட்டது.
அதனை மிகவும் கண்ணியமாக ஓர் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
வுஜுதின் தலைவர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடியுடன் தொடர்புடைய சில செய்திகளை நாம் தொகுத்திருக்கிறோம். சரி
எது? பிழை எது? என்பதை அல்லாஹுத் தஆலாவே
மிக அறிந்தவன்.
அல் ஆதாறுன் நபவிய்யஹ்

ஆசிரியர்: அல் அல்லாமஹ் 
அஹ்மத் தைமூர் பாஷா.
தொடரும்…..
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments