Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்றஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”,...

றஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃழம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!

தொடர்-04
 
காதிமுக்குச் சொன்ன சுபச் செய்தி
 
குத்பு நாயகம் அவர்களுக்கு “ கழிர் ” என்ற பணியாளர் ஒருவர் இருந்தார். அவரை விளித்த குத்பு நாயகம் ‘கழிரே, நீ மூஸில் (மௌஸில்) என்ற ஊருக்குச் செல்’ உனது முதுகநதண்டில் பிள்ளைகள் உள்ளனர். அதில் முதற் பிள்ளை ஆண் பிள்ளை. அதன் பெயர் முஹம்மது. அப்பிள்ளைக்கு அஜமீ ஒருவர் குர்ஆனை ஏழு மாதத்தில் கற்றுக் கொடுப்பார். அவர் ஒரு குருடர். அவர் பெயர் அலீ அவர் பக்தாதைச் சேர்ந்தவர். பிள்ளை குர்ஆனை ஏழு வயதில் மனனம் செய்து விடும். நீ 94 வருடங்களும் ஒருமாதமும் ஏழு நாட்களும் வாழ்வாய். பின் பாபில் என்ற ஊரில் மரணிப்பாய் என்று உபதேசம் செய்தார்கள்.
குத்பு நாயகம் கூறிய படியே அவரது வாழ்க்கை அமைந்ததாக வரலாறு சொல்கிறது.
 
இதில் மறைவான விடயங்களை குத்பு நாயகம் அறிந்து சொல்லியுள்ளார்கள் என்பது ​தெளிவாகிறது.
 
கண்ணாடி போத்தலினுள் உள்ள பொருள் தெளிவாகத் தெரிவது போல் நான் மறைவான விடயங்களை பார்த்து அறிகின்றேன் என்று குத்பு நாயகம் அவர்கள் சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
ஷெய்கு ஹம்மாதின் கப்றில் நீண்ட நேரம் நின்றமை 
 
குத்பு நாயகம் அவர்கள் தனது முரீதீன்களுடன் சென்ற போது ஷெய்கு ஹம்மாத் (றழி) அவர்களின் “கப்ர்” அடக்கத்தலம் வந்தது. அவ்விடத்தில் கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றார்கள். அவர்களின் பின்னால் அவர்களது முரீதீன்களும் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரத்தின் பின் உளம் மகிழ்ந்தவர்களாக அவ்விடத்தை விட்டும் அகன்றார்கள்.
 
ஷெய்கு ஹம்மாதின் கபுறடியில் நீண்ட நேரம் நின்றது பற்றியும், பின் மகிழ்வுடன் திரும்பியது பற்றியும் அவர்களிடம் கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர்கள் நான் அன்றொருநாள் ஜூம்அஹ் தொழுகைக்காக ஷெய்கு ஹம்மாதுடன் ‘ஜாமிஉர் றஸாபஹ்’ ஜூம்அஹ்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆற்றோரமாகச் சென்ற போது ஷெய்கு ஹம்மாத் அவர்கள் என்னை ஆற்றில் தள்ளி விட்டார்கள். நான் ஆற்றில் விழும் போது ஜூம்அஹ்வுடைய சுன்னத்தான குளிப்பை இறுக்குகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டேன்.
 
இன்று அவருடைய கப்றில் அவரைக் கண்டேன். அவர் ஆபரணங்கள் அணிவிக்கப் பட்டிருந்தார். ஆனால் அவரது வலது கை சூகையாகி இருந்தது.
 
உங்கள் கைக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் இது உங்களை ஆற்றில் தள்ளி விட்டதனால் இறைவன் தந்த தண்டனை ! நீங்கள் என்னை மன்னித்து எனது கை சுகம் பெற அல்லாஹ்விடத்தில் கேளுங்கள் என்றார்.
 
நான் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தேன். எனது பிரார்த்தனைக்கு ஐயாயிரம் வலீமார்கள் கப்றுகளில் இருந்து எழுந்து ஆமீன் சொன்னார்கள். நான் பார்த்திருக்கும் போதே அவரது கைக்கு சுகம் கிடைத்தது. அவர் என்னை சங்கையாக முஸாபஹா செய்தார் என்றார்கள்.
 
இச்செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரந்தது ஷெய்கு ஹம்மாதின் தோழர்கள் செய்தி கேட்டு குத்பு நாயகத்தைத் தேடி திரண்டு வந்தனர். ஆனால் இது சம்மந்தமாக யாருமே குத்பு நாயகத்துடன் ​பேசுவதற்கு சக்தியற்று நின்றனர். அப்போது அவர்களை விளித்த குத்பு நாயகம் ‘நீங்களில் உங்களில் நன்நிலையுடைய இருவரைத் தேர்ந்தெடுங்கள் அவர்களின் நாவிலிருந்து உங்களுக்கு உண்மை வெளியாகும். என்றுரைத்தார்கள். உடன் அவர்கள் ஏகோபித்து அவர்களில் ஷெய்கு யூசுப், ஷெய்கு அப்துர் றஹ்மான் ஆகிய இருவரையும் தேர்ந்தனர்.
 
அவ்விருவரையும் குறித்த இடத்தில் நிறுத்திய குத்பு நாயகம் உண்மை வெளியாகும் வரை நீங்கள் இங்கேயே தரிக்க வேண்டும் என்று பணித்தார்கள்.
 
அதன்படி அவர்கள் செயற்பட்ட போது பகைமை நிறைந்திருந்த ஷெய்கு யூசுப் சத்தமிட்டவராக ஓடி வந்தார். எல்லோரும் அவரைச் சூழ்ந்தனர். அவர் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் ஷெய்கு ஹம்மாத் அவர்களை தற்போது எனக்கு காட்டினான். அவர்கள் எனக்கு நீ ஷெய்கு அப்துல் காதிரின் மத்றஸஹ்வுக்கு இப்போது ஓடிச் சென்று என்னைப் பற்றி ஷெய்கு அப்துல் காதிர் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று அங்கிருப்போருக்கு சொல் என்று சொன்னார்கள் என்றார்.
 
பின்பு ஷெய்கு அப்துர் றஹ்மானும் ஓடி வந்து ஷெய்கு யூசுப் சொன்னது போன்றே எத்திவைத்தார்.
 
இதைக் கேட்ட அங்கிருந்தோர் அனைவரும் தவ்பஹ் செய்து குத்பு நாயகத்தின் மாண்பைப் புரிந்து கொண்டனர்.
 
இவ்வரலாறும் மறைவான செய்திகளை அறியும் வல்லமை நபீமார்களைப் போல் வலீமார்களுக்கும் உண்டு என்பதை எடுத்தோதுகிறது.
 
மறைவான விடயங்களை அறியும் வல்லமை அல்லாஹ்வுக்கே உரியது. அது “ தாத்தீ ” எனப்படும். அதேபோல் அவ்வல்லமையை நபீமார்களுக்கும், வலீமார்களுக்கும் இறைவன் வழங்கியுள்ளான். அது “ அதாயீ ”, “ வஹ்பீ ” எனப்படும்.
 
தலையறுந்து விழுந்த பருந்து / கழுகு 
 
ஒரு நாள் குத்பு நாயகம் அவர்கள் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பருந்து / கழுகு பெருஞ் சத்தத்துடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அது அங்கிருந்தோரின் கவனத்தைக் கலைத்தது.
 
உடன் குத்பு அவர்கள் காற்றை விளித்து “ காற்றே இதன் தலையை பிடிங்கி எறி ” என்று கட்டளையிட்டார்கள். பார்த்திருக்கும் போதே அதன் தலை வேறாகி தலை ஒரு பக்கமும் உடல் ஒரு பக்கமும் விழுந்தது.
 
உடன் குத்பு நாயகம் தனது “ குர்ஸீ ” கதிரையிலிருந்து இறங்கி வந்து அதன் தலையை ஒரு கையிலும், உடலை மற்ற கையிலும் எடுத்து பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் என்றார்கள். உடன் அது உயிர்பெற்று மக்கள் பார்த்திருக்கும் போதே பறந்து சென்றது. இருந்தோர் அதிசயம் கண்டு குத்பு நாயகத்தின் மாண்பை உணர்ந்தார்கள்.
 
இறைவன் குத்பு நாயகத்தின் முந்திய சொல்லில் “ முமீத் ” மரணிக்கச் செய்பவன் எனும் திருநாமத்தை வெளியாக்கினான். அது இறந்தது. அவர்களின் பிந்திய சொல்லில் “ முஹ்யீ ” உயிர்ப்பிப்பவன் என்ற நாமத்தை வெளியாக்கினான் அது உயிர் பெற்றது. இதற்கு திருமறையில் அநேக ஆதாரங்கள் உள்ளன. விரிவை அஞ்சி தவிர்ந்தேன்.
 
நனவில் நடப்பதை கனவில் மாற்றியமை 
 
அபூமஸ்ஊத் (றஹ்) சொல்கிறார்கள் :- ஷெய்கு ஹம்மாத் (றஹ்) அவர்களிடம் அபுல் முழப்பர் என்பவர் வந்து “ நான் எழுநூறு தீனார் பெறுமதிமிக்க சாமான்களை முதலீடு செய்துள்ளேன். ஷாம் (சிரியா) நாட்டுக்கு வியாபாரத்திற்காகப் போக நாடியுள்ளேன் ” என்றார்.
 
அதற்கு ஷெய்கு ஹம்மாத் அவர்கள் ‘ நீ போக வேண்டாம் ’ போனால் நீ கொலை செய்யப்படுவதுடன் உனது பணம் பொருள் அனைத்தும் கொள்ளையிடப்படும் என்று சொன்னார்.
 
இதைக்கேட்டு உள்ளம் உடைந்தவராக வரும்போது வழியிடையே ஷெய்கு அப்துல் காதிர் முஹ்யித்தீனைக் கண்டார். இவர்களிடமும் ஷெய்கு ஹம்மாதிடம் சொன்னது போல் சொன்னார். அதைக்கேட்ட குத்பு நாயகம் அவரிடம் “ தத்ஹப் ஸாலிமன் வதர்ஜிஉ கானிமன் ” சாந்தியாகச் சென்று இலாபத்துடன் திரும்பிவா, உன்னையும் உனது பொருளையும் காப்பது எனது பொருப்பு ! என்று நவின்றார்கள்.
 
இதைக் கேட்டு மகிழ்ந்த அபுல் முழப்பர் சிரியா விரைந்து ஆயிரம் தீனாருக்கு தனது பொருளைவிற்றார். பொருளெல்லாம் விற்கப்பட்டு பணமே தன்னிடம் இருந்தது.
 
தனக்கு மலசல கூடம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அங்கு சென்ற அவர் பணத்தை அங்கு வைத்து விட்டு பணத்தை எடுக்காமல் மறந்து வந்து விட்டார்.
 
தனது இடத்திற்கு வந்தவருக்கு நித்திரை மிகைத்தது. உறங்கிவிட்டார். அப்போது ஒரு கனவு கண்டார். தான் ஒரு கூட்டத்தில் நிற்கிறார். திடீரென்று சிலர் வந்து அக்கூட்டத்தவரைக் கொன்று அவர்களது பொருள்களையும் கொள்ளையடிக்கின்றனர். தன்னிடம் கொள்ளையர்களில் ஒருவன் வந்து தன்னை ஆயுதத்தால் அடித்து தான் கொலை செய்யப்படுவது போல் கண்டு கண்ணை விழித்தார்.
 
தனது கழுத்தில் கடுமையாக நோவிருந்தது. கையை வைத்துப் பார்த்த போது இரத்தத்தின் அறிகுறி தெரிந்தது. கவலையடைந்தவராக இருக்கும் போதுதான் தனது பணம் மலகூடத்தில் வைக்கப்பட்டு தான் மறந்து வந்ததை உணர்ந்தார். கவலையுடன் அங்கே ஓடோடிச் சென்று பார்த்தார். பணம் வைக்கப்பட்ட இடத்திலேயே பாதுகாப்பாக இருந்தது. கனவால் கலங்கிய உள்ளம் பணம் கிடைத்ததும் மகிழ்ந்தது. தனது தாயகம் பக்தாதுக்குப் பயணத்தைத் தொடர்ந்தார்.
 
வரும்போது முதலில் யாரைச் சந்திப்பது என்று சிந்தித்தார். சிந்தனையினிடையே பக்தாத் வந்தது. வழியில் முதலில் ஷெய்கு ஹம்மாத் அவர்களையே சந்திக்க நேர்ந்தது.
 
முழப்பரை விழித்த ஹம்மாத் அவர்கள் நீ முதலில் ஷெய்கு அப்துல் காதிர் அவர்களையே சந்திப்பீராக ! உனக்காக அவர் பதினேழு தடவைகள் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
 
அவரது பிரார்த்தனையால்தான் நனவில் நடக்க இருந்த கொலையும், பொருள் கொள்ளையும் கனவில் மாற்றப்பட்டது. என்று நவின்றார்கள்.
 
இவ்வரலாறு விதியை மாற்ற முடியாதினும் அதன் வேகத்தைக் குறைக்கலாம். என்பதும் நனவில் நடப்பதை அவ்லியாக்கள் கனவில் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் என்பதும் தெளிவாகிறது.
 
இதேபோல் இன்னொருவரைப் பார்த்த குத்பு நாயகம் அவர்கள் நீ எழுபது பெண்களுடன் விபச்சாரம் செய்வாய் என்றார்கள். அவனுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. நாயகமே அவை என்னில் நடக்காமல் அல்லாஹ்விடம் மன்றாடுங்கள் என்று பணிவாக வேண்டிக் கொண்டார். குத்பு நாயகம் அவர்கள் அவருக்காக துஆ செய்தார்கள். அன்றிரவு அவர் ஒரு கனவு கண்டார். அதில் தான் எழுபது பெண்களுடன் விபச்சாரம் செய்கிறார்.
 
விழித்தவர் ஓடோடிச் சென்று குத்பு நாயகத்திடம் விளக்குகின்றார்.
 
உனக்காக நான் பிரார்த்தித்தேன். நனவில் நடக்க இருந்ததை இறைவன் கனவில் மாற்றி உன்னைக் குற்றத்திலிருந்து பாதுகாத்தான் என்றார்கள்.

இவ்வரலாறும் விதியை வேறு வடிவத்தில் மாற்றும் வல்லமை அவ்லியாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்பதை வலியுறுத்துகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments