Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
விசுவாசிகளே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் திருத்தூதரைக் கொண்டும் “ஈமான்” நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் திருத்தூதரைக் கொண்டும் “ஈமான்” நம்பிக்கை கொள்ளுங்கள்.
(திருக்குர்ஆன் 04-136)

“முஃமின்” விசுவாசம் கொண்டவர்களை அழைத்து விசுவாசம் கொள்ளுங்கள் என்று சொல்வது அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமாகும். சொல்வதாயின்
يَا أَيُّهَا الْكَافِرُوْنَ آمِنُوْا بِاللهِ وَرَسُوْلِهِ
காபிர்களே! விசுவாசம் கொள்ளாதவர்களே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் திருத்தூதரைக் கொண்டும் “ஈமான்” விசுவாசம் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். இவ்வாறு சொல்வதே அர்த்தமுள்ளதாயும், பொருத்தமானதாயும் இருக்கும்.
 
ஆனால் அல்லாஹ் அவ்வாறு சொல்லவில்லை. அல்லாஹ் ஒருபோதும் அர்த்தமற்ற, பொருத்தமற்ற எந்த ஒரு வேலையும் செய்வதில்லை. எனவே, இதற்குப் பொருத்தமான, அர்த்தமுள்ள விளக்கம் தேவை. இதை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.
 
சாப்பிட்டு வயிறு நிரம்பிய நிலையில் இருப்பவனிடம் சாப்பிடு என்று சொல்வது பொருத்தமில்லை. அர்த்தமுமில்லை. பசியோடு இருப்பவனிடம்தான் அவ்வாறு சொல்ல வேண்டும். அல்லது சாப்பிட்டும் கூட பசி தீராதவனிடம்தான் அவ்வாறு சொல்ல வேண்டும்.
 
அல்லாஹ் இவ்விடத்தில் சாப்பிட்டும் பசி தீராமல் இருப்பவருக்குச் சொல்லும் பாணியில் “ஈமான்” விசுவாசம் கொண்டும் கூட அவ் விசுவாசத்தில் பசி தீராதவனுக்குச் சொல்கிறான். ஈமான் கொண்டவர்களே! மீண்டும் ஈமான் கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.
யார் இவர்கள்?
 
இவர்கள் யாரெனில் முஸ்லிம்களான பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள்தான். வேறு யாருமில்லை. இவர்கள் அல்லாஹ்வை அறியாமல் – அவனை எவ்வாறு அறிந்து நம்ப வேண்டுமோ அவ்வாறு அறிந்து நம்பாமல் பொதுவாக இறைவன் ஒருவன் உள்ளான் என்று மட்டும் நம்பினவர்களாவர். இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அநேகர் இவ்வாறுதான் நம்பியுள்ளார்கள். நமது இலங்கைத் திரு நாட்டில் 25 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இவர்களில் இரண்டு இலட்சம் முஸ்லிம்களாவது அல்லாஹ்வை எவ்வாறு அறிந்து நம்ப வேண்டுமென்று ஸூபீ மகான்கள் சொல்லியுள்ளார்களோ அவ்வாறு நம்பியவர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமே! இத்தகையோரையே மேற்கண்ட வசனத்தின் மூலம் மீண்டும் விசுவாசம் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
 
ஒரு முஸ்லிம் உண்மையான “முஃமின்” விசுவாசியாவதாயின் அவன் ஸூபீ மகான்கள் கூறும் அடிப்படையில் அல்லாஹ்வை விசுவாசிக்க வேண்டும். இன்றேல் அவர் பெயரளவில் விசுவாசியாயிருப்பாரேயன்றி அல்லாஹ் வலியுறுத்துகின்ற விசுவாசியாயிருக்கமாட்டார். தொப்பி போடுவார், தலைப்பாகையும் கட்டுவார், தாடியும் வைத்துக் கொள்வார். “ஸுப்ஹ்” தொழுகையில் கூட முதல் வரிசையில் நிற்பார். மாதத்தில் ஒரு தரமேனும் “தப்லீக் ஜமாஅத்”தில் செல்வார். வெளிப்படையான நற்கிரியைகள் எல்லாமே செய்வார். ஆனால் அல்லாஹ் பற்றி எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு அறிந்திருக்கமாட்டார்.
 
இவரையும், இவர் போன்றவர்களையுமே மேற்கண்ட வசனத்தின் மூலம் விசுவாசம் கொண்டவர்களே! மீண்டும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
 
எனவே, முஸ்லிம்கள் எங்கிருந்தாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், என்ன மொழி பேசினாலும் அல்லாஹ்வை ஸூபிஸம் கூறும் வகையில் அறிந்திருப்பது அவர்களின் கடமையாகும். தொழுகை முஸ்லிம்களுக்கு எவ்வாறு கடமையோ அவ்வாறே அல்லாஹ்வை அறிந்திருப்பதும் கடமைதான்.
 
ஸூபிஸத்தின் தத்துவம்:
எந்த நாட்டில் ஸூபிஸம் பேணப்படுகின்றதோ அந்நாட்டில் பயங்கரவாதம் இருக்காது. பதவி மோகம் கொண்டவர்கள், பணப் பேய் பிடித்தவர்கள், கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவர்கள், அட்டூழியம் செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள், லஞ்சம் பெறுபவர்கள், விபச்சாரிகள் எவரும் இருக்கமாட்டார்கள்.
நாடாளுமன்றத்துள் அடிதடி இருக்காது. பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவில் குழுப்பம் நடக்காது. அரச அலுவலகங்களில் வாதப் பிரதிவாதங்கள் நடக்காது. அரசியல் போட்டிகள் இருக்காது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரை ஏசுவதும், ஒரு அமைச்சர், இன்னொரு அமைச்சரை சாடுவதும் இருக்காது. நாட்டு அரசாங்கம் பாதுகாப்புக்காகச் செலவிடும் பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு குறையும். நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரும் தனது மனச் சாட்சிக்கு விரோதமாக நடக்காத நிலை உருவாகும். ஊருக்கு ஊர் கோடு, கச்சேரி தேவைப்படாது.
 
இப்படியொரு அமைதி நிலை, ஏற்பட வேண்டுமாயின் அரசு ஸூபிஸ ஞானத்திற்கு முதலிடம் வழங்கி அனைத்துப் பாடசாலைகளிலும் எல்லா மதங்களும் கூறும் ஸூபிஸம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக மார்க்க சமய ஞானம் கற்றுக் கொடுக்கின்ற சகல மதத் தலைவர்களும் பௌத பிக்குமாரும், இந்து மத சுவாமிகளும், இஸ்லாமிய உலமாஉகளும் கிறித்துவ பாதிரிமாரும் வரிந்து கட்டிக் கொண்டு நாடெங்கும் ஸூபிஸப் பிரச்சாரத்தில் இறங்கினால் நாடு தளம்பாது. எல்லா சமயத்திலும் ஸூபிஸம் உண்டு. இதை அனைத்து மதத் தலைவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வஸ்து – படைப்பு உண்டாவது எப்படி?
எந்த ஒரு படைப்பாயினும் அது இன்னொன்றிலிருந்தே உண்டாக வேண்டும். இதுவே நியதி. இன்னொன்றிலிருந்து உண்டாகாமல் தனக்குத் தானாய் உண்டானது அல்லாஹ்வின் “தாத்” மெய்ப் பொருள் மாத்திரமேயாகும். மற்றவை யாவும் – படைப்புக்கள் யாவும் இன்னொன்றிலிருந்து உண்டானவைதான். இதுவே எதார்த்தம். இன்னொன்று என்று நான் குறிப்பிடுவது அல்லாஹ்வின் “தாத்”தையேயாகும். இது “வுஜூத்” என்றும் சொல்லப்படும்.
 
அல்லாஹ்வின் “தாத்” போல் இன்னொன்றிலிருந்து உண்டாகாமல் தனக்குத் தானாய் உண்டான ஒரு சிருஷ்டி இருக்குமென்று ஒருவன் நம்பினால் இவன்தான் உண்மையான “முஷ்ரிக்” ஆவான். சிலை, விக்கிரகம், புத்துகான் போன்றவற்றை வணங்குபவனை விட மிகப் பயங்கர “முஷ்ரிக்” ஆவான்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம் பெயரிலுள்ள பல கோடி மக்கள் சிருட்டி – படைப்பு என்பது அல்லாஹ்வின் “தாத்” போல் தனக்குத் தானாய் உண்டானதென்றுதான் நம்பியுள்ளார்கள். இதை சுருக்கமாகச் சொல்வதாயின் படைப்பு என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டதென்று நம்பியுள்ளார்களேயன்றி எவ்வாறு படைக்கப்பட்டதென்ற விபரத்தை அறிந்து கொள்ளவில்லை. இதனால் அறியாமை இருளில் மூழ்கி படைப்பு என்பது வேறு, அல்லாஹ் வேறு என்ற “ஙெய்ரிய்யத்” வேற்றுமைத் திரைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களை வேற்றுமைத் திரையிலிருந்து கழட்டியெடுத்து “ஐனிய்யத்” படைப்பு படைத்தவன்தான் என்ற வெளிச்சத்திற்கு அழைத்த என்னைத் தான் “முர்தத்” மதம் மாறினவன் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “பத்வா” வழங்கி பொது மக்களைத் திசை மாறிப் பறக்க வைத்து விட்டார்கள். பொது மக்களின் வழிகேட்டிற்கு முல்லாக்களே காரண கர்த்தாக்களாவர்.
 
எந்த ஒரு படைப்பாயினும் அது அல்லாஹ்வின் “தாத்”திலிருந்து வந்ததேயாகும். அந்தப் படைப்புக்கு அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” எனும் உள்ளமைதான் கரு என்று அறிந்து கொள்ள வேண்டும். இதேபோல் படைப்பு எதிலிருந்து வந்ததோ அதற்கு படைப்பு ஒருபோதும் வேறானதாக இருக்காது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு வஸ்துக்கு எது மூலமோ, கருவோ அந்த வஸ்து அந்த மூலத்திற்கு – அந்தக் கருவுக்கு ஒரு போதும் வேறானதாக இருக்க முடியாது என்பதையும் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும்.
 
உதாரணமாக தங்கத்தால் செய்யப்பட்ட மாலை தங்கத்திற்கு வேறானதாக இருக்க முடியாது. அது தானானதாகவே இருக்கும். பஞ்சால் செய்யப்பட்ட நூல் பஞ்சுக்கு வேறானதாக இருக்க முடியாது. அது தானானதாகவே இருக்கும். இரும்பால் செய்யப்பட்ட திறப்பு இரும்புக்கு வேறானதாக இருக்க முடியாது. அது தானானதாகவே இருக்கும்.
இவ்வாறு எந்த ஒரு வஸ்துக்கு எது மூலமோ, கருவோ அது அந்த மூலத்துக்கு வேறானதாக இருக்க முடியாது.
 
இதை ஸூபீ மகான்கள் தங்க மாலை தங்கத்தின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றும், நூல் பஞ்சின் வெளிப்பாடு என்றும், திறப்பு இரும்பின் வெளிப்பாடு என்றும் சொல்வார்கள்.
இதே கருத்தை உள்வாங்கி இறைஞானி தற்கலை பீர் முஹம்மத் அப்பா அவர்கள்,
 
பொன்னால ஆனதெல்லாம்
பொன்னெடுத்த கோலமது
பொன்னையன்றி வேறுளதோ
யா ஹய்யு யா கய்யூமே!
மண்ணால ஆனதெல்லாம்
மண்ணெடுத்த கோலமது
மண்ணையன்றி வேறுளதோ
யா ஹய்யு யா கய்யூமே!
பஞ்சால ஆனதெல்லாம்
பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி வேறுளதோ
யா ஹய்யு யா கய்யூமே!
என்று பாடியுள்ளார்கள்.
 
இன்னும் இதே கருத்தை உள்வாங்கி இறைஞானி அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்கள்,
 
அஹதிய்யத் எனும் கடலே
ஆதியுமாச்சு
அதிலெழுந்த அலைகளது
ஆலமுமாச்சு
ஆலமுமாச்சு
அதுவே கோலமுமாச்சு.
என்று பாடியுள்ளார்கள்.
இன்னும் அஃலமுல் ஆலமீன், அஷ்றபுல் முர்ஸலீன், அகிலத்தின் அருட் கொடை, அண்ணலெம் பெருமான், மீமில்லா அஹ்மத், ஐனில்லா அறபீ, மண்ணில் கால் பதியா மா நபீ, கல்லில் கால் பதிந்த காதமுன் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்,
لَا تَسُبُّوا الدَّهْرَ فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ
காலத்தை ஏசாதீர்கள். காலம் என்பதும் அல்லாஹ்தான் என்றும்,
لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الْأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللهِ
நீங்கள் ஒரு கயிறை கையில் எடுத்து அதன் ஒரு தொங்கலை கையால் பிடித்துக் கொண்டு அதன் மறு தொங்கலை பூமியை நோக்கித் தொங்கவிட்டால், அத் தொங்கல் அல்லாஹ்வில் விழும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
 
இன்னும் குணங்குடி அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்கள்,
 
ஊனாகியூனிலுயிராகி யெவ்வுலகுமா
யொன்றாயிரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி
ஊருடன் பேருமாகி
கானாகி மலையாகி வளை கடலுமாகி மலை
கானக விலங்குமாகி
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளி
கண்ட பொருளெவையுமாகி
நானாகி நீயாகி யவனாகி யவளாகி நாதமொடு பூதமாகி
என்று பாடியுள்ளார்கள்.
 
மேற்கண்ட பாடல்களும், நபீ மொழிகளும் எல்லாமாய் வெளியாகி காட்சியளிப்பவன் அல்லாஹ்தான் என்ற தத்துவத்தை திட்டவட்டமாக கூறுகின்றன.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments