Wednesday, May 1, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நோன்புப் பெருநாள் தத்துவங்கள்.

நோன்புப் பெருநாள் தத்துவங்கள்.

(தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

அன்புச் சகோதரா,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

நோன்புப் பெருநாள் தினமான இன்று நீ காலையில் எழுந்து குளித்து உடல் சுத்தம் செய்தாய். புதிய உடை உடுத்து புதுப் பொலிவுடனும், மன மகிழ்ச்சியுடனும் அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயலுக்கு வந்துள்ளாய். இன்னும் சில நிமிடங்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றவுள்ளாய். தொழுகையில் முதல் “றக்அத்”தில் ஏழு தரமும், இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து தரமும் “தக்பீர்” சொல்லவுள்ளாய்.

நீ இன்று ஏன் குளிக்க வேண்டும்? ஏன் புதிய உடை உடுக்க வேண்டும்? ஐங்காலத் தொழுகைக்கு மாறாக ஏன் தொழ வேண்டும்?

இக்கேள்விகளுக்கான விடை உனக்குத் தெரியுமா? இவற்றுக்கான எதார்த்தம் உனக்குப் புரியுமா? எதார்த்தம் புரியாமல் நீ எதைச் செய்தாலும் அது அர்த்தமற்ற வெறும் செயலாகிவிடுமல்லவா? வெறும் செயல் வீணானது. வீணானது தண்டனைக்குரியது.

நீ செய்கின்ற “ஷரீஅத்”தின் எந்த ஒரு செயலாயினும் அதை தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற முப்பெரும் உரை கற்களில் உரைத்துப்பார். இஸ்லாமிய “ஷரீஅத்”தில் கூறப்பட்ட எந்தவொரு செயலாயினும் அர்த்தமற்றதாக இல்லை. நீ இதைப் புரியாமல் இருக்கலாம். அதற்காக அச் செயல் அர்த்தமற்றதென்று எண்ணிக் கொள்ளாதே! இதோ பெருநாளுடன் தொர்புள்ள ஒரு சில தத்துவங்களை உனக்குச் சொல்லிக் காட்டுகின்றேன். கவனத்திற் கொண்டு செயல்படு.

#புதிய_உடை_எப்படி_இருக்க_வேண்டும்?

பெருநாள் தினம் ஆண்களும், பெண்களும் புதிய உடை உடுப்பது “ஸுன்னத்” ஆன அமலாகும். புதிய உடை என்பதன் கருத்து அது கழுவப்படாமல் இருக்க வேண்டும் என்பதேயாகும். புதிய உடையாயினும் அது ஒரு தரமேனும் கழுவப்பட்டால் அது பழைய உடையாகவே கணிக்கப்படும். அதை உடுத்தல் “ஷஸுன்னத்” ஆகாது.

நோன்புப் பெருநாள் உடை வெண்ணிறமானதாயும், ஹஜ்ஜுப் பெருநாள் உடை பல நிறமானதாயும் இருத்தல் விரும்பத்தக்கது.

ஓர் ஆண் பெருநாள் தினம் உடுக்கும் சாரம், ஷேட், பெனியன், தொப்பி, றவ்ஷர், அல்லது ஒரு பெண் உடுக்கும் சாரி, சல்வார், சட்டை, உள்ளாடை எல்லாமே புதியதாக இருத்தல் மிக விஷேடமானதாகும். முடியாதபட்சத்தில் மேற்கண்ட உடைகளில் ஒன்றாவது புதியதாக இருந்தால் புதிய உடை உடுத்த “ஸுன்னத்” உண்டாகிவிடும்.

#புதிய_உடையின்_தத்துவம்.

ஒரு மனிதன் புனித றமழான் மாதம் நோன்பு நோற்றும், ஐங்காலத் தொழுகை. தறாவீஹ், வித்று மற்றும் தஹஜ்ஜுத், ழுஹா போன்ற “ஸுன்னத்” ஆன தொழுகைகள் தொழுதும், உணவு, உறக்கம் குறைத்தும், கோள் சொல்லுதல், புறம் பேசுதல், கோபம் கொள்ளுதல், பெருமை பேசுதல், பொய் சொல்லுதல் போன்ற தீக்குணங்களை விட்டும், விஷேடமாக “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு முழுமையாக மாறு செய்தும் பேணுதலாக இருந்து வந்ததால் அவனின் “கல்பு” என்ற மனதிலுள்ள பாவக்கறை அகன்று அதைச் சூழ்ந்திருந்த இருள் விலகி அது சுத்தம் பெற்று தூய்மையாகிவிடுகிறது. அவன் புதிய மனிதனாகவும், புனிதமானவனாகவும் ஆகிவிடுகின்றான். றமழான் மாதம் அவன் மேற்கொண்ட நல்லமல்கள் அவனைப் புனிதனாக்கிவிட்டன.

இது வெளிக்கண்களுக்குத் தெரியாத மறைவான ஓர் உண்மையாதலால் இவ்வுண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காகவே பெருநாள் தினம் புதிய உடை “ஸுன்னத்” ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெண்ணிற ஆடை விஷேடமாக்கப்பட்டுள்ளது.

றமழான் மாதம் நோன்பு நோற்காமல் வயிறு புடைக்க உண்டு “பர்ழ்” கடமையான, “ஸுன்னத்” ஆன தொழுகைகள் தொழாமல் பாவமான காரியங்களில் நேரத்தைக் கழித்தும், “நப்ஸ்” மனவெழுச்சிக்கு உடன்பட்டும் மனம் போன போக்கில் றமழான் மாதத்தைக் கழித்தவனுக்கு பெருநாளுமில்லை. அவனுக்கு புதிய உடை “ஸுன்னத்” ஆகவும் மாட்டாது. அவன் மற்றவர்கள் போல் புதிய உடை உடுத்து பள்ளிவாயலுக்கு வந்தாலும் கூட அவன் ஒரு நடிகனும், ஏமாற்றுப் பேர்வழியுமே ஆவான்.

#பெருநாள்_தொழுகை.

நோன்புப் பெருநாள் தொழுகை “ஸலாது ஈதில் பித்ர்” என்றும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை “ஸலாது ஈதில் அழ்ஹா” என்றும் சொல்லப்படும்.

எந்தப் பெருநாள் தொழுகையாயினும் இரண்டு “றக்அத்”துகளோயாகும். முதலாவது “றக்அத்”தில் தொழுகைக்கான “நிய்யத்” வைத்து முதலாவதாகச் சொல்கின்ற “அல்லாஹு அக்பர்” “தக்பீரதுத் தஹ்ரீம்” என்று சொல்லப்படும். இது தவிர பெருநாள் தொழுகையில் தொடர்ந்து ஏழு தரம் “அல்லாஹு அக்பர்” சொல்ல வேண்டும். முதலாவதாகச் சொன்ன “தக்பீரதுத் தஹ்ரீம்” என்பதை ஏழில் ஒன்றாகக் கணக்கெடுக்கக் கூடாது. ஆயினும் இந்த “தக்பீர்” சொன்னபின் “வஜ்ஜஹ்து” ஓதுவது “ஸுன்னத்” ஆகும். “வஜ்ஜஹ்து” “ஸுன்னத்” ஆக்கப்படாத தொழுகை “ஜனாஸா” தொழுகை மட்டுமேயாகும்.

ஏழு “தக்பீர்”களில் ஒவ்வொரு “தக்பீர்” சொன்ன பிறகும் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்று ஒரு தரம் சொல்வது “ஸுன்னத்” ஆகும். “வலா ஹல்வ வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்” என்று சொல்வது “ஸுன்னத்” இல்லை. ஒருவர் சொன்னால் அவரின் தொழுகை “பாதில்” வீணாகிவிடாது.

ஏழு தரம் “அல்லாஹு அக்பர்” என்று சொல்வதும், சொல்லும் போது கையை உயர்த்திக் கட்டிக் கொள்வதும் “ஸுன்னத்” ஆகும்.

பள்ளிவாயல்களின் பேஷ் இமாம்கள் ஏழு தரம் கையை விட்டுக் கட்டவும் என்று சொல்லிக் கொடுப்பதை தவறாகப் புரிந்து கொள்பவர்கள் ஒவ்வொரு “தக்பீர்” சொல்லும் போதும் நெஞ்சிலுள்ள கையை கீழே தொங்கவிட்டு மீண்டும் கட்டிக் கொள்கின்றார்கள். இது தவறு. கையை கீழே தொங்க விடாமல் கை நெஞ்சில் இருந்தவாறே மீண்டும் உயர்த்திக் கட்டிக் கொண்டால் போதும். கையை கீழே தொங்கவிட்டுக் கட்டுவதால் சில நேரம் தொடரான மூன்று செயல் ஏற்பட்டு தொழுகை “பாதில்” வீணாகிவிடுவதற்கும் வாய்ப்புண்டு.

ஏழாவது “தக்பீர்” சொன்ன பிறகு “ஸுப்ஹானல்லாஹ்” கலிமா ஓதாமல் “ஸூறதுல் பாதிஹா” ஓத வேண்டும். அது முடிந்த பின் ஏதாவது ஒரு “ஸூறத்” ஓத வேண்டும். “ஸப்பிஹிஸ்ம றப்பிக” என்ற “ஸூறத்” ஓதுவது மிகச் சிறந்தது. குறைந்தபட்சம் “குல்ஹுவல்லாஹு அஹத்” என்ற “ஸூறத்”தையாவது ஓத வேண்டும். ஒன்றும் தெரியாதவர் ஒன்றும் ஓதத் தேவையில்லை. அதன் பின் “றுகூஉ” செய்து வழமை போல் தொழ வேண்டும்.

முதலாவது “றக்அத்”தில் இரண்டாவது “ஸுஜூத்” முடிந்த பின் “கியாம்” நிலைக்கு வரும்போது சொல்லுகின்ற “அல்லாஹு அக்பர்” என்ற “தக்பீர்” தவிர ஐந்து தரம் “தக்பீர்” சொல்ல வேண்டும். ஐந்தாவது “தக்பீர்” சொன்னபின் முதலாவது “றக்அத்”தில் செய்தது போல் செய்து கொள்ள வேண்டும்.

“தக்பீர்” சொல்லி நெஞ்சில் கை கட்டும்போது “ஷாபிஈ” மத்ஹபில் கூறப்பட்ட முறைப்படி கட்டிக் கொள்ள வேண்டும். “அத்தஹிய்யாத்” ஓதும் போது விரல் ஆட்டுவதையும், நெஞ்சுக்கு மேல் கழுத்துக்கு கீழ் கை கட்டுவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நொன்புப் பெருநாள் தொழுகை முடிந்த பின் பெருநாளுக்குரிய “தக்பீர்” சொல்வது “ஸுன்னத்” இல்லை. ஆயினும் அன்பியாஉகள், அவ்லியாஉகள் பேரில் “பாதிஹா” ஓதி “துஆ” ஓதுவது விரும்பத்தக்கது.

#ஏழும்#ஐந்தும்_எதற்கு?

பெருநாள் தொழுகையில் முதலாவது “றக்அத்”தில் ஏழு தரமும், இரண்டாவது “றக்அத்”தில் ஐந்து தரமும் “தக்பீர்” “அல்லாஹு அக்பர்” சொல்வது “ஷரீஅத்” சட்டமாயிருந்தாலும் இது அர்த்தமற்ற வெறும் செயலில்லை. இதற்கும் ஆன்மீகப் பின்னணி உண்டு. அதை அறிந்து செயல்பட வேண்டும்.

“நப்ஸ்” ஏழு வகைப்படும். அவை முறையே “அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா. முத்மஇன்னா, றாழியா, மர்ழியா, காமிலா” என்று சொல்லப்படும்.

ஒரு மனிதனுக்கு “நப்ஸ்” என்பது ஒன்றுதான். அது ஏழல்ல. ஆயினும் அதிலேற்படுகின்ற குணங்கள், தன்மைகள், செயல்பாடுகளைக் கவனித்து அது மேற்கண்ட பல பெயர்களால் அழைக்கப்படும்.

உதாரணமாக முஸம்மில் என்பவனை எடுத்துக் கொள்வோம். அவன் ஆள் ஒருவன்தான். ஆயினும் அவனில் பேராசை இருக்கும் போது நாய் என்றும், காம இச்சை இருக்கும்போது பன்றி என்றும், கொப்பு விட்டுக் கொப்புத் தாவும் குணம் இருக்கும் போது குரங்கு என்றும், மடமை இருக்கும் போது கழுதை என்றும் சொல்வது போன்று.

#நப்ஸ்_அம்மாறா

இவ் ஏழு வகையிலும் மிகக் கீழ்த்தரமானதும், மிகக் கெட்டதும் “நப்ஸ் அம்மாறா” மட்டும்தான். இதைவிட மோஷமான “நப்ஸ்” இல்லவே இல்லை.

இவ்வகை “நப்ஸ்” உள்ள மனிதனிடம் பெருமை, பொறாமை, எரிச்சல், வஞ்சகம், கோபம், பதவி மோகம், பேராசை, பொன்னாசை, பெண்ணாசை, “அனானிய்யத்” அகந்தை, அன்னிய்யத் – நானெனும் உணர்வு முகத்துதி போன்ற தீக்குணங்களும், மதுபானமருந்துதல், திருடுதல், விபச்சாரம் செய்தல், சூதாடுதல். பொய் சொல்லுதல், புறம் பேசுதல், ஒருவனை அடுத்துக் கொடுத்தல் போன்ற தீய பழக்கவழக்கங்களும் நிறைந்து காணப்படும். அதே நேரம் நற்குணங்கள் சிலதும், நல்ல பழக்க வழக்கங்கள் சிறிதளவும் இருக்கலாம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த “நப்ஸ்” பற்றிக் கூறும் போது “இன்னன் நப்ஸ லஅம்மாறதுன் பிஸ்ஸூஇ” நப்ஸ் என்பது தீமை கொண்டு அதிகம் ஏவிக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளான்.

அதாவது “நப்ஸ் அம்மாறா”வில் உள்ளவன் அதிகம் பாவம் செய்து கொண்டே இருப்பான். பாவம் செய்வதில் அவனுக்கு அதிகம் இன்பம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதில் அவனுக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வராது. எந்த ஒரு பயங்கரப் பாவம் செய்தாலும் அது பற்றி வருந்தவோ, கவலைப்படவோ மாட்டான். மூக்கில் மொய்த்த கொசுவைத் தட்டிவிடுவது போன்ற சிறிய விடயமாகவே பாவங்கள் செய்வதை அவன் நினைப்பான்.

இவன் “நப்ஸ் அம்மாறா”வில் உள்ளவன். இவன் நிலை இவ்வாறுதான் இருக்கும். இவன் இந்நிலையில் இருக்கும் வரை அல்லாஹ்வை விட்டும் பல பில்லியன் கிலோ மீற்றர் தூரப்பட்டவனாகவே இருப்பான். சமூகம் கூட இவனைக் கணக்கெடுக்காது. இவன் இந்நிலையிலேயே இருந்து மரணித்தானாயின் இவன் வெற்றி பெறமாட்டான். இவனுக்கு பேரின்பமும் இல்லை. ஆன்மீக உயர்வும் இல்லை. இவன் இப்லீஸின் கூட்டாளி. ஷெய்தானின் செயலாளன். இவன் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியற்றவன். அவனின் திருமுகக் காட்டிசியும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பரிந்துரையும் இவனுக்கு கிடைக்காது.

இவன் தரீகா – ஆன்மீக வழி நடந்தும், ஸூபிஸ ஞானம் கற்றும் படிப்படியாக முன்னேற முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் அருளாளனும், அன்புடையோனுமாவான்.

#நப்ஸ்_லவ்வாமா

இரண்டாவது “நப்ஸ் லவ்வாமா” என்று சொல்லப்படும். இந்த “நப்ஸ்” முந்தின “நப்ஸ் அம்மாறா” போல் இகழப்பட்டதும், இழிவானதாயினும் அதைவிட ஒருபடி சிறந்ததேயாகும்.

இந்த நப்ஸ் உள்ளவர்களிடம் தீக்குணங்களும், தீய பழக்கவழக்கங்களும் இருப்பது போல் நற்குணங்களும், நல்ல பழக்கவழக்கங்களும் ஓரளவு இருக்கும்.

இந்த “நப்ஸ்” உள்ளவன் பாவம் செய்தாலும் கூட அதை நினைத்து வருந்துவான். கவலைப்படுவான். வேதனைப்படுவான். கண்ணீர் வடித்து பாவ மன்னிப்பும் கேட்பான்.

“லவ்வாமா” என்ற சொல்லுக்கு இழித்துரைக்கக் கூடியது என்று அர்த்தம் வரும். இதற்கு இவ்வாறு பெயர் வரக் காரணம் என்னவெனில் இந்த “நப்ஸ்” உள்ளவனை இது இழித்துரைக்கும். அதாவது அவன் ஒரு பாவம் செய்துவிட்டால் அவனை இழித்துரைக்கும். கண்டிக்கும். நீ பாவியாகிவிடடாய், துரோகியாகிவிட்டாய், நீ மனிதனா? அல்லாஹ் உன்னை எவ்வாறு விரும்புவான்? அவனின் அருள் உனக்கு எவ்வாறு கிடைக்கப் போகின்றது? என்று தண்டிக்கும். கண்டிக்கும். ஆனால் முந்தின “நப்ஸ் அம்மாறா” இது போன்றதல்ல. அது அந்த “நப்ஸ்” உள்ளவன் ஒரு பாவம் செய்தால் அவனிடம் நீ ஒரு பாவம் தானே செய்தாய். உலகில் உன்னைவிட அதிக பாவம் செய்பவர்கள் இருக்கின்றார்கள். பயப்படாதே என்று அவனை பாவம் செய்யுமாறு தூண்டிக் கொண்டே இருக்கும்.

இந்த இரண்டாம் “நப்ஸ்” உள்ளவன் கூட வெற்றி பெற முடியாது. இவனும் முந்தினவன் போல் அல்லாஹ்வை விட்டும் பல பில்லியன் கிலோ மீற்றர் தூரப்பட்டவனாகவே இருப்பான். இவனும் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியற்றவனேதான். ஆயினும் “நப்ஸ் அம்மாறா”வில் உள்ளவனை விட இவன் நல்வவனே. இவனும் “தரீகா” வழி நடந்தும், ஸூபிஸ ஞானம் பெற்றும் படிப்படியாக முன்னேற வேண்டும்.

#நப்ஸ்_முல்ஹிமா

இந்த நப்ஸ் முந்தின இரண்டு “நப்ஸ்”களை விடவும் சிறந்ததாயினும் இது கூட இகழப்பட்டதேயாகும். இந்த “நப்ஸ்” உள்ளவனிடம் நற்குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் நிறைய இருக்கும். அதே நேரம் தீக்குணங்களும், தீய பழக்க வழக்கங்களும் இல்லாமற் போகாது. இவனும் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியற்றவன்தான். இவனும் “தரீகா” வழி நடந்தும், ஸூபிஸ ஞானம் கற்றும் முழு மனிதனாக முயற்சிக்க வேண்டும்.

“முல்ஹிமா” என்ற சொல்லுக்கு நன்மை, தீமையைப் பிரித்துணர்த்தக் கூடியது என்று பொருள்வரும். அதாவது இந்த “நப்ஸ்” உள்ளவனுக்கு எது நன்மை, எது தீமை என்பது தெரியும். ஆயினும் அவன் நன்மையும் செய்வான். தீமையும் செய்வான். தனது தவறுக்காக வருந்திக் கண்ணீரும் வடிப்பான். இவனும் அல்லாஹ்வின் சமூகம் செல்வது கடினமே. இவனும் அல்லாஹ்வை விட்டுப் பல்லாயிரம் கிலோ மீற்றர் தூரத்திலேயே இருப்பான்.

#நப்ஸ்_முத்மஇன்னா

“முத்மஇன்னா” என்ற சொல்லுக்கு சாந்தி பெற்றது என்று அர்த்தம் வரும். இது முந்தின மூன்றை விடவும் எல்லா வகையிலும் சிறந்ததேயாகும். இந்த “நப்ஸ்” உள்ளவன் நற்குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் நிறைந்தவனாக இருப்பான். இவனுக்கு பாவம் வேம்பு போல் சகப்பாக இருக்கும். எதிர்பாராமல் ஒரு சிறு பாவம் நிகழ்ந்து விட்டால் கூட கதறியழுவான். கண்ணீர் வடிப்பான். மனமொடிந்து செயலிழந்து போவான். இவன் அல்லாஹ்வின் சமூகம் செல்லத் தகுதியுள்ளவன். இவன் சுவர்க்கவாதி.

இந்த “நப்ஸ்” உள்ளவனையே அல்லாஹ் தன் பக்கம் வருமாறு அழைக்கின்றான்;. முந்தின மூன்று “நப்ஸ்” உள்ளவர்களை எந்த இடத்திலும் அவன் அழைக்கவில்லை.

“யா அய்யதுஹன் நப்ஸுல் முத்மஇன்னதுர்ஜிஈ இலா றப்பிகி றாழியதன் மர்ழிய்யா” முத்மஇன்னாவான நப்ஸே! நீ அவனையும், அவன் உன்னையும் பொருந்திக் கொண்ட நிலையில் நீ உனது இரட்சகன் பக்கம் மீழு.

இந்த நாலாவது படியில் இருந்து இதையடுத்துள்ள ஏனைய றாழியா, மர்ழியா, காமிலா என்ற படிகளையும் அடைந்து “பனா” என்ற முக்திநிலை பெறுவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு “விலாயத்” என்ற ஒலித்தனம் கிடைப்பதாயின் அவர் குறைந்த பட்சம் “முத்மயின்னா” என்ற நாலாவது படியை அடைந்தவராக இருக்க வேண்டும். இவர்தான் “காமில்” முழுமையானவர் என்று சொல்லப்படுவதற்கு தகுதியுடையவராவார். இந்த நாலாவது படியை அடையாத எவருக்கும் “விலாயத்” கிடைக்கவுமாட்டாது. அவர் “தர்பியத்” தனது “முரீது” ஞான சிஷ்யனை ஆன்மீக ஒளியுணவு வழங்கி வளர்க்கும் “ஷெய்கு” ஞானகுருவாக இருக்கவும் முடியாது. போலிகள் ஜாக்கிரதை!

பெருநாள் தொழுகையில் முதலாவது “றக்அத்”தில் ஏழு “தக்பீர்” சொல்லும் போது ஏழு “நப்ஸ்”களையும் “அல்லாஹு அக்பர்” என்ற வாள் கொண்டு வெட்டிக் கொன்றொழிப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். இரண்டவாது “றக்அத்”தில் ஐந்து “தக்பீர்” சொல்லும் போது பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகின்ற மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் யாவையும், இன்னும் ஐம்புலன்கள் என்று சொல்லப்டுகின்ற பார்த்தறிதல், கேட்டறிதல், தொட்டறிதல், நுகர்ந்தறிதல், சுவைத்தறிதல் யாவையும் அழித்தொழிப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது ஐந்து பூதங்களுமில்லை, ஐந்து புலன்களுமில்லை, பொதுவாக அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வரல் வேண்டும். “குல்லு ஷெய்இன் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு” சகல வஸ்த்துக்களும் நேற்றும் அழிந்தவை, தற்போதும் அழிந்து கொண்டிருப்பவை, நாளையும் அழிபவை அதாவது சகல வஸ்த்துக்களும் “மாழீ” சென்ற காலம், “முஸ்தக்பில்” எதிர்காலம், “ஹால்” நிகழ் காலம் ஆகிய முக்காலத்திலும் இல்லாதவை என்ற முடிவுக்கு வந்து அல்லாஹ்வை மட்டும் தரிபடுத்த வேண்டும். “ஆலம்” படைப்புக்கள் யாவும் “கயால்” பொய் என்றும், அல்லாஹ் மட்டுமே உண்மையானவன் என்றும் நம்ப வேண்டும். “ஹாலிகுன்” என்ற சொல் முக்காலத்திற்கும் பொருத்தமான “இஸ்முல் பாஇல்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

#அன்புச்_சகோதரா!

நீ ஸூபிஸ ஞானம் பெற்று “தரீகா” வழி செல்லாதவரை உண்மையை விளங்கிக் கொள்ளவோ, அதை அறிந்து கொள்ளவோ முடியாது. “ஷரீஅத்” வழி நடப்பது எவ்வாறு அவசியமோ “தரீகா” வழி நடப்பதும் அவ்வாறுதான் என்பதைப்புரிந்து செயல்படு. உனது “நப்ஸ்” என்ற விரோதியைக் கொன்றொழி. “ஷரீஅத்” வழி நடக்காமலும், “தரீகா” வழி நடக்காமலும், இறை ஞானம் கற்றுக் கொள்ளாமலும் குருவின் கைபிடித்துக் கரை சேரலாம் என்ற நம்பிக்கையை விடு. அல்லாஹ் அளவில் விரைந்து செல் “பபிர்றூ இலல்லாஹ்”. அல்லாஹ் ஒருபோதும் படைப்பாக மாறுவதில்லை. அவனுக்கு இணையுமில்லை, துணையுமில்லை, உறவினருமில்லை, தனித்தோன், தன் நிகரற்றோன். ஆயினும் ஒன்றில் பலதானவன். பலதில் ஒன்றானவன். “ஹுவல் குல்லு”

وَالْعَارِفُوْنَ بِـرَبِّـهِـمْ لَـمْ يَـشْهَدُوْا
شَيْـئًـا سِـوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالـِيْ
وَرَأَوْا مَا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا
فِى الْـحَـالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
(القطب الواصل شعيب أبو مدين المغربي قدّس سرّه)

قَاعدة كليّة: إنّ اسم الفاعل صالح للأزمنة الثلاثة، الماضي والحال والإستقبال مَا لَمْ يُقَيَّدْ بِأَيِّ قَيْدٍ من القيود الثلاثة المذكورة،(فُزْ بهذه القاعدة)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments