Sunday, April 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் “அர்ஷ்”என்ற இடத்திலேயே உள்ளான்? இது முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் கூற்றா? இலங்கையில் பிரசித்தி பெற்ற...

அல்லாஹ் “அர்ஷ்”என்ற இடத்திலேயே உள்ளான்? இது முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் கூற்றா? இலங்கையில் பிரசித்தி பெற்ற ஒரு வஹ்ஹாபியின் கூற்று!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என்ற கேள்விக்கு “அர்ஷ்”ல் தான் இருக்கிறான் என்று வஹ்ஹாபீகள் முதலில் சொன்னார்கள். தற்போது “அர்ஷ்”க்கு அப்பால் உள்ளான் என்று சொல்கிறார்கள். அவன் இருப்பதற்கு இடமுமில்லை, தலமுமில்லை என்று “ஸுன்னீ”கள் சொல்வர். அவன் எல்லாத்திலும் உள்ளான் என்று “ஹுலூல்”, “இத்திஹாத்” கொள்கைவாதிகள் சொல்வர். அவன் எல்லாமாயும் உள்ளான் என்று சூபீ மகான்கள் சொல்வர். அல்லாஹ் என்று ஒருவனும் கிடையாதென்று “முல்ஹிதீன்” நாத்திகர்கள் சொல்வர்.
 
இவ்வாறு பல்வேறு கொள்கை உடையவர்களும் சொல்வர்.

அல்லாஹ் “அர்ஷ்”ல் உள்ளான் என்றும், அதற்கப்பால் உள்ளான் என்றும் வஹ்ஹாபிகள் சொல்வது முற்றிலும் பிழையாகும்.
அவனுக்கு இடமுமில்லை, தலமுமில்லை என்று “ஸுன்னீகள்” சொல்வது சரியாயினும் அவர்கள் தீர்க்கமான முடிவு இல்லாதவர்களாக உள்ளார்கள். இவர்கள் ஸுன்னீகளாயினும் இவ்விடத்தில் சரியான இடத்திற்கு வரவில்லை.
அவன் எல்லாவற்றிலும் உள்ளான் என்று “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைவாதிகள் சொல்வது முற்றிலும் பிழையாகும்
அல்லாஹ் என்று ஒருவன் இல்லை என்று நாத்திகர்கள் சொல்வது முற்றிலும் பிழையாகும்.
 
அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான் என்று சூபீ மகான்கள் கூறுவது 100% சரியானதாகும்.
அல்லாஹ் “அர்ஷ்”ல் உள்ளான் என்று நீண்ட காலமாக வஹ்ஹாபீகள் சொல்லி வந்தார்கள். சூபீகளான நாங்கள் இதை ஆதாரங்களுடன் மறுத்து பேசியும், எழுதியும் வந்த பிறகு அவன் “அர்ஷ்”ல் இல்லை. “அர்ஷ்”க்கு அப்பால் உள்ளான் என்று கூறுகிறார்கள். இந்த அப்பாலும் பிழை தான், அவர்கள் இப்பால் என்று சொன்னாலும் அதுவும் பிழை தான். அவர்கள் எப்போது அவன் “அர்ஷ்” ஆகவும் உள்ளான் என்று நம்புகிறார்களோ அப்போதுதான் அவர்களை அல்லாஹ் يَا عِبَادِيْ எனது அடியார்களே! என்று அழைப்பான்.
 
சில நாட்களுக்கு முன் யாரோ ஒரு வஹ்ஹாபீ, குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை றழியல்லாஹு அன்ஹு அவர்களே “அல்லாஹ் “அர்ஷ்”ல் உள்ளான் என்று பகிரங்கமாக சொல்லி இருக்கும் நிலையில் அவர்களின் “தரீகா” வழி செல்பவர்கள் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது என்று கூறினார்.
 
இவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நான், இவர் பற்றி எனது நண்பர்களிடம் விசாரித்த போது இவர் ஒரு மன நோயாளி என்று ஒருவரும், அவர் ஒரு “பொன்ட்ஸ்” என்று இன்னொருவரும் கூறினார்கள். அவர் யாராயிருந்தாலும் அவர் அறியாத விடயத்தை அவருக்கு அறியப்படுத்தும் நோக்கத்திலும், அவரின் உரையைக் கேட்டு வழி தவறியவர்கள் நல்வழி பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் பின்வரும் விடயத்தை எழுதுகிறேன்.
 
يقول الشيخ عبد الوهّاب الشعراني رحمه الله فى الجزء الأوّل من كتابه اليواقيت والجواهر: رأيت فى كتاب البهجة المنسوبة لسيّدي الشيخ عبد القادر الجيلي رضي الله عنه، ما نصّه:اعلموا أنّ عباداتكم لا تدخل الأرض، وإنّما تصعد إلى السّماء، قال تعالى ‘ إليه يصعد الكلم الطيّب والعمل الصالح يرفعه ‘ فرُبَّما سبحانه وتعالى فى جهة العُلو، الله على العرش استوى، وعلى الْمُلْكِ احتوى، وعلمُه محيط بالأشياء ، بدليل سبع آيات فى القرآن العظيم فى هذا المعنى، لا يمكنني ذكرها لأجل جهل الجاهل ورَعُونَتِه، انتهى كلام الشّيخ محي الدين،
فلا أدري أذلك الكلام دُسَّ على الشيخ فى كتابه أم وقع ذلك فى بدايته ورجع عنه لمّا دخل فى الطّريق، فإنّ من المعلوم عند كلّ عارف بالله تعالى أنّه تعالى لا يَتَحَيَّزُ، والشيخ قد شاعت ولايته فى أقطار الأرض، فيَبْعُد من مِثلِه القولُ بالجهة قطعا،
குத்புஸ்ஸமான் அஷ் ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹீமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானீ அவர்களின் நூல் என்று சொல்லப்பட்ட “அல்பஹ்ஜா” எனும் நூலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்ததை நான் கண்டேன்.
 
(நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! உங்களின் வணக்கங்கள் பூமிக்குள் செல்வதில்லை, அவை வானத்துக்கே ஏறுகின்றன. அல்லாஹ் திருக்குர்ஆனில் “நல்லவை அவனளவிலேயே ஏறுகின்றன. நல்லமல் அதை உயர்த்துகிறது” என்று கூறியுள்ளான். எங்களின் இரட்சகனான அல்லாஹ் மேல் திசையிலேயே உள்ளான். அல்லாஹ் “அர்ஷ்” மீது உள்ளான். ஆட்சியின் மீது சூழ்ந்து கொண்டான். அவனின் அறிவு சகல வஸ்துக்களையும் சூழ்ந்துள்ளது. இதற்கு திருக்குர்ஆனில் ஏழு வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன. அறிவிலியின் அறியாமையாலும், அவனின் எதிர்ப்பை முன்னிட்டும் அவற்றை இங்கு எழுதுவதற்கு எனக்கு சாத்தியமாகவில்லை)
மேற்கண்டவாறு குத்பு நாயகம் சொன்னதாக “அல் பஹ்ஜா” எனும் நூலில் எழுதப்பட்டிருந்ததை நான் கண்டேன். இத்துடன் குத்பு நாயகம் அவர்களின் பேச்சு நிறைவு பெற்றுவிட்டது.
 
குத்பு நாயகம் அவர்களின் பேச்சு பற்றி இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஅறானீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(குத்பு நாயகம் சொன்னதாக சொல்லப்படுகின்ற மேற்கண்ட பேச்சு எதிரிகளால் அவர்களின் நூலில் திணிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவர்கள் “தரீகா” வழியில் செல்வதற்கு முன் அவர்களால் எழுதப்பட்டதா? என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் இறைஞானிகளிடம் அறியப்பட்ட விடயம் என்னவெனில், அல்லாஹ்வுக்கு இடம், தலம் இல்லை என்பதே ஆகும். குத்பு நாயகம் உலகப் பிரசித்தி பெற்ற ஒலித்தனம் உள்ள ஒரு மகான் ஆவார்கள். இத்தகைய மகான் மேற்கண்டவாறு சொல்லியிருக்க முடியாது)
 
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஅறானீ அவர்களின் கருத்து நிறைவு பெற்றது.
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஅறானீ அவர்களின் கருத்தின் படி “அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் உள்ளான்” என்ற செய்தி அவர்களின் எதிரிகளால் அவர்களின் குறித்த நூலில் ஊடுருவல் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது குத்பு நாயகம் “தரீகா” வழியில் சேருமுன் அவ்வாறு எழுதிவிட்டு, “தரீகா”வுக்கு வந்தபின் அதை வாபஸ் பெற்றிருக்கலாம் என்று தங்களின் கருத்தை கூறியுள்ளார்கள்.
 
காத்தான்குடி அப்துர் றஊப் ஆகிய நான் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஅறானீ அவர்களிடம் அறிவுப் பிச்சை எடுக்க வேண்டியவனாவேன். அவர்களின் பாதணியின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற கரு மண்ணுக்கும் தகுதியற்றவனாவேன். அவர்களையும் “ஹிகம்” எனும் சூபிஸ நூலை எழுதிய இப்னு அதாயில்லாஹ் அவர்களையும் ஒரே இடத்தில் கனவில் காணும் பாக்கியம் பெற்றவனும் ஆவேன்.
எனினும், அவர்கள் கூறிய இரண்டு காரணங்களில் இரண்டாவது காரணத்தை என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது. அவர்கள் தங்களின் ஆரம்ப காலத்தில் அவ்வாறு எழுதிவிட்டு பின்னால் தரிக்கா – சூபிச வழியில் கால் வைத்த பின் முதலில் தாங்கள் எழுதியதை வாபஸ் பெற்று இருக்கலாம் என்ற ஷஅறானீ அவர்களின் கருத்தை என்னால் சரி காண முடியாதுள்ளது.
 
ஏனெனில் குத்பு நாயகம் தங்களின் தாயின் வயிற்றில் இருந்த கால கட்டத்திலேயே “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்றவர்கள் என்பதற்கு பல வரலாறுகள் சான்றுகளாக உள்ளன. ஆகையால் இமாம் ஷஅறானீ அவர்கள் கூறும் இரண்டாவது கருத்தை என்னால் சரி காண முடியாதுள்ளது. அவர்களின் அடக்கவிடத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் இதற்கான விளக்கத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இன்ஷா அல்லாஹ்!
 
எனினும் அவர்கள் முதலில் கூறிய காரணத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
நபீமாருக்கு பொறாமைக்காரர்கள் இருந்தது போல் வலீமாருக்கும் பொறாமைக்காரர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் உலமாஉகளாகவே இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். உலகில் தோன்றிய வலீமார்களிற் பலர் எதிரிகளால் கொல்லப்பட்டதற்கு பிரதான காரணிகளாக இருந்தவர்கள் சூபிச ஞானம் தெரியாத போலி உலமாஉகளேயாவர். இவர்கள் நயவஞ்சகர்கள். இருட்டடிப்பு செய்பவர்கள். இன்று வரை செய்து கொண்டே இருப்பார்கள். போலிகளான இவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள். இவர்கள் குறித்தே எம்பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் “எனது உம்மத் சமூகத்தவர்களில் الأئمّة المضلون வழி கெடுக்கும் உலமாஉகளை நான் பயப்படுகின்றேன்” என்று சொன்னார்கள் போலும்.
 
எனது இறுவெட்டுக்களை கேட்டு ஞானம் கற்றவர், என்னை குத்பு என்று தனது மாணவர்களிடம் சொன்னவர், என்னிடம் “பைஅத்” எடுக்கலாமா? என்று கேட்ட மாணவர்களுக்கு அவரிடம் பெறாமல் யாரிடம் பெறப் போகிறாய்? என்று கேட்டவர், முன்னூற்றுக்கும் மேற்பட்ட உலமாஉகளுக்கு மத்தியில் மேடையில் வீற்றிருந்த என்னைப் பகிரங்கமாக சுட்டிக் காட்டி “இந்தச் சீதேவிக்கல்லவா “முர்தத்” என்று “பத்வா” கொடுத்துவிட்டார்கள்” என்று “பத்வா” வழங்கிய உலமாஉகளை பகிரங்கமாகச் சாடியவர், றஊப் மௌலவீ வழிகேட்டில் இருக்கிறார் என்று அவரைப் பற்றி நான் பேசுவதற்கு “தரீகா”வின் ஷெய்குமார்களில் அவர் வழிகேட்டில் இருக்கிறார் என்று “பத்வா” வழங்கியது யார் இருக்கின்றார்? என்று சீற்றத்தோடு பேசியவர், “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்பது சரியான கொள்கை என்றும் பேசியவர் இறுதியில் தடம்புரண்டாரே இவர் யார்? ஆலிமா? இல்லையா? இத்தகைய ஆலிம்கள் குறித்தே பெருமானார் அவர்கள் மேற்கண்டவாறு சொன்னார்கள் போலும்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல!
 
ما كل سوداء تمرةً – ما كل حمراء جمرة
بالملح تصلح ما تخشى تغيره – فكيف بالملح إن حلّت به الغير
 
முற்றும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments