Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்?

இஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்?

தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)

இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை ஆயினும் இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளார்கள் அவை அனைத்தும் எதற்காக நடந்தன ? என்ற வினா எழுகின்றது. அதற்கான விடையை அறிந்துவைத்திருப்பது இஸ்லாம் பற்றிய சரியானபுரிதலுக்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.

நாடுகளை பிடிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?

தனது நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்காக, மற்றைய நாடுகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் நடத்தவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் போர் “பத்ர்” என்றழைக்கப்படுகிறது.
இந்த போர் வலிந்து எதிரிகளால் தொடுக்கப்பட்டது. மக்காவாசிகளின் வர்த்தகக்குழுவினர் சிரியா சென்று திரும்பும் போது அக்குழுவினரை வழியில் முஸ்லிம்கள் கொள்ளையிடப்போவதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. இதை அறிந்த குழுவின் தலைவர் அபூஸுப்யான் தனக்கு பாதுகாப்பு தேவை என ஒரு செய்தியை மக்காவுக்கு அனுப்பினார். இக்குழுவினர் மதீனாவின் வழியாகத்தான் மக்காவை அடைய வேண்டும் ஆயினும் வழியை மாற்றி செங்கடல் ஓரமாக மக்காவை அடைந்தனர்.

முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்ட மக்காவாசிகளுக்கு “வர்த்தகக்குழுவினருக்கு பாதுகாப்பு தேவை” என்ற செய்தி நல்ல வாய்ப்பாக இருந்தது. 1000 பேர் கொண்ட படையை திரட்டி மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள். வர்த்தகக்குழுவினர் பாதுகாப்பாக மக்காவை வந்தடைந்து விட்டனர் என்றும் நீங்கள் திரும்பி வந்துவிடுங்கள் என்றும் செய்தி கிடைத்தும் அதை நிராகரித்து பத்ர் சென்று 03 நாட்கள் தங்கி தமது பலத்தையும் வீரத்தையும் நிரூபித்து முஸ்லிம்களை அச்சமடையச் செய்வேண்டும் என பத்ருக்குச்சென்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் சுமார் 313 தோழர்களும், தம்மை தாக்க வரும் எதிரிகளை எதிர்கொள்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். மக்காவிலிருந்து வந்த எதிரிகளை ‘பத்ர்’ எனுமிடத்தில் சந்தித்து போர் புரிந்தனர். சுமார் 1000 பேர் கொண்ட மாற்று மதத்தவர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டனர். எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள்.

நாடுகளை பிடிப்பதும் அவற்றை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம் என்றால் தோல்வியுற்று ஓடியவர்களை விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்து நாட்டைப் பிடித்திருக்க வேண்டும். எதிரிகளின் தலை நகரமான மக்கா வரை சென்று மக்காவை கைப்பற்றியிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகி விடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது.
ஆனால் ‘பத்ர்’ எல்லையைத் தாண்டி அவர்கள் செல்லவில்லை. எனவே நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமல்ல என்பதை இது தெ ளிவாக காட்டுகின்றது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘உம்ரா’ எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றார்கள். ஹூதைபியா எனும் மக்காவுக்கு அண்மையிலுள்ள இடம் வரை வந்து விட்டனர். ஆனால் மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்கு பிடிவாதம் பிடித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாடு பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகி இருக்கும். ஆனாலும் நபியவர்கள் பல விடயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?

மாற்று மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நடத்தவில்லை. அவ்வாறு கட்டாய மத மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் நபியவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

{لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ } [البقرة: 256

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 2:256)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடை செய்கின்றது. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை என வலியுறுத்துகின்றது. எனவே சில நியாயமான காரணங்களுக்காக போர் நடைபெற்று( இந்தக் கட்டுரையில் பின்னால் அந்த காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன) வெற்றியடைந்த பின் அந்த மக்களிடம் நபியவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு அவர்களின் மதத்திலேயே நீடிப்பார்கள்.

மாற்று மதத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

{ وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْلَمُونَ} [التوبة: 6]

இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)

இந்த வசனத்தில் மாற்று மதத்தவர்களில் உள்ள எவரேனும் அடைக்கலம் தேடினால் அவருக்கு அடைக்கலம் கொடுக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

மாற்று மதத்தவர்களிடம் எப்படி நடக்கவேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகின்றது நபி என்பதற்கு இந்த வசனம் சான்றாக அமைந்துள்ளது.

எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?

எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்க்களங்களை நிகழ்த்தவில்லை.

மக்காவில் வெற்றிவீராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழி வாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. பழி தீர்ப்பதற்கான சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்களை நாடு கடத்தக் காரணமானவர்கள், அவர்களின் தோழர்களை கொன்றவர்கள், இஸ்லாத்தை ஏற்றதற்காக சுமையா என்ற பெண்ணின் மர்ம உறுப்பில் ஈட்டியை நுழைத்து கொன்றவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படி பலரும் அங்கே தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து நின்றார்கள்.

அனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்குப் போதுமான சான்றாகும்.
அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ} [المائدة: 8]

ஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்குள்ள வெறுப்பு நீதியுடன் நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

என்று இறைவன் கட்டளையிட்டான். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீதியுடன் நடந்தார்கள். பழிவாங்க வில்லை.

போர்க்களத்தில் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள் நபியவர்கள்.

صحيح البخاري3014 –
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَهُ: أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، «فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ»
ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (நூல் – புஹாரி)

மற்றொரு அறிவிப்பில்

سنن ابن ماجه (2/ 948)
عَنْ حَنْظَلَةَ الْكَاتِبِ، قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرَرْنَا عَلَى امْرَأَةٍ مَقْتُولَةٍ، قَدِ اجْتَمَعَ عَلَيْهَا النَّاسُ، فَأَفْرَجُوا لَهُ، فَقَالَ: «مَا كَانَتْ هَذِهِ تُقَاتِلُ فِيمَنْ يُقَاتِلُ» ثُمَّ قَالَ لِرَجُلٍ: ” انْطَلِقْ إِلَى خَالِدِ بْنِ الْوَلِيدِ، فَقُلْ لَهُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ، يَقُولُ: «لَا تَقْتُلَنَّ ذُرِّيَّةً، وَلَا عَسِيفًا

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், அடிமைகளையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (நூல் – ஸுனன் இப்னு மாஜஹ்)

இதுபோல் நபித்தோழர்களும் போர்களத்தில் நபியவர்களின் வழிகாட்டலைப்பின்பற்றி நடந்தார்கள்.

السنن الكبرى للبيهقي (9/ 152)
18148 – أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ الْمِهْرَجَانِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ جَعْفَرٍ الْمُزَكِّي، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا ابْنُ بُكَيْرٍ، ثنا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ بَعَثَ جُيُوشًا إِلَى الشَّامِ، ……………
، وَإِنِّي مُوصِيكَ بِعَشْرٍ: لَا تَقْتُلَنَّ امْرَأَةً، وَلَا صَبِيًّا، وَلَا كَبِيرًا هَرِمًا، وَلَا تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا، وَلَا تُخَرِّبَنَّ عَامِرًا، وَلَا تَعْقِرَنَّ شَاةً وَلَا بَعِيرًا إِلَّا لِمَأْكَلَةٍ، وَلَا تَحْرِقَنَّ نَخْلًا وَلَا تُغَرِّقَنَّهُ، وَلَا تَغْلُلْ، وَلَا تَجْبُنْ “.

அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவிற்கு படையை அனுப்பிய போது செய்த உபதேசத்தில் போர்க்களத்தில் பெண்களையும், சிறுவர்களையும் முதியவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். கனி மரங்களை வெட்டுவதையும் கட்டங்களை உடைப்பதையும் தடை செய்தார்கள். கால் நடைகளை உணவுக்காகவே அன்றி கொல்வதையும் ஈத்த மரங்களை எரிப்பதையும் தடை செய்தார்கள் (நூல்: ஸுன்னுல் குப்றா )

போர்க்களத்திலும் ஒரு புதிய நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபியவர்களின் உள்ளம் விசாலமானது.
எனவே பழி வாங்குதல் எனும் தீய குணம் அவர்களிடம் இருக்கவில்லை.

எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?

பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள நபியவர்கள் ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை. எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருபோதும் போர் நடத்தவில்லை.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

{ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَلَا تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلَامَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا فَعِنْدَ اللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌ كَذَلِكَ كُنْتُمْ مِنْ قَبْلُ فَمَنَّ اللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوا إِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا} [النساء: 94]

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஸலாமை-(சமாதானத்தை) கூறியவரிடம் (அவரிடம் உள்ள) இவ்வுலக சாதனங்களை (கைப்பற்ற)நாடி ‘நீர் விசுவாசி அல்ல’ எனக் கூறாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)

சமாதானத்தை கூறுபவிடம் சண்டையிடக்கூடாது எனவும் கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்றும் அல்குர்ஆன் தெளிவான கட்டளையிட்டள்ளது. எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய போருக்கு எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவது காரணமாக இருக்க முடியாது. அவ்வாறு இருக்கவுமில்லை

எதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் செய்தார்கள்?

மேற்கண்ட காரணங்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் நடத்தவில்லை என்றால் எதற்காக அவர்கள் போர் நடத்தினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளார்கள்.
தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் (உணவுக்காக) என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். எனவே அவர்கள்போர்செய்ததற்கு பின்வரும் காரணங்கள் இருந்தன.

01. எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக போர் செய்தார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனாவுக்கு வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கூண்டோடு கருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை சந்தித்தார்கள். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாயமாக சிந்திப்பவர்கள் எவரும் இதில் குறை காணமாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் போர் பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.
இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.
நபியவர்கள் தாமாக வலிந்து போர் செய்ய சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இது தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

அதபோல் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போர் உஹதுப் போர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் ‘உஹத்’ எனும் மலை அடிவாரத்தில் நடந்ததால் ‘உஹதுப் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது. இது ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 07-ல் நடந்தது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்துவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்களைக் கடந்து வந்தவர்கள் வலிந்து சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வலிந்து சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எத்தனை நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும் இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள், தமது குடிமக்களின் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபியவர்கள் தாமாக வலிந்து போர் செய்ய சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

போரை முதலில் துவக்கியவர்களே எதிரிகள்தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது

{أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَءُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَوْهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ} [التوبة: 13]

தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) (அல்குர்ஆன் 9:13)

எனவே நபியவர்கள் தற்காப்புக்காக இந்தப்போர்களில் ஈடுபட்டார்கள்

02. இறையாண்மையை பாதுகாப்பதற்காக போர் செய்தார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. ஒரு நாடு சிறியதாயினும் பெரியதாயினும் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால்தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்கா வாசிகளின் அனுமதி கிடைக்காததால் திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறிக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனா எல்லைக்குள் புகுந்து போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்து மீறுபவர்களை வழி மறிக்கவும் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் நடந்துள்ளன. எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தம் விஷயத்தில் எதிர்மறையான நிலையுடையவர்களிடம் இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் தமது நாடுகளில் அனுமதிப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.

03. சொந்த நாட்டை மீட்பதற்காக போர் செய்தார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் (ஹிஜ்ரத்) மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை (சொந்த நாட்டை) மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிக் கொண்டனர்.

{أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ (39) الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ} [الحج: 39، 40]

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு(அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ‘எங்கள் இறைவன் அல்லாஹ்’ என்று கூறியதற்காக அநியாயமாக வெறியேற்றப்பட்டனர். (அல்குர்ஆன் 22:39,40)

தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராட்டமாக இது அமைந்தது.

04. நம்பிக்கைத் துரோகிகளின் சதியை முறியடிப்பதற்காக போர் செய்தார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படி சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அதுபோலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன் மதீனாவைத் யூதர்கள் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலானோர்(மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் முகவர்களாக செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

05. அநீதியழைக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போர் செய்தார்கள்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்த கொள்கை அவசியமானதுதான். ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளை அடிக்கிறான் அப்போதும் அடுத்த விட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினிபோடுகிறான், அப்போதும் கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப்போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று போசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான் தாங்க முடியாத அளவுக்கு கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலையமாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்

{وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا} [النساء: 75]

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ‘எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, அநியாயமான வரி விதிப்புகளை மேற்கொண்டு, பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

இதுவரை கூறிய காரணங்களுக்காக போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று இன்று போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம்.

இவ்வாறு நியாயமான முறையில் நபியவர்கள் நடத்திய போர்களைக் குறை கூற முடியாது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய போர்கள் அடாவடித்தனமான போர்கள் அல்ல. அவசியமான சூழ் நிலைகளில் நடந்தவைகளாகும்.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபியவர்கள் போர் செய்துள்ளனர். இஸ்லாத்தைக் குறை கூற வேண்டுமென்பதற்காகவே இது சம்பந்தமாக சிலர் தப்பான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

உருவ வழிபாட்டை அனுமதிக்காத இஸ்லாம், அதே நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக்கூடாது எனக் கூறுகிறது. இதிலிருந்து இஸ்லாத்தின் நடு நிலையான போக்கை புரிந்துகொள்ள முடியும்.

{وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا} [الحج: 40]

மக்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால், கிறித்துவ, யூத, ஆலயங்கள் மற்றும் இறைவனின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 22:40)

எந்த ஆலயமும் இடிக்கப்படக் கூடாது என்பதை இதன் மூலம் அல்லாஹ் கூறுகின்றான்.

{وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ} [الأنعام: 108]

மற்றவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்களும் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

மற்றவர்கள் கடவுளாக நம்பியிருப்பவற்றை ஏசக் கூடாது என்பதை இதன் மூலம் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்

ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக்கொண்டுள்ள இஸ்லாம், மற்ற மதத்தவர்களுக்கு அநீதி இழைக்க நாடியிருந்தால் இந்த இரண்டு போதனைகளையும் கூறியிருக்காது.

இதுபோலவே, எல்லா விடயங்களில் இஸ்லாம் எவ்வளவு தாராளத்துடன் நடந்திருக்கின்றது என்பதை நடுநிலையாக சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம்.

எனவே இஸ்லாமம் போர் புரிவதை அனுமதித்திருக்கின்றது. ஆனால், அந்தப்போர் தற்காத்துக் கொள்வதற்காக, இறையாண்மையை பாதுகாப்பதற்காக,
சொந்த நாட்டை மீட்பதற்காக, நம்பிக்கைத் துரோகிகளின் சதியை முறியடிப்பதற்காக, அநீதியழைக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போன்ற காரணங்களுக்காக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, போரின்போது கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளையும் இஸ்லாம் முன்வைக்கின்றது: பொதுமக்களை துன்புறுத்துவது,பெண்கள், சிறுவர்கள், முதியவர்களைகொல்வது, தாவரங்கள், நெற்பயிர்கள், தானிய இருப்புகளை அழிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதை கண்டிப்பாக தடைசெய்துள்ளது.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்

{وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ} [البقرة: 190]

மேலும், உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:190)

மேலும் கூறுகின்றான்:

{وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ} [الأنفال: 61]

(நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகி விடும். இன்னும் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்! (அல்குர்ஆன்: 8:61)

இந்த வசனத்தில் சமாதானத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
எனவே, போர் என்பது இறுதியான தீர்வு. தவிர்க்க முடியாத கடினச்சூழலில் மட்டுமே போர் ஆகுமானதாகின்றது. எடுத்ததற்கெல்லாம் சண்டையிடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. தற்காலத்தில் நடைபெறுவதபோல் சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு “அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம்” என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை. இவ்வாறு ஈடுபவர்கள் இஸ்லாமிய வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பயங்கரவாதிகளேயாவர்.

*குறிப்பு இந்தக் கட்டுரையில் இணையத்தளங்களில் வெளிவந்த குறிப்புகள் பொருத்தமான இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்புகளை தந்த இணையத்தளங்களுக்கு நன்றி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments