Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறையியல் தாகம் தீர்க்கும் ஸம்ஸம் நீர்.

இறையியல் தாகம் தீர்க்கும் ஸம்ஸம் நீர்.

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
 
நீங்கள் இறையியல் – மஃரிபா ஞானத் தாகமுள்ளவர்களா? கவலை வேண்டாம். கிள்ளித் தராமல் அள்ளித் தருகின்றோம்.
 
நீங்கள் ஸூபிஸ ஞானத்தை – இறையியல் தத்துவத்தை ஓரளவேனும் தெரிந்து கொள்ள விரும்பினால் முதலில் உங்களின் “நிய்யத்” எண்ணக்கருவை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது இறையியல் கற்று, உங்களைப்படைத்து, இதுகால வரை உண்ண உணவும், உடுக்க உடையும், வாழ மனையும், வளமான வாழ்வும் தந்து உங்களைப் பயங்கர நோய்களிலிருந்து பாதுகாத்து வருகின்ற, நீங்கள் தினமும் சுவாசிக்கின்ற 21600 சுவாசங்களும் தங்கு தடையின்றி செயல்பட நல்லனுகூலம் செய்கின்ற அல்லாஹ்வை அறிந்து அவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து மறைந்திட விரும்பினால் இதுகால வரை நான் எழுதி வெளியிட்ட சிறிய, பெரிய நூல்கள் யாவையும் கட்டம் கட்டமாக வாசித்து படிப்படியாக முன்னேற வேண்டும். இதுகால வரை நான் பேசிய பேச்சுக்களில் முக்கியமானவற்றை மட்டுமாவது கட்டம் கட்டமாகச் செவியேற்று படிப்படியாக முன்னேற வேண்டும்.

இவ்வாறு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் நீங்கள் செயல்பட்டால் அல்லாஹ்வின் அருட்பார்வை மூலமும், இறையியலின் காந்த சக்தி மூலமும் நீங்கள் கவரப்பட்டு என்னுறவு உங்களுக்கு வேண்டாமென்று நான் சொன்னாற் கூட அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இது என் வாழ்வில் நான் கண்ட அனுபவ அறிவாகும்.
 
நீங்கள்தான் அறிவைத்தேட வேண்டும். இது உங்கள் கடமை. அறிவு உங்களை ஒருபோதும் தேடி வராது. நீங்கள் “இல்ஹாம்” வழங்கப்பட்ட வலீமார்களாயிருந்தாலேயன்றி. இவ்வாறிருந்தால் அது உங்களைத் தேடி வரும். إِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ அறிவு என்பது தேடி எடுக்க வேண்டிய ஒரு புதையாலாகும். அந்தப் புதையலைப் பெற்றுக் கொள்ள நாம் கொடுக்க வேண்டிய பலி எமது விடாமுயற்சியேயாகும். அதை அடைந்து கொள்ள பல இன்னல்களை நாம் அனுபவிக்க வேண்டியது நியாயமே. தேடுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.
 
அன்புள்ள வாசக நேயர்களே! நீங்கள் உங்கள் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறக்குமுன் எங்கே இருந்தீர்கள் என்பது தொடர்பாக நாம் ஆய்வு செய்வோம்.
 
நீங்கள் பிறக்குமுன் அல்லாஹ்வின் அறிவிலும், அவன் நாட்டத்திலும் இருந்தீர்கள். எவ்வாறு ஆய்வு செய்தாலும், எவர் ஆய்வு செய்தாலும் கிடைக்கின்ற முடிவு இதுவேயாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
 
நான் கூறுகின்ற இக்கருத்து இறைமறை ஆய்வும், இறைத் தூதர் பெருமானாரின் அருள் மொழிகள் ஆய்வும் தந்த உண்மையாகும்.
இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது அல்லாஹ்வின் அறிவிலும், அவன் நாட்டத்திலும் இருந்த நீங்கள் மனித உருவில் – மனிதனாக எவ்வாறு வந்தீர்கள்? என்பதேயாகும். சற்று சிந்திப்போம் வாருங்கள்.
 
அல்லாஹ்வின் அறிவிலும், நாட்டத்திலும் இருந்தீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உருவமும், சடமுமில்லாத நாட்டத்திலிருந்த நீங்கள் உருவமுள்ளவராயும், சடமுள்ளவராயும் எவ்வாறு வந்தீர்கள்? என்பதை சிந்தித்து பாருங்கள்.
 
உங்கள் பெற்றோர் இறைவனின் நாட்டப்படியும், அவனின் அறிவின் படியும் கணவன் மனைவியாகினார்கள். இது இறைவன் செயலேயன்றி வேறெவனின் செயலல்ல.
 
அவர்கள் இருவரில் ஒருவருக்கு மற்றவர் மீது சிற்றின்ப உணர்வை இறைவன் ஏற்படுத்தினான். இவ் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தியவனும் இறைவன்தான். செயல் எதுவாயினும் அதற்குரியவன் – சொந்தக் காரன் இறைவன்தான். இதில் இரண்டாம் கருத்து இல்லை.
 
முதற் பெண் “ஹவ்வா” “ஏவாள்” ஆணிலிருந்து படைக்கப்பட்டார். முதல் மனிதன் ஆதம் என்பவரின் விலா எலும்புதான் “ஹவ்வா”வை படைப்பதற்கு கருவாயிருந்தது. இறைவன் எதைப் படைப்பதாயினும் அதை இன்னொன்றிலிருந்தே படைப்பான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மூலம் -கரு மண்ணாயிருந்தது. ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களுக்கு மூலம் – கரு அவரின் விலா எலும்பாயிருந்தது. மண்ணுக்கு மூலம் இறைவனின் “தாத்” உள்ளமையாயிருந்தது.
 
“தாத்” என்பதும் “வுஜூத்” என்பதும் இரண்டும் ஒன்றுதான். எனினும் “வுஜூத்” என்ற சொல் உள்ளமை என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றது. ஆயினும் “தாத்” என்ற சொல் தமிழிலோ, வேறு மொழியிலோ மொழியாக்கம் செய்ய முடியாதுள்ளது. அது “பிரம்மம்” என்று மொழிபெயர்த்தாலும் சிலர் மனமுரண்டாக அதைச் சர்ச்சைக்குரிய விடயமாக ஆக்கிவிடுகின்றார்கள். ஏனெனில் இது இந்துக்கள் பயன்படுத்துகின்ற சொல்லாதலால் இந்தச் சிக்கல் ஏற்படுகின்றது.
 
இறைவன் எந்த ஒன்றைப் படைப்பதாயினும் அதை இருக்கின்ற ஒன்றிலிருந்து படைப்பானேயன்றி இல்லாத ஒன்றிலிருந்து படைக்கமாட்டான். ஏனெனில் இல்லாதது என்றால் அது இல்லாததுதான். இல்லாமையிலிருந்து படைத்தல் என்பது அசாத்தியமானதாகும். ஒன்று இருந்தால்தானே அதிலிருந்து படைக்க முடியும். இல்லாத ஒன்றிலிருந்து படைப்பதென்பது எவ்வாறு சாத்தியமாகும்? இது நுணுக்கமாக சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
 
இவ்விடயத்தில் ஸூபிஸ ஞானக் கருத்தோடு தொடர்பில்லாத அநேக உலமாஉகளும், அதோடு சம்பந்தப்பட்ட உலமாஉகளிற் சிலரும் தெளிவில்லாதவர்களாயிருப்பதையிட்டு நான் மனவேதனை அடைகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் சொல்கின்றேன். ஸூபிஸ உலமாஉகளிற் கூட “அதம்” என்ற இல்லாமையிலிருந்து அல்லாஹ் படைப்பான் என்பதில் மிகப் பிடிவாதமாக நிற்பதை நான் காண்கிறேன். இவர்களுக்கு இவ்விடயத்தில் தெளிவு குறைவாக இருந்தால் விடயம் தெரிந்தவர்களைத் தேடிச் சந்தித்து விளக்கம் கேட்டு தெளிவு பெற வேண்டும். தமக்கும் தெளிவில்லாமலும், தெளிவானவர்களிடம் கேட்டறியாமலும் இருந்து கொண்டு இல்லாமையிலிருந்து படைப்பான் என்று குரங்குப் பிடியில் இருப்பது மார்க்கமல்ல.
 
என்னிடத்தில் வந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் இவர்களுக்குச் சொன்னாற்கூட இவர்கள் என்னிடம் வரமாட்டார்கள். ஏன் தெரியுமா? கண்ணை மூடிக் கொண்டு மூடர்கள் எனக்கு “முர்தத்” பத்வா தந்துவிட்டு இவர்கள் என்னிடம் எவ்வாறு வருவார்கள்? கௌரவம் காற்றுடன் கலந்து பறந்து விடுமல்லவா?
 
ஸூபீகளில் مُحَقِّقِيْنْ – مُدَقِّقِيْنْ என்று சிலர் உள்ளனர். இவர்களின் தீர்க்கமான முடிவு என்னவெனில் இல்லாமையிலிருந்து அல்லாஹ் படைப்பதில்லை என்பதேயாகும்.
 
اَلْوُجُوْدُ لَا يَنْعَدِمُ وَالْعَدَمُ لَا يُوْجَدُ
உள்ளமை இல்லாமலாகாது, இல்லாமை உண்டாகாது என்பதே ஸூபிஸக் கொள்கையில் தெளிவு கண்டவர்களின் கருத்தாகும். இதே கருத்தையே நாங்களும் கூறி வருகின்றோம்.
 
إِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ
அறிவு என்பது கற்பது கொண்டே பெற வேண்டும். இல்ஹாம் வழங்கப்பட்டோர் தவிர.
 
மீண்டும் எழுதுகின்றேன். இறைவன் இல்லாத ஒன்றைப் படைப்பானேயன்றி “அதம்” என்ற இல்லாமையிலிருந்து படைப்பதில்லை. எந்த ஒன்றைப் படைப்பதாயினும் இருக்கின்ற ஒன்றிலிருந்தே படைப்பான். மாறாக “அதம்” எனும் இல்லாமையிலிருந்து படைப்பதில்லை. ஏனெனில் இல்லாமை என்றாலே இல்லாததுதான். ஆகையால் இல்லாததிலிருந்து அவன் எதையும் படைக்கவுமில்லை, படைப்பதுமில்லை.
 
மனித இனத்தில் முதற் படைப்பாக நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருப்பதுபோல் பொதுவாகப் படைப்புக்களில் முதற் படைப்பு நபீகட்கரசரும், ஈருலகின் உடலுமான முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர். முதற் படைப்பு நீரேயன்றி முஹம்மத் நபீயல்லவென்று சொல்பவர்கள் முஸ்லிம் அறிஞர்களிற் சிலர் இருந்தாலும் கூட அவர்கள் தெளிவில்லாத, பரந்த அறிவற்ற ஒரு சிலர் மட்டுமே! இவ்விடயத்தில் தெளிவு கண்டோரின் கருத்து முதற்படைப்பு முத்து முஹம்மத் அவர்களின் “நூர்” ஒளி என்பதேயாகும். இது பற்றி இங்கு பேச இடமில்லை.
 
முதற் படைப்பு ஒளியென்று வைத்துக் கொண்டாலும், அல்லது நீர் என்று வைத்துக் கொண்டாலும் முதற் படைப்பு என்பது கூட இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டதல்ல. அது கூட இறைவனின் உள்ளமையிலிருந்தே படைக்கப்பட்டதாகும்.
 
நபீ பெருமான் அவர்கள்தான் முதற் படைப்பு என்று வைத்துக் கொண்டதன்படி அவர்களுக்கு முன் ஒன்றுமே படைக்கப்படாத நிலையில் அவர்கள் எதிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்று தெளிவற்ற ஒருவர் என்னிடம் கேட்பாராயின் அவருக்கு நான் கூறும் பதில் அவர்களுக்கு முன் ஒன்றுமே இல்லாது போனாலும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை இல்லாமற் போகவில்லையே! அது இருந்ததல்லவா? ஆகையால் அந்த உள்ளமையிலிருந்தே அவர்களைப் படைத்தான் என்பதாகும்.
 
அன்புத் தம்பி!
 
நீங்கள் தாயின் வயிற்றிலிருந்து வெளியாகுமுன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எவ்வாறு சடமுள்ள மனிதராய் பிறந்தீர்கள்? என்று ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விக்குரிய விடையை நீங்கள் விளங்குவதற்கு உதவியாக இருக்க வேண்டுமென்பதற்காகவே மேற்கண்ட விபரங்களை எழுதினேன்.
 
இப்போது ஆரம்பத் தொடருக்கு வாருங்கள். கணவன், மனைவியாக இணைந்த உங்கள் பெற்றோருக்கு சிற்றின்ப உணர்வை இறைவன் வழங்கினான். இருவரும் உடலுறவு கொண்டார்கள். அவர்களின் இந்திரியம்தான் உங்களைப் படைப்பதற்கு கருவாக இருந்தது. இதை இன்னொரு பாணியில் சொல்வதாயின் அவர்களின் விந்துதான் சில மாற்றங்களின் பின் உங்களாக வந்தது என்ற தத்துவத்தை விளங்கும் நீங்கள் அவர்களின் விந்து எதிலிருந்து எவ்வாறு வந்ததென்றும் சிந்திக்க வேண்டும். இது ஒரு முக்கிய குறிப்பாகும்.
 
உங்கள் பெற்றோர் உட்கொண்ட உணவுகளும், அவர்கள் பருகிய பானங்களும், அவர்கள் பாவித்த சத்து மருந்துகளுமே அவர்களின் உடலில் குருதியை உண்டாக்கி உறைய வைத்தது.
 
உங்கள் பெற்றோர் உட் கொண்ட உணவுகள் பலதரப்பட்டதாயிருக்கும். சோறு சாப்பிட்டிருப்பார்கள். அதற்கான அரிசி உலக நாடுகளில் பல நாடுகளில் உற்பத்தியானதாயிருக்கும். உரொட்டி சாப்பிட்டிருப்பார்கள். அதற்கான மாவு உலக நாடுகளில் பல நாடுகளில் உற்பத்தியான கோதுமை, மைதா போன்ற மாவினால் தயாரிக்கப்பட்டிருக்கும்.
 
இன்னுமிவை போல் பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டிருப்பார்கள். இதேபோல் பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பானங்களும் குடித்திருப்பார்கள்.
 
பொதுவாக பெற்றோர் உட்கொண்ட, சாப்பிட்ட, குடித்தவற்றால் ஊறிய இரத்தம் அவர்களின் உடலில் ஓடிக் கொண்டிருக்கும்.
 
அந்தக் குருதிதான் விந்தாக, இந்திரியமாக மாறியதேயன்றி வேறொன்றல்ல. அந்த விந்து தாயின் கர்ப்பாசனத்தை அடைந்து நாற்பது நாட்கள் வரை விந்தாகவே இருந்தது. அந்தக் கால எல்லையிலேயே அது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து 40ம் நாள் இரத்தக் கட்டியாக மாறியது. அதிலிருந்து 40 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து 80ம் நாள் முழுமையான சதைக் கட்டியாக மாறி அக்கால எல்லையிலேயே சதைக் கட்டியிலிருந்து உறுப்புகள் தோன்றத் தொடங்கின.
 
120ம் நாள் முழு மனிதனின் தோற்றம் பெற்றது அந்த சதைக் கட்டி. சதைக் கட்டியாக இருந்த கால கட்டத்திலேயே உள்ளுறுப்புகளும், வெளியுறுப்புகளும் முளைத்தன. அதேபோல் கடைசி 40 நாட்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக சதைக் கட்டியின் தன்மைக்கேற்றவாறு நிறமும், உறுப்புக்களின் அமைப்பும் ஏற்பட்டது.
 
120 நாட்களில் மனித உருவம் பெற்ற சிசுவுக்கு “றூஹ்” உயிர் வழங்கப்படுகிறது. நான்கு மாதம் முடிந்து ஐந்தாம் மாத ஆரம்பத்திலிருந்து சுமார் ஐந்து மாதங்கள் அல்லது ஐந்தரை மாதங்கள் வரை அந்தச் சிசு வளரத் தொடங்குகிறது. பத்தாம் மாதத்திற்குள் குழந்தை வெளிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
 
மனிதன் உருவெடுத்து வந்த வரலாறு இவ்வாறுதான் உள்ளது.
 
அல்லாஹ்வின் எந்தவொரு படைப்பு பற்றி ஆய்வு செய்தாலும் அதற்கு அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையே கருவாகவும், மூலமாகவும் அமைகிறது. அனைத்து படைப்புகளுக்கும் அடிப்படைக் கரு அல்லாஹ்வின் “தாத்” உள்ளமைதான் என்று முடிவு வருவதால் அவனன்றி வேறொன்றுமில்லையென்றே கூற வேண்டும். ஏனெனில் ஒன்றுக்கு மூலம் எதுவோ அதுவேதான் அந்த ஒன்று என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பின்வரும் உதாரணங்களை உன்னிப்பாக கவனித்தால் உண்மை வெளிவரும்.
 
பஞ்சு என்ற மூலத்தால் உருவான ஷேட், சாரம், றவ்ஸர், பெனியன், கைலேஞ்சு என்பன பஞ்சுக்கு வேறாகாத அதன் வெளிப்பாடுகள் என்பதுபோலும், இரும்பு என்ற மூலத்தால் உருவான ஆணி, கம்பி, பூட்டு, திறப்பு, பட்டம் என்பன இரும்புக்கு வேறாகாத அதன் வெளிப்பாடுகள் என்பது போன்றும், தங்கம் என்ற மூலத்தால் உருவான மாலை, சவடி, காதணி, காப்பு, மோதிரம் என்பன தங்கத்திற்கு வேறாகாத அதன் வெளிப்பாடுகள் என்பது போலுமே அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை என்ற மூலத்தினாலான கடல், மலை, நதி, பூமி, வானம், நடப்பன, பறப்பன, நகர்வன போன்ற அனைத்து வஸ்த்துக்களுமாகும். திருக்குர்ஆனின் إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ வசனத்தை ஆய்வு செய்து பார்க்கவும். (ஸூறா யாஸீன், வசனம்: 82)
 
பஞ்சாலான எந்தப் பொருளும் பஞ்சுக்கு வோறகாத, அது தானானதாயிருப்பது போலும், இரும்பாலான எந்தப் பொருளும் இரும்புக்கு வேறாகாத, அது தானானதாயிருப்பது போலும், தங்கத்தினாலான எந்தப் பொருளும் தங்கத்திற்கு வேறாகாத, அது தானானதாயிருப்பது போலும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை என்ற மூலத்தினாலான அனைத்து படைப்புக்களும் அவனுக்கு வேறாகாத, அவன் தானானதாகவே உள்ளன.
 
ஒரு ஷேட்டை எடுத்து இது பஞ்சுதான் என்றும், ஓர் ஆணியை எடுத்து இது இரும்புதான் என்றும், ஒரு மாலையை எடுத்து இது தங்கம்தான் என்றும் சொல்வதில் தவறில்லாமல் இருப்பது போல் அவனின் “தாத்” உள்ளமையின் வெளிப்பாடான படைப்புக்கள் அல்லாஹ்தான் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. எதார்த்தம் புரியாதவர்களுக்கு தவறுதான்.
 
அன்புக்குரிய தம்பிமார்களே! அண்ணன்மார்களே! கோழி முந்தினதா? முட்டை முந்தினதா? என்று நீங்கள் மரணிக்கும் வரை விவாதித்துக் கொண்டே இருக்கலாம். முடிவின்றியே உங்கள் விவாதம் முடிந்துவிடும். எது முந்தினதாயினும், எது பிந்தினதாயினும் அனைத்தும் அவனிலிருந்து வந்தவையே என்று முடிவு செய்யுங்கள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments