Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்றஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”,...

றஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃழம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!

தொடர்-05
 
எனது பாதம் வலீமார்களின் பிடறியில்
 
குத்பு நாயகம் அவர்கள் ஒருநாள் உரையாற்றுகையில் :- எனது காற்பாதம் உலகிலுள்ள வலீமார்களின் பிடறியில் இருக்கிறது என்று சொன்னார்கள். அவ்வாணையைச் செவியேற்ற எல்லா வலீமார்களும் குத்பு நாயகம் அவர்களின் ஆணைக்குப் பணிந்து தங்களது பிடறியைத் தாழ்த்திக் கொடுத்தார்கள். அப்போது குறாஸான் நாட்டு வனத்தில் தவத்தில் இருந்த கரீபே நவாஸ் ஹாஜாமுயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களும் அதைக் கேட்டு நாயகமே உங்கள் பாதம் எனது பிடறியில் மட்டுமல்ல எனது முகத்திலும் கண்களிலும் பதியட்டும் என்றார்கள்.
 
ஆனால் இஸ்பஹான் தேசத்திலுள்ள அபூபக்ர் எனும் இறைநேசர் மாத்திரம் அவர்களின் ஆணைக்கு அடிபணியவில்லை. அதனால் அவருடைய விலாயத் பறிக்கப்பட்டது.
 
இறுதியில் அவரது நிலை பரிதாபமாகி ஒரு கிறீஸ்த்துவப் பெண்ணை மணம் செய்வதற்காக பன்றியை மேய்க்கும் நிலைக்குள்ளானார்.
 
இறுதியில் அவரது முரீதீன்கள் குத்பு நாயகத்திடம் வந்தழுது அவருக்காகத் துஆ செய்யும்படி வேண்டிக் கொண்டனர். மனமிரங்கிய நாயகம் அவருக்காகத் துஆ செய்தபோது இறைவன் அவரை மன்னித்து குத்பு நாயகத்திடம் அனுப்பி வைத்தான். அவர்களும் அவரை மன்னித்த பின் அவரது நிலை முன்புபோல் மாறியதாக வரலாறு சொல்கிறது. இது யாராயிருப்பினும் ஒரு குத்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 
அகமியம் நிறைந்த அருளுரைகள் 
  • என்னை எனது ஹயாத்தில் கண்டவருக்கே சுபசோபனம்.
  • அல்லது என்னைக் கண்டவரைக் கண்டவருக்கே சுபசோபனம்.
  • அல்லது எனது வபாத்தின் பின் என்னைக் கண்டவரைக் கண்டவரைக் கண்டவருக்கே சுபசோபனம்.
  • சூரியன் தினமும் உதயமாகி எனக்கு சலாம் கூறி நாட்டில் நடப்பன பற்றி எனக்கு அறிவித்தே செல்கிறது.
  • அதேபோல் ஒவ்வொரு வருடமும் என்னிடம் வந்து ஏற்படும் “களாகத்ர் ” பற்றி ஓதிச் செல்கிறது.
  • அதேபோல் மாதங்களும் வாரங்களும் நாள்களும் பல இரகசியங்களை என்னிடம் எடுத்தோதுகின்றன.
  • என் இறைவன் மீது ஆணையாக சீதேவிகளும், மூதேவிகளும் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றனர்.
  • என் கண்களின் ஒளி “ லவ்ஹூல் மஹ்பூழ் ” ஏட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.
  • ·நான் அல்லாஹ்வின் ஞானம் என்ற பல கடல்களில் மூழ்கியுள்ளேன்.
  • கியாம நாளில் நான் உங்கள் மீது அல்லாஹ்வின் ஆதாரமாக இருக்கின்றேன்.
  • நான் நாயகம் (ஸல்) அவர்களின் “ நாயிப் ” பகரமாகவும் பூமியில் அவர்களது வாரிசாகவுமுள்ளேன்.
  • என்னை உண்மை கொண்டோர் உறுதி பெற்றார். என்னைப் பொய்யாக்கியோர் நஞ்சையே உண்டார்.
  • ஷரீஅத் எனும் கடிவாளம் என்நாவில் இடப்படவில்லையானால் நீங்கள் சாப்பிடுவதையும், நீங்கள் உங்கள் வீட்டில் செய்பவற்றையும் நான் அறிவித்திருப்பேன்.
  • நீங்கள் என்முன்னே கண்ணாடிக் குவளைகள் போன்றவர்கள் உங்களின் உள்ளத்தில் உள்ளதை நான் அறிகிறேன். உங்கள் இரகசியங்களை நான் பார்த்தறிகிறேன்.
திறன்கள் 
 
​கௌதுல் அஃளம் அவர்கள் இறை ஞானத்தில் முக்தி பெற்றதுபோல் “ ஷரீஅத் ” சட்டக்கலையிலும் திறன் பெற்றுத் திகழ்ந்தார்கள். யார் எந்த “ மஸ்அலஹ் ” கேட்டாலும் அதற்கு உரிய விடையை உடனளிப்பார்கள். நான் எதையும் அல்லாஹ்வின் “ இல்ஹாம் ” உதிப்பைப்பெற்றே சொல்கிறேன் என்று சொல்வார்கள்.
 
அவர்கள் உபதேசம் செய்யும் வேளை கேள்விகளைக் கேட்டு அவர்களை மடக்கிவிட வேண்டும் என்று வருவோரின் உள்ளக்கிடக்கையை கண்ணாடி போத்தலினுள்ளிருப்பதைப் பார்ப்பது போல் பார்த்தறிந்து அவர்கள் நினைத்த வினாக்களை அவர்களிடமே கேட்டு விடையும் சொல்வார்கள்.
 
அதேபோல் ஒருவர் கௌது நாயகத்திடம் வந்து, நாயகமே என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். என்னவிடயம் என்று கேட்டார்கள் கௌது நாயகம்.
 
நாயகமே, நான் யாருமே செய்திராத வணக்கம் ஒன்றை நான் செய்வேன் என்றும் செய்யாவிட்டால் எனது மனைவி “ தலாக் ” ஆகிவிடுவாள் என்றும் சபதம் செய்தேன். ஆனால் இப்போது பார்க்கிறேன் யாருமே செய்யாத வணக்கம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
 
மார்க்கச்சட்டமேதைகளிடம் சென்று கேட்டேன் எவரும் கை கொடுக்கவில்லை. இப்படியொரு வணக்கத்தைச் செய்யவில்லையாயின் எனது மனைவி தலாக் ஆகிவிடுவாள். நான் என்ன செய்வேன்? அப்படியொரு வணக்கம் இருக்கிறதா? என்று கேட்டார்.
 
அவருக்கு ஆறுதல் சொன்ன கௌதுல் அஃளம் பயப்படாதே ! உனது மனைவி தலாக் ஆகமாட்டாள். நீ கஃபஹ்வுக்குச் செல். கஃபஹ்வில் புடவை போடப்பட்ட நிலையிலேயே எல்லோரும் “ தவாப் ” செய்கின்றனர். நீர் அப்புடவையை அகற்றிவிட்டு தவாப் செய். யாரும் செய்திராத வணக்கத்தைச் செய்தவனாவாய் என்று அருளினார்கள். அவர் நிம்மதியுடன் விடைபெற்றார். கௌது நாயகத்தின் மதிநுட்பம் வாய்ந்த சிந்தனைக்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
 
கடமைகள்
 
கௌது நாயகமவர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். தடுக்கப்பட்ட நாள்களைத் தவிர ஏனைய நாட்களில் நோன்பு நோற்பார்கள். பர்ழான தொழுகைகளையும் உரிய சுன்னத்துக்களையும் நேரத்துக்குத் தொழுது நிறைவு செய்வார்கள். இரவில் நீண்ட நேரம் நின்று வணங்குவார்கள். காலை, மாலை, பகல் வேளைகளில் மாணவர்களுக்கு கல்வியைப் புகட்டுவார்கள்.
 
உடலமைப்பு 
 
கௌது அவர்கள் அதிக உயரம் உடையவர்களுமல்லர், கட்டையானவர்களுமல்லர், நடுத்தர உயரமும் , உடல் நடுத்தர பருமனும் உடையவர்கள் நெஞ்சு விரிவானவர்கள். நிறத்தில் சிவந்தவர்கள். முகம் மிக அழகானவர்கள். அமைதியான நடையுடையவர்கள். அவர்களின் முன்நின்று பேசுவோர் ​பேசிக் கொண்டிருக்கவே விரும்பும் அழகிய குணம் கொண்டவர்கள். தமக்கு எதுவும் இல்லாவிடினும் மற்றவர்களுக்குக் கொடுத்துதவும் தன்மையுடையவர்கள். தன்னுடைய பார்வையினால் இறைபக்தர்களின் பாவங்களை எரிக்கக்கூடியவர்கள்.
 
திருமணம் 
 
கௌதுல் அஃளம் அவர்களது இளமைக் காலம் இறைதவத்திலும், மறைபோதத்திலும் ஈர்க்கப்பட்டிருந்தமையால் திருமணத்தை நினைப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறைபணி செய்து வாழ்வதே பேரின்பமாகக் கருதினார்கள்.
 
இதையறிந்த காருண்யக்கடல், திருமணம் செய்தே ஜல்வத்தில் வாழ்ந்த வள்ளல் நபீ (ஸல்) அவர்கள். கௌது நாயகத்தின் கனவில் தோன்றி, முஹ்யித்தீனே, திருமணம் செய்து கொள்ளுங்கள் உங்கள் ஆன்மீக நெறி சம்பூரணம் பெறும் என்று நவின்றார்கள்.
 
நபீகளின் வேண்டுதலையடுத்து தங்களது 51ஆம் வயதில் நான்கு மனைவியரை மணந்தார்கள். அவர்களின் மூலம் 27 ஆண்களும் , 22 பெண்களும் 49 பேர் கிடைத்தனர்.
 
தமது முனாஜாத் – இறை பணிகளுக்கிடையே தமது மனைவி, மக்களுடன் மகிழ்வதும் குடும்பத்தேவைகளைக் கவனிப்பதும் அவர்களது அன்றாட காரியமாகவும் இருந்தது.
 
நான்கு மனைவியரும், போட்டி பொறாமையின்றி கௌது நாயகத்தின் அன்பில் மிகைத்தவர்களாகவும் அவர்களுக்கு பணிவிடை செய்வதையே தங்களது பணியாகவும் கொண்டார்கள்.
 
கௌது நாயகத்தின் மைந்தர்கள் 
 
கௌது நாயகம் அவர்கள் தங்களது புதல்வர்களை உலமாஉகள் ஆகவே ஆக்கினார்கள். அனைவரும் நஹ்வு, ஸர்பு, பிக்ஹ், தஸவ்வுப், தப்ஸீர், ஹதீஸ், அகீதஹ் மற்றும் கலைகளிலும் திறமை பெற்றுத் திகழ்ந்ததுடன் அனைவரும் “ அவ்லியாஉல்லாஹ் ” இறை நேசர்களாகவே திகழ்ந்தார்கள். தங்களது தேசத்தில் மார்க்கப் பணி புரிந்தது போல் பிற தேசங்களுக்கும் சென்று மார்க்கத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்தார்கள். அவர்கள் சிலரது மஸார்க்கள் கௌது நாயகம் அவர்களின் மஸாறுக்கும் அருகிலேயே அமைந்துள்ளன. அவர்களில் பதின்மரின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம்.
 
  1. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் (றஹ்) அவர்கள்.
  2. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துர் றஸ்ஸாக் (றஹ்) அவர்கள்.
  3. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் (றஹ்) அவர்கள்.
  4. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல்லாஹ் (றஹ்) அவர்கள்.
  5. ஹழ்றத் அஷ்ஷெய்கு முஹம்மது (றஹ்) அவர்கள்.
  6. ஹழ்றத் அஷ்ஷெய்கு ஈஸா (றஹ்) அவர்கள்.
  7. ஹழ்றத் அஷ்ஷெய்கு மூஸா (றஹ்) அவர்கள்
  8. ஹழ்றத் அஷ்ஷெய்கு யஹ்யா (றஹ்) அவர்கள்.
  9. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல் ஜப்பார் (றஹ்) அவர்கள்.
  10. ஹழ்றத் அஷ்ஷெய்கு முஹம்மது இப்றாஹீம் (றஹ்) அவர்கள்.
பிணியும், பிரிவும் 
 
குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்களுக்கு ஹிஜ்ரீ 561 றபீஉனில் ஆகிர் தலைப்பிறையன்றே உடல் நலம் பாதிக்கப்பட்டது.
 
தான் “ தாறுல் பனா ” எனும் பொய்யுலகை விட்டும் “ தாறுல் பகா ” எனும் மெய்யுலகை அடையப்போவதை “ லௌஹூல் மஹ்பூழ் ” விதி ஓதும் பட்டோலையில் எழுதியிருப்பதைக் கண்டு தனது பிள்ளைகளுக்கும், மனைவியருக்கும் தமது முரீதீன்களுக்கும் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள்.
 
அதன்படி முதலில் தனது மனைவி மக்களை அழைத்து இறுதியுபதேசம் செய்து தான் சென்ற பாதையில் செல்ல வேண்டுமென்றும், ஏகத்துவத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்றும் வேண்டினார்கள்.
 
அதேபோல் தமது முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவரையும் அழைத்து இறுதியுபதேசம் செய்து பிரியாவிடை செய்தார்கள்.
 
இவ்வேளையில் அவர்களுக்குப் பிரியாவிடை சொல்வதற்காக மலக்குகளும் அவ்லியாக்களும் சமூகமளித்தனர். அவர்களுக்கு இடமளிக்கும்படி தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் வேண்டிய குத்பு நாயகம் அவர்கள் ஓரிரவும் பகலும் அவர்களுக்கு சலாம் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
 
பின்னர் குளித்து வுழூச் செய்து இஷாத் தொழுகையைத் தொழுதார்கள். அதன்பின் சுஜூதில் இருந்து தனது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், சீடர்கள், முஸ்லிம்கள் அனைவரின் ஈருலக நலன்களுக்காக நீண்ட நேரம் பிராத்தனை செய்து இறைவன் ஏற்றுக் கொண்டபின் சுஜுதிலிருந்து மீண்டார்கள். அப்போது, சாந்தியடைந்து, நிம்மதியடைந்த ஆன்மாவே, உன் இறைவன்பால் மீள்வாயாக ! என்மீது பொருந்தியவராகவும், என் பொருத்தத்தைப் பெற்றவராகவும், என் உண்மையடியார்களில் நுழைவீராக, என் சொர்க்கத்தில் புகுந்து கொள்வீராக ( 89 : 27,28, 29,30 திருக்குர்ஆன்) என்ற திருமறை வசனம் அவர்களது இதயத்தில் ஒலித்தது.
 
என் இறைவன் என்னை அழைக்கின்றான். நான் பயணம் செய்கிறேன். என்று நவின்ற அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று நவின்றவர்களாக தங்களது 91 ஆம் வயதில் ஹிஜ்ரீ 561 றபீஉனில் ஆகிர் பிறை 11 இல் ( கி.பி. 1166 )“ தாறுல் பகா ” என்ற நித்திய உலகை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
 
உலகில் இருந்தே அல்லாஹ்வில் பனாவாகி “கல்வதுல் ஜல்வத்” என்ற மகாமில் வாழ்ந்த அவர்களுக்கு மரணமேது ? அல்லாஹ்வை அடைந்த இறைநேசர்களுக்கு கவலை ஏது ? பயம் ஏது ?
 
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மையும் அவனை அறிந்து வாழ்ந்தவர்களாகவும், அவ்லியாக்களின் வழி நடந்து அவர்களை நேசித்தவர்களாகவும் ஆக்குவானாக !
 
ஆமீன்!
முற்றும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments