Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்குணங்குடி மஸ்தான் அப்துல் காதிர் ஆலிம் புலவர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய பாடல்.

குணங்குடி மஸ்தான் அப்துல் காதிர் ஆலிம் புலவர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய பாடல்.

தொடர் – 2

மகான் குணங்குடி மஸ்தான் பிறந்து சுமார் 229 வருடங்களாகிவிட்டன. சென்னை – மெட்றாஸ் ராயபுரத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்களின் தரிசனத்திற்காக நான் பல தடவைகள் சென்றுள்ளேன். இவர்களுக்கு அழகிய துறவறம் தொனிக்கும் “தர்ஹா” ஒன்று உண்டு. இந்த தர்ஹாவை சுற்றி வாழ்பவர்களில் 90 வீதமானோர் வறுமைக் கோட்டில் நிற்கும் இந்துக்களாவர். இவர்களின் தர்ஹா கட்டிடத்தில் அக்காலப் புலவர்கள் பலர் அடக்கம் பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவா அவர்களின் முரீதீன்களேயாவர். இவர்களில் இந்துக்களும் அடங்குவர்.

குணங்குடியார் அவர்கள் ஆரம்ப காலத்தில் ஸெய்யிதுனா தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களிடம் ஞான அறிவைக் கற்றுக் கொண்டார்கள். அவர்களிடம் கற்றதினால்தான் மஸ்தான் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

தைக்கா ஸாஹிபு நாயகமவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு 100 வீதமும் ஆதரவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسُبُّوا الدَّهْرَ، فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ»

காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில் காலம் அல்லாஹ்தான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளிச் சென்றார்கள். இந்த ஹதீதின் கருத்தை தைக்கா ஸாஹிபு வலிய்யுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பாடலில் கூறியுள்ளார்கள்.

காலத்தை ஏச வேண்டாம்
என்றதால் காலம் நீயே!
கோலங்கள் கொண்டதெல்லாம்
“குதா” அன்றி வேறுமுண்டோ

ஆலத்தில் நீயேயல்லால்
அறவே வேறில்லை எந்தன்
சீலத்தை நல்லதாக்கி
சிறப்பருள் யா காலிகே!

இந்தப் பாடல் மூலம் தைக்கா ஸாஹிபு வலிய்யுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையுடையவர்கள் என்பது தெளிவாகிறது.

இவர்கள் இந்தியா – காயல் பட்டணத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்களின் தரிசனத்திற்காக பல முறை அங்கு சென்றுள்ளேன். அல்ஹம்து லில்லாஹ்!

குணங்குடி மஸ்தான் நாயகமவர்களை தவறாகப் புரிந்த உலமாஉகளிற் பலர் அவர்களை தவறாகப் பேசுவதையும், ஏசுவதையும் நாம் பார்க்கிறோம். இன்னோர் ஆழமறியாமற் கால் வைத்து அழிந்துவிட வேண்டாமென்று அவர்களுக்கு “வஸிய்யத்” செய்கிறேன்.

குணங்குடி அப்துல் காதிர் புலவர் அவர்கள் கஞ்சா பாவித்தார்களாம். அதனால் அவர்களை ஏற்றுக் கொள்ளமுடியாதென்று பலரும் சொல்கிறார்கள். இக்காலத்தில் இவ்வாறு சொல்பவர்களில் எவரும் அவர்கள் கஞ்சா பாவித்ததை கண்ணால் கண்டவர்களல்ல. ஏனெனில் அவர்கள் “வபாத்” மரணித்து 175 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அவர்கள் பிறந்து இவ் ஆண்டோடு 229 வருடங்கள் கடந்து விட்டன. வதந்திகளை நம்பி நல்ல மனிதனை கெட்டவன் என்று முடிவு செய்தல் பெருங்குற்றமாகும்.

சிலர் எந்தவொரு ஆவண ரீதியான ஆதாரமுமின்றி “மஸ்தான்” என்ற சொல்லை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டும், அச்சொல்லின் தாற்பரியம் தெரியாமல் உளறுகின்றார்கள். இவர்கள் மகான்களின் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

பாரசீக மொழியில் “மஸ்த்” என்ற சொல்லுக்கு போதை என்று பொருள் வரும். “மஸ்தான்” என்றால் போதை உள்ளவன் என்று பொருள் வரும். போதையில் இரண்டு வகையுண்டு. ஒன்று மது போதை. மற்றது இறை போதை. வலீமார் அனைவரும் மஸ்தான்மார்தான். இறை போதையுள்ளவர்கள் தான். இதனால் அவர்கள் மது போதையில் உள்ளவர்கள் என்று நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

அறபு மொழியில் போதைக்கு “ஸக்ர்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் “ஷாதுலிய்யா தரீகா”வின் “ஹழறா” திக்ர் மஜ்லிஸில் பாடப்படும் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஷாதுலிய்யா தரீகாவின் மஷாயிகுமார்கள் குடித்து போதையானவர்கள் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. வலீமாரில் சிலர் “கம்ரிய்யா” (மதுச்சாறு) என்ற பெயரில் கிதாபுகள் எழுதியதற்கும் வரலாறுண்டு.

எனவே, இறைஞானிகளைப் பொறுத்த வரை “ஸக்ர்” என்ற அறபுச் சொல்லையோ, “மஸ்த்” என்ற பாரசீகச் சொல்லையோ மது போதை என்ற கருத்துக்கு அவர்கள் பாவிக்கவில்லை என்றும், இறைபோதை என்ற கருத்திலேயே அச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, எந்தவொரு ஆவண ரீதியான ஆதாரமுமின்றி வலீமார், நல்லடியார் விடயத்தில் நாவைப் பேணிக் கொள்ளுதல் வேண்டும். மன முரண்டாகப் பேசினால் நாவழிந்து போகும். அல்லது அறுந்து போகும்.

1964, 65, 66 காலப் பகுதியில் நான் தமிழ் நாடு “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் பல முறை மஸ்தான் அப்பா அவர்களின் தரிசனத்திற்காக சென்றிருக்கிறேன்.

ஒரு சமயம் நான் அங்கு சென்றிருந்த போது இந்து மத ஞானப் புலவர் ஒருவர் தன்னை மறந்து இறைவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். அவரின் பாடல் என்னைக் கவர்ந்ததால் அவர் பாடி முடியும் வரை நான் காத்திருந்து அவருடன் சிறிது நேரம் குணங்குடி மகான் அவர்களின் வரலாறு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் என்னிடம் கூறிய பல விடயங்களில் ஒரு விடயத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

குணங்குடி மஸ்தான் அவர்களுக்கு இந்துக்களின் ஆதரவு 100 வீதம் இருந்தாலும், அதேபோல் முஸ்லிம்களில் பொது மக்களின் ஆதரவு நிறைய இருந்தாலும் முஸ்லிம் மத குருக்களால் அவர்களுக்குப் பலவேறு தொல்லைகள் ஏற்பட்டன. இல்லை ஏற்படுத்தப்பட்டன. இதனால் உடுக்க உடையின்றியும், உறங்க இடமின்றியும், உண்ண உணவின்றியும் வாழ்ந்தார்கள். குப்பை மேடுகளையும், மையவாடிகளையும், அனாதை இல்லங்களையும், இந்துக் கோவில்களில் துறவிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆச்சிரமங்களையும் தனது வீடுகளாக்கி இறைபோதை தலைக்கேறி வெளிக் கண்ணோட்டத்தில் அர்த்தமின்றி உளறி அலைந்தார்கள்.

ஒரு நாள் “குருக்கள் மடம்” – தவ மடம் ஒன்றில் அவர்கள் தங்க நேரிட்டது. அவ்வேளை அங்கு இந்து மத குருக்கள் ஆறுபேர் தவமிருந்தனர். அவர்களோடு இவர்களும் ஒருவராயிருந்தார்கள்.

மறுநாள் இவர்கள் முஸ்லிம் என்பதையறிந்த ஏனைய இந்து மத துறவிகள் குருக்கள் மடத்தின் தலைவரிடம் இது தொடர்பாக முறையிட அவர் விசாரணைக் குழுவொன்றை நியமித்தார்.

விசாரணையின் போது குணங்குடியார், நான்தான் உண்மையான மத குரு, இது குருக்கள் மடம். இதில் நான் மட்டுமே இருக்க வேண்டும். போலி குருக்கள்தான் வெளியேற வேண்டும் என்று கூறினார்கள்.

விசாரணைக் குழுத் தலைவனின் தலைக்கு ஒரு வழி பிறந்தது. அவன் பின்வருமாறு கூறினான்.

ஏழு துறவிகளையும் நிர்வாணிகளாக்கி, ஏழு அழகிகளை அவ்வாறே நிர்வாணிகளாக்கி கவர்ச்சியாக உடல்களை அலங்கரித்து அவர்களை குருக்களுக்கு முன்னால் நடனமாடச் செய்வோம். இதன் மூலம் மெய்யெது? பொய்யெது? என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று ஓர் ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் குணங்குடியார் மட்டும் உண்மையான குருவை இவ்வடிப்படையில் தெரிவு செய்யப்படுவதை விரும்பவில்லை. எனினும் பலாத்காரமாக அவர்களை மேலிடம் சம்மதிக்க வைத்து நடனம் தொடங்கியது. அவதானிகள் ஏழு பேர்களையும் மிக நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.

ஆடலும், பாடலும் சூடானபோது இந்து மத துறவிகளாக நடித்த ஆறுபேர்களும் ஒருவர் பின் ஒருவராக சிற்றின்ப மயக்கமுற்றனர்.

ஆயினும் குணங்குடியார் மட்டும் ஆடாமலும், அசையாமலும், உணர்ச்சியால் தாக்கப்படாமலும் சிலை போலானார்கள்.

இறுதியில் மதகுருமார் போல் நடித்த போலிகள் ஆறு பேர்களும் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். குணங்குடியார் அங்கு சில காலம் தங்கியிருந்தார்.

இவ்வாறு நான் குணங்குடியார் தர்ஹாவில் சந்தித்த ஒரு இந்துப் புலவர் என்னிடம் கூறினார்.

ஒருவன் இவ் உலக இன்ப சுகங்களை முற்றாகத் துறந்து வாழ்வது மிகவும் கடினமான ஒன்றேயாகும். அவ்வாறிருந்தும் கூட அவ்வாறு வாழ்ந்த பல மகான்களின் வரலாறு இஸ்லாமிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஒருவர் இருவரா? ஸுப்ஹானல்லாஹ்! பல இலட்சம் துறவிகள், உண்மையான குருமார் வாழ்ந்து மறைந்துமுள்ளனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில் திருமணம் செய்யாமலும், சிற்றின்பத்தை நினைத்துக் கூட பார்க்காமலும், சுகபோகங்களை அணுவளவும் விரும்பாமலும் வாழ்ந்த பலரின் வரலாறுகள் இஸ்லாமிய வரலாற்றில் பதிவாகியுள்ளன.

“ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டக்கலை மேதைகளில் ஒருவரான இமாம் நவவீ திருமணம் செய்யவில்லை. பெருமானாரின் மிக நெருங்கிய தோழரும், அதிக நபீ மொழிகளை அறிவித்தவருமான அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்யவில்லை. நாஹூர் நாயகம், காரணக்கடல் ஷாஹுல் ஹமீத் பாதுஷாஹ் அவர்கள் திருமணம் செய்யவில்லை. இறைஞானி றாபிஅதுல் அதவிய்யா திருமணம் செய்யவில்லை. இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற வலீமார், மேதைகளிற் பலரும் திரு மணம் செய்யவில்லை. ஆயினும் திருமணம் செய்வது நபீ வழி என்பது அவர்களுக்கு தெரியாத விடயமுமல்ல. “மக்றூஹ்” ஆன ஒன்றைக் கூட செய்யாமலும், “ஸுன்னத்” ஆன ஒன்றைக் கூட விடாமலும் பேணுதலின் உச்சக் கட்டத்தில் வாழ்ந்த பலர் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துள்ளார்கள். இதற்கு காரணம் உண்டு.

குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் 49 பிள்ளைகளின் தந்தையாக வாழ்ந்ததற்கும், அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் 90வது வயதில் திருமணம் செய்து நான்கு குழந்தைகளுக்கு தந்தையாயிருந்ததற்கும் வரலாறு உண்டு.

வலீமார், மகான்களிற் சிலர் திருணம் செய்யாமல் இருந்ததற்கும், பலர் செய்ததற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. அவற்றிற் சில ஆன்மிகத்தோடு தொடர்புள்ள காரணங்களாகும். இன்னும் சில லவ்கீகத்தோடு தொடர்புள்ள காரணங்களாகும். “ஹலால்” அனுமதிக்கப்பட்ட சிற்றின்பத்தில் பேரின்பம் காண்பதற்கும் வழிகள் உள்ளன. உரிய வைத்தியர்களிடம் சென்றால் நாடி பிடித்து மருந்து தருவார்கள்.

முற்றும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments